Showing posts with label ஈழகாவியம். Show all posts
Showing posts with label ஈழகாவியம். Show all posts

Sunday, March 17, 2019

பிரபாகரன் அந்தாதி - 12

0 comments


தாழ்ந்தோர்க்(கு) உதவ தகையில்லாச் சீனரும்
பாழ்மன பாகிசுத் தானியரும் –சூழ்ந்தாங்(கு)
உருசிய நாடும் உகந்தவற்றைச் சீய
மிருகத்திற்(கு) ஈவும் விரைந்து! (111)

சீயம் –சிங்கம்.

விரைந்து படையணியை வீணர்க்(கு) உதவும்
திரைமறைவில் இந்திய தேயம் –புரைநெஞ்சர்*
முன்நின்று போர்புரிய முப்படைக்கும் ஆனவரை
பின்நின்(று) உதவும் பெரிது! (112)

புரைநெஞ்சர் –குற்றமுடைய நெஞ்சை உடையவர் (சிங்களரைக் குறித்தது)

பெருவான் வழியே பெரும்போர் புரிந்து
கருமா மனத்தர் களித்தார் –தரையில்
எதிர்நின்று தோற்றங்(கு) எமன்கண்ட தாலே
விதிர்த்திட்ட* தோளர் விரைந்து! (113)

விதிர்த்தல் –நடுங்குதல்.

விரையும் உலங்கூர்தி வீசிடும் குண்டால்
தரையில் தமிழர் தகர்வார் –வரைவில்*
அழிவைப் புரிந்தும் அடங்காக் கொடியர்
பொழிவார் நெடுவான் புகுந்து! (114)

வரைவில் –முடிவில்லாத.

புகலிடம் இன்றிப் புழுங்கிப் புறம்போய்
தகைசால் தமிழிர் தவிக்க –பகைவர்
நவை*யின் வழியினையே நத்தி*க் குமை*செய்(து)
உவப்பார் அவரை ஒழித்து! (115)

நவை –குற்றம்; நத்துதல் –விரும்புதல்; குமை –துன்பம்.

ஒதுங்கிடம் ஆங்கேஎம் ஒண்டமிழர்க்(கு) இல்லை
பதுங்கு குழியில் படுப்பார் –பிதுங்கிக்
குடல்சரிய சாதற்குக் குண்டள்ளி வீசும்
நெடுவானில் வானூர்தி நின்று! (116)

நின்றெதிர்த்துப் போரிடும் நெஞ்சுரம் இல்லாதார்
சென்றுவான் ஊர்திவழி சீரழித்தார் –பொன்றுவான்*
ஈழத் தமிழனதில் இன்பம் அடைந்திடுவான்
சீய*த் தலைவன் சிரித்து! (117)

பொன்றுதல் –இறத்தல், அழிதல்; சீயம் –சிங்கம்.

சிரித்த பிழைப்புப் பிழைப்போர்* சிதற
விரையும் கரும்புலியர் வீச்சில் –எரியும்
அனுரா தபுரம்* அழியத் துடித்தார்
இனியாது செய்குவம் என்று! (118)

என்று முடியுமோ ஈழத் தவர்துயர்
அன்று பிறக்கும் அமைதியிதை –நன்குணராச்
சிங்களர்க்கே நானிலமும் சென்றுதவ போர்க்களத்தில்
எங்களவர்க்(கு) உற்றதுணை யார்? (119)

யாதோர் துணையுமின்றி ஆங்குநீ போர்செய்யத்
தீதோர் வடிவான சிங்களர் –சூதோர்ந்(து)
உனைக்கொன்ற தாய்ச்சொல்லி ஊருக்(கு) உரைத்தார்
நினைக்கப் பொறுக்குதில்லை நெஞ்சு! (120)
- அகரம் அமுதா

Monday, March 21, 2011

அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே!

0 comments
இன்று (22.03.2011)



அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே!


நேரிசை வெண்பா

அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே! அன்புருவே!
நின்னையே எந்நாளும்; நெஞ்சினில் – உன்னத
தெய்வமாய்த் தாங்கித் திருவிளக் கேற்றினோம்
செய்யதிரு சேயோன் செயல்!

பருத்தித் துறையெனும் பாங்கான ஊரில்
மருவுதமிழ் மேவு மனையாம் – தருமம்
இயற்றுநல் மெத்தைவீட் டில்லறம் தன்னில்
வியத்தகு சேயானாய் வீறு!

வெற்றித் திருநகராம் வேலவன் வாழ்விடமாம்
கற்றவர் சார்பு கவின்பொழில் – நற்றுயர்
வேதம் ஒலித்திடு வீதி; நிறைமனைப்
பாதம் பதித்தாய் பயன்!

நாற்குணமும் நன்றே நடைபயிலச் செல்வந்த
மேற்குடியிற் றோன்றிடு மெல்லியாய் – சாற்று
கரும்பென இன்புற்ற காரிகையாம் நின்னை
விரும்பியே கைப்பிடித்தார் வேல்!

இல்லற வாழ்வெனும் இன்புறு சோலையில்
நல்லறம் காத்து நயப்புடன் – சொல்லற
நீறுடன் குங்குமம் நெற்றியில் நீக்கமற
வீறுடன் ஈன்றாய்நல் வீரன்!

