Sunday, March 17, 2019

எஞ்சியவற்றில் வாழ்வேன் நான் – புதுவை இரத்தினதுரை

0 comments


சுவடுகள் பதியுமொரு பாதை… 21- பூங்குழலி வீரன் –
நவம்பர் 27. தமிழீழத்தின் தேசிய மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போரில்வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைத்துப் போற்றும் நாளாக அந்நாள் விளங்குகிறது. அன்றைய தினத்தில் மலேசிய மாவீரர் நாள் நிகழ்வில் வழக்கம்போல் நானும் பங்கெடுத்திருந்தேன்.
“மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! என்ற மாவீரர் நாள் பாடல் என்னை வந்தடைந்திருந்த போது இப்பாடலை எழுதிய புதுவை இரத்தினதுரை என் நினைவுகளுக்குள் வந்திருந்தார்.
புதுவை இரத்தினதுரை யாழ்ப்பாண மாவட்டம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். கவிஞர், சிற்பக்கலைஞர், தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுத்துறையில் முக்கியபங்காற்றியவர் என எண்ணற்ற துறைகளில் ஆளுமை நிறைந்தவர்.
வானம் சிவக்கிறது, ஒரு சோழனின் காதற் கடிதம், நினைவழியா நாட்கள், இரத்த புஷ்பங்கள், உலைக்களம், பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் போன்றவற்றை இவரது படைப்பிலக்கியங்களாக நாம் கவனத்தில் கொள்ளலாம்.
“ஊர் பிரிந்தோம்
ஏதும் எடுக்கவில்லை
அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
பருப்பு, இரண்டுபாய், இருமல்மருந்து,
மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,
காற்றுப் போய்க் கிடந்த மிதிவண்டி,
காணியுறுதி,
அடையாள அட்டை அவ்வளவே,
புறப்பட்டுவிட்டோம்.
இப்போ உணருகிறேன்
உலகில் தாளாததுயரெது?
ஊரிழந்து போதல்தான்.”
இந்த கவிதையை வாசிக்கின்ற போது மிக அண்மையில் படித்த ஓர் ஆப்பிரிக்க அகதியின் கவிதை நினைவுக்கு வருகிறது. அந்த கவிதை இப்படியான ஒரு காட்சிப்படுத்தலோடு இருக்கிறது. “புலம்பெயர்ந்து நாங்கள்இங்கு சிந்தியிருக்கிறோம் ஆப்பிரிக்க நினைவுகளுடன். ஆனாலும் வாய்திறந்து ஒரு பாடல் கூட பாட முடியவில்லை. கடலென வழிகிறது கண்ணீர். நினைவுகள் முழுக்க தாய்நாடும் போற்றி வாழ்ந்த வீடுமாக மட்டுமேஇருக்கிறது.ஒரு பாடல் கூட பாட முடியாத இந்த நாட்டை விட்டு ஓடி வந்துதன் தாய்நாட்டிடம் சரணடைந்து விடவேண்டும்” என்பதாக முடிகிறது அந்த கவிதை.
புலம்பெயர்தலும் ஊரிழத்தலும் உயிரை இழப்பதற்கு சமமானதாகவே மனிதன் உணர்கிறான் அவன் யாராக இருந்தாலும் சரி. வாழ்ந்த இடத்திலிருந்து வேலை விடயமாகவோ அல்லது பிற காரணங்களுக்கு வேறொரு இடத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருக்கும்போதே எப்போது வீடு திரும்புவோம் என மனதை அரிக்கும் அந்த உணர்வுக்கே நம்மால் பதில் சொல்ல முடியாத பொழுது ஊரிழத்தலையும் புலம்பெயர்தலையும் எப்படி கற்பனைக்குள் கொண்டு வர முடியும்?