தனையனைத் தேடியே சர்க்காரும் தோன்றத்
தனியளாய்ப் போராட்டம் செய்தீர் – நனிவுயர்
செல்வனும் ஞானத்தாற் கண்ணுற்றான் விட்டகன்றான்
பல்லாண்டு நீக்கினான் பற்று!

தமிழினத்தின் தாயே! தவத்தின் பயனே!
கமழும் புகழ்கரி காலன் – அமிழ்தன்
முருகனைத் தாங்கிய மூலம்தான் நீயே
அருமகனைத் தேடுகிறோம் ஆய்ந்து!

தற்கொடை செய்தாரெம் சந்தன மேனியர்
அற்புதமே ஆற்றினார் அவ்வண்ணம் – பொற்றுயர்
தாயே விலையிலாத் தானமாய் நின்னுயிர்
ஈய்ந்தாய் உணர்வார் எவர்?

போராட்டம் செய்தோமே புன்மைகள் நீங்கிட
பாராளு முன்றிலிலும் பேசினோமே – சீராளத்
தாயுந்தன் வாழ்விற்காய்த் தட்டித்தான் கேட்டோமா?
வாயுரைப்பில் வல்லவரே வார்!

கொடியவரின் வஞ்சனையாற் கொண்டவனை நீங்கிக்
கடிதெனவே நோயுற்ற காலை – மடிதனில்
தாங்கிடப் பிள்ளையின்றித் தாகத்தில் வெந்தீரே
ஏங்கினார் சேய்களும் இங்கு!

அம்மா! நீயின்றி ஆதவன்தான் ஈங்கேது?
இம்மா நிலத்தின் இணையிலாச் – செம்மலவன்
தோற்றமே ஈழத்தின் தொன்மை வரலாறு
ஆற்றலும் ஆன்றோன் அவன்!

கொற்றவனைப் பெற்றவளே! கோப்பெருந் தேவியே!
நற்றுணையாய் நிற்பாய் நமதினத்தைச் – சுற்றியுள்ள
வஞ்சம் அகற்றும் வலிமை தருவாயே
அஞ்சுதல் இல்லா அணங்கு!

( தேசியத் தலைவராம் எங்கள் கரிகாலனை எம்மினத்திற்காய் ஈன்று புறம் தந்த அன்னை பார்வதி அம்மாளின் முப்பத்தோராவது நினைவு நாளையொட்டி வெண்பாவினாலான இப்பாடல் வெளியிடப்படுகிறது)

-கனடாவிலிருந்து பவித்திரா-

Monday, February 21, 2011

ஒரு புலி வீரனின் கவித் தீ..

0 comments
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghx9j5ThichYL1Cm9x4CAd2RPkDrDq7s8DN6jUNfGX54hPKwbi6WGAqh1OMJJP2Pw3reXxGA3J8qI5lPvkO1ad59K4UMBLKcsZO7YDm9H31a2vrab5z1fuOd1tX5Ighm7e5PlrFwZZyu2d/s1600/kavitee.jpg
உன் மகன்
தமிழீழ விடுதலைப் புலி வீரன்…..

பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால்
பார்வதியானாளா..?
ஐயாயிரம் ஆண்டு தமிழன் வாழ்வை
அழித்தெழுதிய ஆற்றல் வீரன்
பிரபாகரனைப் பெற்றதால்
பார்போற்ற நின்றாளா..?

வீரத்தமிழன் வரலாறு செத்துப்போகா
தியாகத்தை எழுதிய புலிகள்
பாய்ந்தெழுந்த தாய் நிலமானதால்
புகழ்பெற நின்றாளா… ?

அன்று..

தாயிறந்த செய்தி கேட்டு
துறவியாய் தொலைந்த பட்டினத்தாரே
துடிதுடித்து ஓடிவந்தார்
தாய் படுத்த சுடலைக்கு..

நீ பெற்ற பிள்ளை..

மானமுள்ள தமிழனுக்கெல்லாம்
நீயே தாயென்று போற்றி..
இன்று
உன் பிள்ளைகள் உலக முழுதும்
உன் சவக்கட்டில் ஏந்தி
ஊர்வலமாய் போகக் கண்டான்
போய் வா தாயே..

தன்மானம் குலையா தலைமகன்
வேலுப்பிள்ளையுடன்
ஈழத் தமிழினத்துக்காய்
சிறை கிடந்த சீமாட்டி நீ..

நேற்று…

நீ உயிருடன் இருந்தாய்
உன் மகனைத்தேடி
உன் வீடு தட்டியது சிங்கள இராணுவம் !

இன்று…

உயிரிழந்து கிடக்கின்றாய்
உன் மகன் வருவானென்று
ஊர் முழுதும் தேடுகிறது சிங்கள இராணுவம்..!

நீ வாழ்ந்த வீட்டின்
மண்ணெடுத்து வணங்குவான்
இதயமுள்ள தென்னிலங்கை சிங்களன்..!

மகிந்தவுக்கு கம்பளம் விரிக்கும்
மன்மோகனின் இந்தியாவோ
நீ வந்தால் விமான நிலையத்தையே மூடும்.. !
தமிழ் வீரன் எங்கள் கருணாநிதி
நானில்லை ஜெயலலிதா என்று
கோடியாலுக்குள் ஓடி – உன்
விமானம் திரும்பிப் பறந்துவிட்டதாவென
ஓரக்கண்ணால் பார்ப்பார்…!

தள்ளாத வயதென்றாலும்
தன் நினைவிழந்து போனாலும்
உனக்கஞ்சும்
இந்திய மேலாண்மை..

நீ வாழ்ந்த வீடு கிடந்தால்
அங்கும் புலியொன்று பிறக்குமென்று
இடித்துத் தகர்த்தார் இழிஞர்..

தாயே..
ஏனென்று கேட்கிறாயா… ?

நிலத்தின் அடியில் கிடந்தாலும்..
மன்னர் முடியில் கிடந்தாலும்..
வைரம் வைரம்தான்..
நீ எங்கு கிடந்தாலும்
நீ… நீதான்…!
உனக்கிணையுண்டோ உலகில்..!

அம்மா உன் பயணம் ஆரம்பித்துவிட்டது..
அழிந்துபோன சங்கத்தமிழை
ஆக்கித்தந்த அரும்பெரும் பெருமாட்டி
போய் வா..!

ஊறணிச் சுடலையில் உன் தலையில்
சுள்ளென ஒரு நெருப்புச் சுடும்…
நீ மட்டும்
மறந்துவிடாதே…
நீ மட்டும்…
ஒரேயொரு நொடி திரும்பிப்பார்…
உன் மகன்
தன் கடன் முடித்திருப்பான்..

உனக்காக ஒரு சிலை ஊரில் எழும்..!
ஒரு முறை
அதை வந்து பார்…!

முந்தித்தவமிருந்து
முந்நூறு நாள் சுமந்து
அந்தி பகலாய் ஆதரித்த
எங்கள் அம்மா..
போய்வா…!

முன்னையிட்ட தீ முப்புரத்திலே..
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே..
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே..
நானுமிட்ட தீ
மூழ்க மூழ்கவே..

எங்கள் அம்மா – இது
அஞ்சலிப்பா அல்ல
ஒரு
புலி வீரனின்
கவித் தீ.. !

உன் மகன்
தமிழீழ விடுதலைப் புலி வீரன்.

அலைகள்

Sunday, February 20, 2011

என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!

0 comments
எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி
எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட
உலகந் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க - எமக்கு
ஒற்றைத் தலைவனை காலங் - கணித்துப் பெற்றவளே ;

சொந்தம் கடலென மண் நிறைந்தும்
மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி
நிராகரித்த வஞ்சகத்தார் - சுவாசித்த சிறு மூச்சும்
வேண்டாமென விட்டவளே ;

உள் சுட்ட வடுக்கள் பல யிருக்க
இன்னும் தீராத ஏக்கம் வலி வலிக்க
போறாத காலம்பூண்டு - பக்கவாதம் தின்றுத் தீர்க்க
சிங்களனின் சிறையால் கூட செத்தவளே; சீவனைத் தொலைத்தவளே;

கட்டிய கணவன் மடியில் தாங்க
பெற்ற பிள்ளை வீரத் தோளில் சுமக்க
உதிராத பூவும் அழிக்காத பொட்டுமாய்
உறவுகளின் கண்ணீரில் போறவளே ; தனியாக போனாயோ?????

கொல்லிவைக்க நாங்களிருக்கோம்
சந்தனத்தால் சேர்த்து எரிப்போம்
தமிழால் , கவியால், தீ மூட்டுவோம்; போனபின்னே
எல்லாம் செய்வோம் - இருந்தபோது விலகி நின்றோமே; மன்னிப்பாயா????

கட்சி புகழ் வாசனை ஆச்சி
நாற்காலி ஆசை உயிர்வரை பரவிப் போச்சி
உறவெல்லாம் அங்கே இறந்துக்கிடந்தும் – வெள்ளைச்சட்டையே பெருசாச்சி

வெட்கத்தால் அழுகின்றோம், வாழும் வரை தலைக் கவிழ்கின்றோம்;


ஒரு சொட்டுக் கண்ணீரை யேனும் –

உன் அஞ்சலிக்காய் விடுகின்றோம்!!

-----------
வித்யாசாகர்

வீரத்தின் விளை நிலம் விண் நோக்கி போனதுமேன்?

0 comments
அன்னையே தாயே
அழியா புகழ் கொண்ட அற்புதமே!
ஈழத்தின் புள்ளியை பூமிப்பந்தில்
ஈட்டி கொண்டு
எழுத வைத்த ஈகைத்தாயே.

வீரத்தின் விளை நிலமே
விண்ணையும் விஞ்சிய
வீரனை விடுதலைக்கு
ஈன்றெடுத்த வேங்கைத்தாயே,

பாவத்தை அழிக்க வந்த பரவசத்தை
பார் போற்ற பிறப்பெடுத்து
பாலூட்டி வளர்த்த பார்வதியே!