நடைப்பிணமாக மட்டுமேவாழ்கிறேன் என எப்போதும் சொல்வார் என் ஈழத்து நண்பரொருவர். எப்போது தொடர்பெடுத்தாலும் ஈழத்தைப் பற்றி மட்டுமே பேசுவார் ஒழிய தான் இப்போது இருக்கிற எழில்மிகு ஐரோப்பிய நாடு குறித்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். நானாக கேட்டாலும் கூட அதைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதாகவே இருக்கும் அவரது பதில். பலவேளைகளில் எங்கு நமது வேர் பரப்பப்பட்டிருக்கிறதோ அதை நோக்கிதான் நமது உயிரும் மனதும் அலைந்துகொண்டிருக்கிறது சாகும் வரை.
சும்மா காற்றில்பற்றியா இந்தத் தீ மூண்டது?
இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
எத்தனை பேரைத் தீய்த்து
இந்த தீ வளர்த்தோம்.
எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
அணைய விடக்கூடாது
ஊதிக்கொண்டேயிரு.
பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்
ஊதுவதை நிறுத்தி விடாதே.
இந்தத் தீயின் சுவாலையிற்தான்
மண்தின்னிகள் மரணிக்கும்.
அரைநூற்றாண்டுக்கும் மேலாக நடந்து, நடந்து முடிந்ததாக அறிவிக்கப்பட்ட இன்றுவரை நடந்து கொண்டிருப்தாகவே அறியப்படும் தமிழீழத் தனியரசுக்கான போர் அவ்வளவு எளிதாக தொடங்கிவிடவில்லை. அது ஒரு விபத்தாகவும் நிகழ்ந்துவிடவும் இல்லை. மிகுந்த அவதானத்துடன் திட்டமிட்டு அப்போராட்டம் தொடங்கப்பட்டது.தொடங்கப்பட்ட வேகத்துடனே முடிந்து போன எத்தனையோ போராட்டங்கள் இருக்கின்றன. ஈழப்போர் அப்படியன்று. அதன் ஒவ்வொரு படிநிலைகளிலும் எண்ணற்ற உயிர்கள் விதைக்கப்பட்டு அதன் இருப்பு ஆலமரமாய் இருந்த காலம் ஒன்று இருந்தது. அதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விடவோ மறுத்துவிடவோ முடியாது.
நோயுண்ணும் உடல் நலித்தும்,
பேயுண்ணும் உணர்வொழித்தும்,
தாய் நிலத்தின் வேதனையை – எம்
தோள் தாங்காதிருக்கும் பாழ் வாழ்வு எங்களது என
வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?
கூடாது… கூடவே கூடாது.
ஈழத்தின் துயரத்தையும் அதை நோக்கிய தனது அக்கறையாகவே தனது பெரும்பாலான கவிதைகளைப் படைத்திருக்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை. ஒரு நாடு போரால் அவதியுறுகிற பொழுது போரில் ஈடுபடுகிற, ஈடுபாடு காட்டாத இரு தரப்பினரும் சேர்ந்தே துன்பங்களை துயரங்களை அனுபவிக்கின்றனர். வாழ்ந்து பழகிய முற்றம், நெருங்கிய உறவுகள், நண்பர்கள், இன்னபிறரின் துயரங்கள், அலைகழிப்புகள், கொடுமைகள், ஊர் ஊராய் அலைந்தது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதிகளானது, கடைசியில் மரணம் என அதிரவைக்கும் பதிவுகளோடுதான் ஈழத்தமிழனின் வாழ்வு…
கால நதிக்கரையில் கால் நனைத்தவாறு
நீள நடக்கின்றேன்.
கரையோரம் என் சுவடுகள் கிடக்கின்றன
கவிதைகளாக.
நாளாந்தமான புதிய விதிகளின்பிறப்பில்
என் கவிதைகளிலும் வேண்டியன நிலைக்க
வேண்டியன அழிந்தும்போக
எஞ்சியவற்றில் வாழ்வேன் நான்.
ஈழப்போரின் கடைசி அத்தியாயத்தில் முள்ளிவாய்க்காலில் சரணடந்ததாக நம்பப்படும் புதுவை இரத்தினதுரை என்ன ஆனார் என இன்றுவரை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் எஞ்சி நிற்கும் அவரது கவிதைகள் அவரை அடையாளப்படுத்தியடியே இருக்கின்றன.