பொக்கிஷமே புண்ணியமே
காலத்தால் அழியாத காவலனாம்
சூரியனை பெற்றெடுத்த
கண்ணகியே,, சொர்ணத்தாயே,,,

நீரையும் நெருப்பையும் நிழலாக்கி
நிமிர்ந்து நின்ற நாயகியே,

சோலை விருட்சம் அம்மா-நீ
சொந்தம் நாங்கள்
துயரம் கண்டாயோ-எம்
நெஞ்சு கனக்க
நிலையகன்று சென்றனையோ,

காற்றானாய்
உன் கண்மணிகள்
கண்ணில் நீரை இறைத்து நின்றோம்-நீ
பாலூட்டி வளர்த்த
எம் தலைவன் பரிதவிப்பான்-அதை
மறந்தாயோ?,

நேற்றோடு இன்று நாள் நகரும்-உன்
நினைவுகள்
என்றும் சங்கமிக்கும்,


கனகதரன்,

Wednesday, January 5, 2011

தெய்வ மகனைத் திருநாட்டிற்குத் தந்தவரே!

1 comments
தை 6ம் நாள் மாதந்தை திரு வேலுப்பிள்ளை அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாளாகும். அதன் பொருட்டு கனடாவிலிருந்து பவித்திரா எழுதிய கவிதை..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWYd5SuJ_VN9mR4H9_RQVMnBq8HrFifSOgrK4dKCnpIGaQu1DADMLg9jSOn6tjmaN5OaIEvh0tQlcWceqVdKY5UxU3msblGAHQiud9_aVbGnmNgIjRmyheK-uVCKVizgtDH-vBX-kHa_Z8/s1600/vel1.jpg
ஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய்
அவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம்
வேண்டித்தான் சென்றீரே விலையில் மாண்பே
விடிவெமக்குத் தூரமில்லை விதியை நொந்தோம்
தாண்டிநாமும் செல்கின்றோம் தடைகள் நீக்கி
சார்புநெறி வகுத்திங்கு இயங்கு காலை
தூண்டிநிற்கும் நல்லறிவினைத் துணையாய்க்; கொண்டு
தூயதிரு வடிபோற்றிப் புனைந்தேன் பாடல்.

கலைமகளாம் எம்தெய்வம் கல்விக்கரசி யென்றும்
களிப்புடனே வீணையிற் கவிமழை பொழிந்திட
அலைமகளாள் நிலம்நோக்கி அகம்குளிர்ந்து நீரடித்து
ஆர்ப்பரிப்பிற்; றிளைத்து அணைத்து மகிழ்ந்திட
மலைமகளாள் மங்கலக் குங்குமமும் மனையும்
மாண்புடைத் திடமும் மேன்மையும் அளித்திட
விலையிலா வீரத்தின் விளைநிலமாய் விளங்கு
வள்ளல்நிறை பதியாம் வல்வைதந்த விறலே!

திருவேங்கடம் வேலுப்பிள் ளையெனத் திகழ்ந்து
சீர்மையுற வாழ்வினைச் செவ்வென நடத்தி
அரும்பெரும் சதிர்தனை அவனியொடு பொருதிய
ஆளுமைப் பேற்றின் அறிவுடை மூலமே!
திருவாசகம் தேவாரம் திருப்பல் லாண்டுநாளும்
தேனாக இசைத்திடு திருமனைத் தலையே!
தருமத்தின் இருப்பே! சான்றுயர் பெரியோனே!
தலைதாழ்த் தியும்தாள் பற்றினோம் ஐயா!

வெண்ணிற ஆடையில் விளங்கு நீறணிந்து
வேதாகம வழிகளில் விற்பனனாய் நின்று
கண்ணியமாய்க் கோவில்செல் காட்சிதனை ஊரார்
கண்களிற் பதித்துக் கையசைத்துக் களிப்புறுவர்
திண்ணிய ஞானத்தில் தெளிந்த சிந்தையில்
தேசுறு தோற்றத்தில் திகழ்திரு வேங்கடரே!
ஏண்ணத்தில் நிறைந்தீர்கள் இவ்வுல குள்ளவரை
இறவாத் தமிழோடு எஞ்ஞான்றும் கலந்திருப்பீh!

நிர்வாக சேவையிற் காணியதி காரியாய்
நீடுபணியாற் றியேழை நெஞ்சங்களை வென்றீர்!
கருமத்திற் கண்ணாகக் கடமை வீரனாகக்
கருணையின் வடிவாக எளிமையின் இருப்பாக
உரையிலே உண்மையும் உறுதியும் உவப்பும்
ஒன்றாகப் பிணைந்து ஒழுக்கத்தை ஓம்பும்.
கரையிட்ட வேட்டியும் காக்கிக்காற் சட்டையும்
கசடறக் கற்றோர் தகமையைக் காட்டும்!

பார்வதி மணாளனே! பக்தியின் திருவுருவே!
பாரதத்;; தலமாம் சிதம்பர வளர்ச்சிக்காய்
ஆர்க்குமிலா உள்ளத்தில் வள்ளலாய் விளங்கி
ஈய்ந்தீரே நிலபுலன் இமயமென உயர்ந்தீரே!
நேர்மையில் நெஞ்சுரத்தில் நின்மகன் நிர்மலனின்
நீண்ட வரலாற்றிற்; பிணைந்த பெருந்தகையே!
பார்போற்றும் பகலவன் கரிகாலன் சேயோனைப்
பெற்றதனாற் சிவனென்றே உமைநா மறிந்தோம்!

தந்தையே! ஏந்தைக்கு நிகரான சான்றோனே!
தானையிற் தனையனுடன் சார்ந்தி ருந்து
முந்திச்செய் தவப்பேறால் ஈன்று புறம்தந்த
முதல்வன்தன் திறமைகளை மெச்சி மகிழ்ந்தீரே!
கந்தகச் சூழலிலும் கலங்கா உள்ளத்தில்
கயவர் முன்சென்று தந்தையென விளித்தீரே!
அந்திமப் பொழுதினிலும் அடங்காப் புலியென
அரசினர்க்குப் பணியாது இன்னுயிர் துறந்தீரே!

வெற்றித் திருமகன் வகுத்த பாதையில்
வீறுடன் தமிழினம் ஏழுந்து நிற்கிறது!
பற்றியுள்ள பகைநீக்கப் புலம்பெயர் இளந்தலை
போராடி நிமிர்கிறார் புறப்படுவார் தாயகம்!
கற்றிடும் கல்வியெலாம் காணும் ஈழத்தின்
கவினுறு வளர்ச்சிக்குக் கொடையென அளிப்பரே!
உற்ற துணையென உண்மையில் திண்மையில்
உழைத்திட என்றும் வாழ்த்தி நிற்பீரே!

தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே!
தேடுகிறோம் செல்வனை! தூதுநீர் செல்வீரே!
பையவே வாழ்விடம் சென்றங்கு பரிதியிடம்
பக்குவமாய் எடுத்துரைத்து விரைந்திடச் செய்திடுக!
ஐயஎம் விடுதலைக்காய் ஆன்றவும் குடும்பத்தின்
ஈகையை ஒருபோதும் உள்ளத்தில் மறவோம்
வையகத்தில் நின்பெருமை வார்த்தையில் நிறைவுறா
வானகத்திலும் வியத்தகு வாழ்வினையே பெறுவீர்!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix9z_vMZSkRGi2V5y7wYa6C3RLtyToCw9L3ppLnoaoDAEZhMKBDVri4Z2V7OLdTy0yfQz44KOJHayDMfIQy-80kE3y7Bc27Ll6t4kIUt5zGb4J22ca5Q_h3Gz0KaTkeeCLe5cPhUydmvof/s1600/vel2.jpg
கனடாவிலிருந்து பவித்திரா
அலைகள்

Monday, January 3, 2011

என் செல்வமே உறங்கு.. உன் அண்ணன் இன்னும் சாகவில்லை….!

1 comments
http://www.alaikal.com/news/wp-content/kavi-flash.jpgஅன்புத்தங்கையே இசைப்பிரியாவே..
உன் உரிந்தமேனியைக் காட்டி
உழுத்துப் போன உலகம்
போர்க்குற்றம் பேச வந்திருக்கிறது..
கோபப்படாதே என்
குலக்கொழுந்தே கொஞ்சம் கேள்..!

என் இரத்தத்தின் இரத்தமே..
என் தமிழ் உதிரக்கொடியில்
ஒட்டிப் பிறந்த ஒரேயொரு உறவே..!

உன் மார்பகங்களை விலத்தி…
பெண்குறியை மூடும் ஆடையை நீக்கி
சிங்கள இராணுவப் பேய் முகர்ந்தபோது.. நீ
பிணமாய்க்கிடந்தாய்…
என் தங்கையே
பிணத்தைப் புணரும்
சிங்களப் பேய்களை
இரத்தம் வழியும் கண்களால்
பார்த்துக் கொண்டிருக்கிறான்..
உன் அண்ணன்..
தாயே
இதுவா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ?
இதைக்காட்டியா யுத்தக் குற்றத்திற்கு
தீர்ப்பெழுதப் போகிறான்..?

அம்மா அன்று
தமிழ்த்தாயை உருவமாய் வரைந்தோம்
ஐம்பெரும் காவியங்களை அவள்
ஆபரணமாய் மாட்டினோம்.
அது தெரியாது..
நாம் போற்றி வளர்த்த தமிழ்த்தாய்
எங்கே என்பார் மூடர்கள்..
தாயே..
அது நீதான் என்பதை
இன்றுவரை அறியான் நம்
தமிழ் மூடன்..!
தாயே இன்று
நீ கிடக்கும் கோலமே
என்னைப் பெற்றாளே அந்தத்
தமிழ்த்தாய்
அவள் கிடக்கும் கோலம் அம்மா..

குழந்தை பெற்ற வலி மாறாத
உன் புண்ணான உடலை
குதறிய நாய்களை
மறக்கச் சொல்கிறான்..
அவனுடன் உறவு கொள்வதே
அபிவிருத்திக்கு ஒரே வழி என்கிறான்
என் இனத்தில் பிறந்த
தேர்தல் நாய்..

என் உடன்பிறப்பே..
உதிரத்தின் உதிரமே உன்
உடலம் கிடக்கும் காட்சியைப்
பார்த்த அண்ணன்
உன்னை அழித்தவன் தரும்
பாயில் படுத்துறங்குவானா ?
எண்ணிப்பார்…?