முத்துக்குமரா! -புதுவை இரத்தினதுரை.

0 comments


முத்துக்குமரா!
முகம் தெரியாப்போதினிலும்
செத்துக்கிடக்கின்றாய் எமக்காக
எனவறிந்து
தேகம் பதறுகிறதே திருமகனே!
உந்தனது
ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே
நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ
உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி
நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.
உன் மேனியில் மூண்ட நெருப்பு
உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்
நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.
சின்ன அக்கினிக்குஞ்சே!
உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச்சோதிப்பெருவெளிச்சம்
எமக்குச்சக்தி தரும்
வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும்.
உன் இறுதி மூச்சு
புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.
எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.
தம்பி!
வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.
நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல
எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார்
இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன்.
உன் குரலைக் கேட்கிறேன்.
உன் மூச்சை உள் வாங்குகிறேன்.
இடையில் கடல்கடந்தும் வருகின்றது
உன் சிரிப்பின் ஓசை.
எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
கடலிலே அனுப்பி வையுங்கள்
அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,
கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.
மகனே!
நெருப்பெரியும் தேசத்தை எண்ணி
நெருப்பில் எரிந்தவனே !
உன்நெஞ்சின் உணர்வுகளை வாங்கி
இங்கே உயிர்கள் பிறக்கும்
உன் இறுதி மூச்சை உள்வாங்கி
உயிர்கள் சுவாசிக்கும்
நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்
உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது
ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி
நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.
முத்துக்குமார்,
நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக
யாராவது அவனின் புனித உடலை
எமக்கு பொதிசெய்து அனுப்பமாட்டீர்களா?
இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக
அந்த வித்துடல் வேர் பிடித்து
புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.
தம்பி!
வார்த்தை ஏதும் வரவில்லையே
உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக
தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது
உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து
நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீழத்தமிழ்.
நண்பனே!
முகம் தெரியாத எம்முத்துக்குமார்
உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம்.
நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது
விண் தொட எழும் – அந்த வெளிச்சத்தில்
நாங்கள் ஒளி பெறுவோம்.
என் பிரிய உறவே!
சென்று வருக
திரும்பி வராவிட்டாலும்
நன்றியென்ற ஓருணர்வை
நாம் சுமந்து நிற்கின்றோம்.
பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம்
தமிழீழத்திலிருந்து புதுவை இரத்தினதுரை.


காலத்தின் குரலாக பேசும் புதுவை இரத்தினதுரை.!

0 comments
“புதுவை இரத்தினதுரையின் படைப்பிலக்கியம், தமிழீழ விடுதலைப் போராடடத்திற்கு ஒரு உந்துசக்தியாக இருக்கிறது. கவிதை உலகில் போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பெருமை அவரைச் சாரும் .”
– தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்கள்

வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு.
சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம்.
விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன.
யாழ்ப்பாணத்தில் பதுங்குகுழி வாழ்க்கைக்கும் அவரது கவிதைகள் பழக்கமாயின. விமானத்தின் குண்டு வீச்சுக்களும், பீரங்கிகளின் எறிகணை வீச்சுக்களும் அவரது கவிதைப் பொருளாயின. அவற்றின் படுகொலை வீச்சுக்கண்டு வெம்பி, வெடித்து கோபம் கொண்டு சாபமிட்டன.
யாழ்ப்பாணத்தைவிட்டு விடுதலைப்போரியல் தலைமை இடம்பெயர்ந்த போது புதுவை அண்ணரின் கவிதைகளும் அழுதபடியே சேர்ந்துவந்தன. ஆனால் நம்பிக்கை தளராத வரிகளுடன் விடுதலைக்கனவு குலையாத பாடல்களாய்.
பொருட்தடை, மருந்துத்தடை, போக்குவரத்துத்தடையென எல்லாத் தடையினுள்ளும் கிடந்தழுந்திய எம்மக்களுடன் சேர்ந்திருந்தன புதுவை அண்ணரின் கவிதைகள். வன்னியினுள்ளே நடந்தேறிய விடுதலை வேள்வியில் சேர்ந்தொலித்தன அவரது பாடல்களும்.
இராணுவக் கொலை வலயத்தினுள் பயணிக்கும் இளம் வீரருடன் சேர்ந்து புதுவை அண்ணரின் பாடல்களும் பயணித்தன. எம்மக்களுக்கு ஆறுதல் சொல்லின…… போரிட அழைத்தன….. போரிட்டன….. வெற்றிச் செய்திகளும் சொல்லின…. விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ கட்டமைப்பு, எமது தேசத்து நிலபுலங்கள், மக்களது கலாச்சார வாழ்வியல்கள், தமிழீழப் பெண்களது புரட்சிகர போரியல், சர்வதேச அரசியலுடனான எம்மின வாழ்வு என புதுவை அண்ணரது படைப்புக்கள் பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தை தருபவை.
புதுவை அண்ணரது கவிதைகள், பாடல்கள் பற்றி எம்முள்ளே பேசப்படும் வேளைகளில் “காலத்தின் குரல்கள்” என்று கூறுவேன். எமது விடுதலைப்போர் கடந்து வந்த பாதையின் வீரமும், சோகமும், கோபமும், மகிழ்ச்சியும், பெருமிதமுமென மாறி மாறிய உணர்வுகளைக் கொண்ட காலங்களைக் கடந்துள்ளோம். அந்தக்கால உணர்வுகளின் குரலாக புதுவை அண்ணரின் படைப்புக்கள் பதிவு பெற்றுள்ளன என்பது எனது கருத்து.
புதுவை அண்ணருக்கு வாய்த்துள்ள அற்புதமான கவி ஆற்றலும், அனாசயமான சொல் வளமும் அவரை பெரும் கவிஞர்களது வரிசையில் சேர்த்துள்ளது. இவற்றுடன் அவர் தன்னை இணைத்துக் கொண்ட இல்டசிய வாழ்வும் அவரது படைப்புக்களில் சேர்ந்துள்ளது. இவையே அவரை “காலத்தின் குரலாகப் பேசும்” கவிஞராக ஆக்கியது எனலாம்.
இங்கு நூலுருப் பெறும் உலைக்களம் அவ்வகையில் எழுந்த உணர்வு வரிகளின் தொகுப்பு. அந்தந்த காலத்தய விடுதலைப் போரின் களநிலைகளைத் தழுவிய உணர்வின் குரல்கள்.
இந்த உலைக்களத்தின் சிறப்பு என நான் பார்ப்பது இது வெறும் புதுவை இரத்தினதுரை என்ற தனி ஒருவனின் உணர்வின் குரலாக மட்டும் அமைந்து விடாததுதான். மாறாக உலைக்களத்தை ஆழ்ந்து, விரும்பி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்திப் போகும் உணர்வுகளின் வெளிப்பாடுகளை அவற்றில் காணலாம். போராளி நிலையிலோ, பொதுமகனின் நிலையிலோ அல்லது படித்தவரின் நிலையிலோ, பாமரரின் நிலையிலோ எந்த நிலையில் நின்று பார்க்கும் போதும் அவரவரின் உணர்வின் வரிகளாக உலைக்களம் பொருந்தி வரும்.
ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதமென வர்ணிக்கும் விடுதலைப் போரியல் நடவடிக்கைகள் உலைக்களத்தில் பல இடங்களில் பேசப்பட்டுள்ளன. அந்நடவடிக்கைகளின் பின்னே உள்ள அர்ப்பணிப்புக்களையும், எம்மினத்தின் உணர்வுகளையும், அரசியல் அர்த்தங்களுடன் உலைக்களத்தில் பதிவாக்கியுள்ளார்.
எமது தலைவர் அவர்கள் உலைக்களத்தை ஒவ்வொரு வாரியாக ஏற்றி, இறக்கி, தணித்து வாசிக்கும் வேளையில் அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். சிலவேளைகளில் எனக்கென தனியாகக்கூட தலைவர் அவர்கள் வாசித்து காட்டியுள்ளார். தலைவர் அவர்கள் சிறந்த வாசகர் என்பதற்கு மேலாக உலைக்களத்தின் கருத்தோட்டத்தில் மீதான ஈர்ப்பே அதனை அவரை அப்படி வாசிக்க வைத்திருக்குமென நம்புகிறேன்.
“போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவர்” எனவும், “எம் விடுதலைப் போராட்ட வாழ்வையும், வரலாற்றையும் தமிழீழ இலக்கிய இயக்கத்திற்குள் முதன்மைப்படுத்தி தமிழ்த் தேசிய பிரக்ஞையை விழிப்புறச்செய்ய உழைத்தவர்.” எனவும் எம் தேசியத் தலைவர் அவர்களால் விதந்து பாராட்டுப்பெற்ற புதுவை அண்ணரைப் பற்றி நான் சொல்ல என்னதான் உள்ளது?
இலக்கிய வித்தகரும், பெரும் கவிஞருமான அவரது நூலுக்கு கருத்து எழுதுவதற்கு வாசகன் என்ற தகுதிநிலை போதுமெனக் கூறிய புதுவை அண்ணரது வார்த்தைக்கு கட்டுண்டு எழுதியுள்ளேன்.
எமது விடுதலைப்போர் எதிர்கால மாணவர்களுக்கான ஆய்வுப் பொருளாகும் காலம் வரும். அவ்வேளையில் விடுதலைப் போராட்டம் கடந்துவந்த வரலாற்றுப் பாதையின் போக்குகளையும், இந்த போருடன் வாழ்ந்த மானிடரின் மன உணர்வுகளையும், சொல்லும் பெட்டகமாக உலைக்களம் திகழும் என நம்புகிறேன்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அன்புடன்
ச.பொட்டு அம்மான்
பொறுப்பாளர்
புலனாய்வுத் துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்

புதுவையின் இறுதிக்குரல் முள்ளிவாய்க்காலில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி !

0 comments



2009-04-15 அன்று ஈழக்கவி புதுவை இரத்தினதுரை தமிழ்நாட்டை விழித்து பாடிய கவி இது –
இனி அழக் கண்ணீர் இல்லை !
 


ஈழக்கவி புதுவை இரத்தினதுரை கவிதை வரிகள் -காணொளிகள்

0 comments









போராடும் இனத்தின் கவிஞன் போராட்டத்துடனேயே இருப்பான்

0 comments

பிரபாகரன் அந்தாதி - 12

0 comments


தாழ்ந்தோர்க்(கு) உதவ தகையில்லாச் சீனரும்
பாழ்மன பாகிசுத் தானியரும் –சூழ்ந்தாங்(கு)
உருசிய நாடும் உகந்தவற்றைச் சீய
மிருகத்திற்(கு) ஈவும் விரைந்து! (111)

சீயம் –சிங்கம்.

விரைந்து படையணியை வீணர்க்(கு) உதவும்
திரைமறைவில் இந்திய தேயம் –புரைநெஞ்சர்*
முன்நின்று போர்புரிய முப்படைக்கும் ஆனவரை
பின்நின்(று) உதவும் பெரிது! (112)

புரைநெஞ்சர் –குற்றமுடைய நெஞ்சை உடையவர் (சிங்களரைக் குறித்தது)

பெருவான் வழியே பெரும்போர் புரிந்து
கருமா மனத்தர் களித்தார் –தரையில்
எதிர்நின்று தோற்றங்(கு) எமன்கண்ட தாலே
விதிர்த்திட்ட* தோளர் விரைந்து! (113)

விதிர்த்தல் –நடுங்குதல்.

விரையும் உலங்கூர்தி வீசிடும் குண்டால்
தரையில் தமிழர் தகர்வார் –வரைவில்*
அழிவைப் புரிந்தும் அடங்காக் கொடியர்
பொழிவார் நெடுவான் புகுந்து! (114)

வரைவில் –முடிவில்லாத.

புகலிடம் இன்றிப் புழுங்கிப் புறம்போய்
தகைசால் தமிழிர் தவிக்க –பகைவர்
நவை*யின் வழியினையே நத்தி*க் குமை*செய்(து)
உவப்பார் அவரை ஒழித்து! (115)

நவை –குற்றம்; நத்துதல் –விரும்புதல்; குமை –துன்பம்.

ஒதுங்கிடம் ஆங்கேஎம் ஒண்டமிழர்க்(கு) இல்லை
பதுங்கு குழியில் படுப்பார் –பிதுங்கிக்
குடல்சரிய சாதற்குக் குண்டள்ளி வீசும்
நெடுவானில் வானூர்தி நின்று! (116)

நின்றெதிர்த்துப் போரிடும் நெஞ்சுரம் இல்லாதார்
சென்றுவான் ஊர்திவழி சீரழித்தார் –பொன்றுவான்*
ஈழத் தமிழனதில் இன்பம் அடைந்திடுவான்
சீய*த் தலைவன் சிரித்து! (117)

பொன்றுதல் –இறத்தல், அழிதல்; சீயம் –சிங்கம்.

சிரித்த பிழைப்புப் பிழைப்போர்* சிதற
விரையும் கரும்புலியர் வீச்சில் –எரியும்
அனுரா தபுரம்* அழியத் துடித்தார்
இனியாது செய்குவம் என்று! (118)

என்று முடியுமோ ஈழத் தவர்துயர்
அன்று பிறக்கும் அமைதியிதை –நன்குணராச்
சிங்களர்க்கே நானிலமும் சென்றுதவ போர்க்களத்தில்
எங்களவர்க்(கு) உற்றதுணை யார்? (119)

யாதோர் துணையுமின்றி ஆங்குநீ போர்செய்யத்
தீதோர் வடிவான சிங்களர் –சூதோர்ந்(து)
உனைக்கொன்ற தாய்ச்சொல்லி ஊருக்(கு) உரைத்தார்
நினைக்கப் பொறுக்குதில்லை நெஞ்சு! (120)
- அகரம் அமுதா