தமிழ் தமிழென முழங்கும்
தமிழகத்து தறுதலைகளை
அண்ணாவென நம்பி
அலறினாயே
உன் குரல் கேட்டு
கடவுளே ஓடிப் போனான்
ஈழத்தை விட்டு..
தெருவுக்கு தெரு வைப்பாட்டி வைத்து
தினமொரு கதை பேசுவோனால்
வேறென்ன முடியும் தாயே..
தூ..
வேண்டாம் விடு
இதைவிட வேசி வீடு போய்
விடுதலை கேட்கலாம் தாயே..

கரையற்ற கடலைப் பார்த்து
நம்பிக்கை குலைந்து கலகம் செய்த
கொலம்பஸ் கப்பலில் பயணித்த
கோழை மாலுமிகள் போல் இன்று
நம்மினத்திலும் மூடர்கள் மலிந்தனர்
அதுதான்
உன் மரணம் பார்த்தபின்னும் தன்
கடமை உணராது..
ஆளையாள் அடிபடுகிறான்
அடுத்த கப்பலையும் ஆழ்கடலில்
தாழ்க்க முயல்கிறான்..

இதைப்பார்த்த மற்றவன்
இப்படியும் ஓர் இனமென்கிறான்..
இனியென்ன என்ற
இழவு விழுந்த கேள்வியையே
இருபத்து நாலு மணிநேரமும்
ஓய்வின்றிக் கேட்கிறான்..

உன் முகத்தைப் பார்த்த அண்ணன்
உள்ளத்தில் என்ன பதில் வரும்..
தாயே உன் பிணத்தை விற்று
தமிழனுக்கு ஒரு விடிவென்றால்
ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும்
அந்த விடிவு
வேண்டாம் தாயே..!
உன்னை விற்று விடிவு பேசும்
நாயின் படலைக்கு உன்
அண்ணன் போனால்
ஒரு வேசி மகன் செத்துவிட்டானென்று
அவன் பிணத்தை
வீதியில் போட்டு கொழுத்து தாயே !

மானமுள்ள ஒவ்வொரு அண்ணனுக்கும்
இசைப்பிரியா தங்கை..!
மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும்
இசைப்பிரியா தாய்..!
மானமுள்ள தமிழினத்தின்
ஒரேயொரு தேசியக் கொள்கை
இசைப்பிரியா.. !
எங்கள் தேசியக் கொடியின் தேவதை
இசைப்பிரியா..
தங்கையே..!
அநாதையாய் கிடக்கும்
உன் பூவுடலைத் தூக்கி
ஐயோ என் தங்கையே..! என்று
அழுதபடி
கொள்ளி வைக்கிறேன்..
தாயே என்னை நம்பு
தாயே !
என் தங்கையே.. !
உன் பூவுடல் நோகக்கூடாதென்று
வாழைத்தண்டில் வழத்தி
ஈழத்தமிழால் தீ மூட்டுகிறேன்..
என் செல்வமே உறங்கு.. உன்
அண்ணன் இன்னும்
சாகவில்லை….!

அண்ணன் 03.01.2011

Sunday, October 3, 2010

ஈழகாவியம் - 09

0 comments

புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:11 நிகழ்காலம்.
இந்தப் பொழுதின் மாவீரர் நாள்
கார்த்திகை மைந்தர் வணக்கம்!
(அறுசீர் விருத்தம்)

கார்த்திகைக் காலம் இந்நாள்!
கதையொடும் சிதைகள் நின்று
கோர்த்திடும் மைந்தர் பேச்சுக்
கேட்டிடும் நாட்கள் இந்நாள்!
வார்ப்பொடும் பாச நெஞ்சம்
வைத்தவர் உயிரைத் தூவிச்
சேர்த்தவர் ஒளிரும் தேசச்
சிற்பிகள் உலவும் நாட்கள்!

கைகளால் ஏத்தி நின்றோம்!
கனிமொழிப் பாடல் வைத்தோம்!
மைகரை அழியா மங்கை
மண்கரும் புலியாய்ப் போன
செய்களம் சிலிர்க்க நின்றோம்!
செந்தமிழ் அன்னைக் காகப்
பெய்தனர் ஆவி என்னும்
பெருங்கதை பாடு கின்றோம்!

சிந்தனை மண்ணுக் காகி
செயலெலாம் நிலத்துக் காகி
வந்தபே ரியக்க மாகி
வகுத்துயிர் கொடையே ஆகி
பந்தமாய்ப் புலியாய் ஆகிப்
பட்டறைப் பரணி ஆகிச்
சந்தமாய் ஒலியாய் ஆகிச்
சத்தியம் செய்தார் நாட்கள்!

மைந்தரை நினைக்கும் நாட்கள்
மறையாது இருக்கும் நாட்கள்!
சந்ததி சந்த திக்கும்
சரித்திரம் வைக்கும் நாட்கள்!
மந்தியாய் அந்நி யர்க்கு
மகுடியாய்ப் போகா மண்ணின்
வந்தேமா தரமாய் நின்ற
மறவரின் உருகும் நாட்கள்!

இந்தநாள் எழுதாக் கைகள்
இனத்தொடும் கைகள் இல்லை!
வந்தனை செய்யாப் பாடல்
வரலாற்றுப் பாடல் இல்லை!
சிந்தனை செய்யா மாந்தர்
செந்தமிழ்ப் பெற்றோ ரில்லை!
குந்தினோம் சிதையின் முன்னே!
கொஞ்சினோம் எங்கள் கண்ணே!

மாவீரர் போற்றி!

மாவீரர் போற்றி எங்கள்
மண்ணினை முத்த மிட்ட
காவியர் போற்றி! தேசக்
கடவுளர் போற்றி! நெஞ்சின்
ஓவியர் போற்றி! எங்கும்
ஒப்பிலர் போற்றி! உச்சச்
சாவிலும் உயிர்வாழ் கின்ற
சரித்திரர் போற்றி! போற்றி!

கடவுளே நீங்கள் வாழும்
காரிறை நீங்கள்! என்றும்
சடமெனப் போன தில்லைச்
சந்ததி வாழும் தீபச்
சுடரிடும் ஒளியே நீங்கள்
சுதந்திர வீரர் நீங்கள்
வடமென மாவீ ரத்தின்
மைந்தரே நீங்கள்! நீங்கள்!

தூயவன் உங்கள் அண்ணன்
துப்பர வான கண்ணன்
தீயவர் போலே காட்டித்
தேசத்தை விற்று விட்ட
மாயவன் இல்லை! மக்கள்
மனதிடும் சுயந்தன்! உங்கள்
தாயெனப் போதம் வைத்த
தலைவனின் பிள்ளை நீங்கள்!

நேர்த்தியை உமக்கு வைத்து
நும்சிதை கண்ணில் ஒற்றிக்
கார்த்திகைத் தீபம் வைக்கும்
காலமிக் காலம் ஐயா!
வேர்த்திடும் விழிகள் ஆறாய்
விளைந்திடும் கண்ணீர்த் துளிகள்
கோர்த்திடும் இந்த நாளே
குவலயம் எங்கும் தானே!

சாவிலும் போகீர் வீட்டுச்
சந்தெலாம் நிற்பீர் நின்று
பாவிலும் கதைப்பீர்! அம்மா
பாரென அழைப்பீர்! தாய்மை
நோவிலே பெற்ற போதும்
நிலத்திலே நுகத்தைக் ஏற்கக்
காவலே கொண்டீர்! ஊழிக்
கணங்களே வணக்கம் செய்தோம்!

தியாக தீபங்களே எங்கள்
தேச வணக்கம்!

நாடுக ளெல்லாம் நின்று
நமதுமா வீரர்க் காகப்
பாடுதல் செய்யும் காட்சிப்
பாரொடும் விரிகின் றேனே!
கூடுகள் திறக்கும்! தீபக்
கோவில்கள் அழைக்கும்! உங்கள்
ஏடுகள் கதைக்கும் தேச
இனமெலாம் உருகி நிற்கும்!




சாதிகள் பார்ப்ப தில்லைச்
சமயங்கள் பார்ப்ப தில்லைப்
பாதியில் நிற்கும் எந்தப்
பகுப்பெலாம் பார்ப்ப தில்லை!
சீதனம் பார்ப்ப தில்லைச்
செந்தமிழ் பெயரே வைத்துக்
காதலால் மண்ணை மீட்கக்
கனிந்தநீர் இறப்ப தில்லை!

உமக்கிலாத் தீபம் ஒன்றும்
உண்மையிற் தீபம் இல்லை!
உமக்கிடாப் பாடல் ஒன்றும்
இனமிடும் பாடல் இல்லை
உமக்கிடா வணக்கம் ஒன்றும்
ஈழமண் ஏற்ப தில்லை
உமக்கேதான் இந்த நாட்கள்
உறங்காது எங்கள் தில்லை!

வாராண்ட மொழியும் மன்னர்
வளமாண்ட நிலமும் கொண்டு
பாராண்ட சாதி தின்னும்
பகைவனின் வரவைக் கண்டு
போராண்ட வீரர் வேங்கைப்
புலத்திலே பரணி செய்தீர்!
நீராண்டு விழிகள் கொட்ட
நின்சிதை விழுகின் றோமே!

வேலிக்குள் நின்ற நங்கை
வேங்கையாய்ப் புறப்பட் டாளே!
பாளையாய்ச் சிரித்த செம்மல்
பகையொடும் பொருதி னானே!
காளையாய் வசந்தம் பெற்றும்
களப்புலி யாகி னானே!
வேளையிவ் வேளை உங்கள்
விரதமிட் டெழுதும் நாளே!

வரலாறு போற்றும்!
வரலாறு போற்றும்!

எத்தனை மாவீ ரர்கள்!
எத்தனை மாம னிர்தர்!
எத்தனை பற்றா ளர்கள்!
எத்தனை எல்லைக் காப்பர்!
எத்தனை மக்கள் மன்ற
இனத்துணை மனிதர்! மண்ணின்
சொத்தென நின்றார்! ஈழச்
சுதந்திரப் புருடர் தானே!

ஆட்சியால் அழிந்தோம்! யுத்த
அரக்கரால் மடிந்தோம்! தில்லிக்
கேட்டினால் முடிந்தோம்! ரச்சீவ்
குடும்பத்தால் அழிந்தோம்! மண்ணின்
பூட்டிய விலங்கொ டிக்கும்
புலிகளைப் பலதே சத்துக்
கூட்டிய படையே வந்து
குலைத்திடச் சதியே கண்டோம்!

மாவீரர் எங்கள் மண்ணின்
மறவரே! மக்கட் காகச்
சாவீந்த ஈழ மைந்தர்!
சாருயிர்க் கொடையின் வேந்தர்!
நாவேந்தர்! நவயு கத்தின்
நாதமாய் ஒலித்த காந்தர்!
பாவேந்தர்! நாட்டுக் காகப்
படிமமாய் நின்ற மாந்தர்!

தேவாரப் பாடல் வைத்தோம்!
தெய்வமாய்க் கோவில் வைத்தோம்
பூவாரம் தீபம் வைத்தோம்!
புலிகளின் கீத மிட்டோம்!
பாவாரம் சூட்டு கின்றோம்!
பார்த்தவர் சிதையின் வாசல்
நாவாரம் பேச்சுக் கொண்டோம்!
நாயகர் காட்சி கண்டோம்!

விழிகொட்டி ஆறாய் மல்க
விழுந்துமை வணங்கு கின்றோம்!
எழில்முகம் பார்த்து மண்ணின்
இளைஞரும் அணங்கும் வேங்கைப்
பொழில்நிலம் வந்து தித்த
புத்தகம் எழுது கின்றோம்!
வழிசொல்லிப் போனீர் ஆனால்
வரலாறு அழியா தையா!

மடிந்திடப் பாக்கிஸ் தானும்
மதத்தசோ னியளின் நாடும்
முடித்தவன் சீனா என்னும்
மேதினி தடித்த நாடும்
குடித்தவன் அந்நி யத்தின்
கூட்டிய எட்ட னோடும்
முடிந்திடப் போவ தில்லை
மீண்டிடும் உங்கள் நாடே!

இலட்சமாய்க் கொலையே கண்டோர்
இனத்திலெம் மாவீ ரரே!
வலத்தொடும் வந்த மண்ணின்
வதையிலே மடிந்தோர் எல்லாம்
நிலத்தொடும் குருதி யிட்டு
நெஞ்சொடும் நிற்போர் தாமே!
புலத்தொடும் ஒளிரும் தீபப்
பொழுதிது வணக்கம் செய்தோம்!

வெண்பா!

மானிடத்துப் பூங்கரத்தில் மாவீரர் ஆனபின்பும்
வானிடத்தும் போகாராய் வந்துநிற்பார்-ஏனங்கே
என்றுரைப்பார்! நின்றே எணையம்மா! என்றிடுவார்!
சென்றிடவே மாட்டாரெம் சேய்கள்!

ஈழகாவியம் - 08

0 comments

புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:10 நிகழ்காலம்.
தமிழ்நாடு
(அகவல்)


முள்ளிவாய்க்கால் நந்திகடல் முழுவதுமாய் எரிந்துவிழ
சுள்ளிகளும் தீப்பற்றிச் சுடுகாடாய் மாறியதே!
ஒன்றாயும் பத்துமென உயிர்கருகிப் போகையிலும்
சென்றுசிங்க ளத்திற்குச் சேதிசொல்லி வந்துவிட்டு
இந்தியமும் மூக்காவும் இருந்தரைந்த நாடகத்தில்
சந்துகளும் எரிந்துவிழச் சாக்காடாய் மாறியதே!


பாக்குநீர்ச் சந்தியிலும் பலியிட்டுச் சிங்களவன்
மூக்குமுட்ட வந்தாடி முடிச்சிறுக்கிப் போகின்றான்!
ஐந்துநூறு செந்தமிழர் ஆகுபலி யானபின்னும்
இந்தியர்கள் அவர்களென்று இத்தாலி யாளுணராள்!
வருநாளெல் லாமிருக்கும் வருவாய்க்கே என்றவர்தான்
கருணா நிதியென்று கணக்கிட்டார் தில்லியடா!


பாரதியும் தாசனுமாய்ப் பார்புகழும் வள்ளுவரும்
ஆறுபோல் கவியிட்ட அருங்;கண்ண தாசனுமாய்க்
காளிதாசன் தேசிகனும் கார்மறைத் திருமுறையும்
வாளோடும் மலர்விழியாள் மானதமிழ்த் திருக்கரத்தில்
அவ்வைத்தாய் மானவரும் ஐம்பெருங் காப்பியங்கள்
செவ்வனே பாட்டிசைத்த திருக்குலம்தான் தமிழ்நாடு!


செம்மொழியாள் தமிழவளின் தேரோடும் பொற்காலம்
எம்மொழிக்கும் முன்னுதித்து இவள்பிறந்த காரணத்தால்
இலக்கியங்கள் இதிகாசம் எழிலாழ்வார்ப் பாசுரங்கள்
நிலத்தடியில் போனவையும் நெடுங்கடலே விழுங்கியதும்
இன்றுமிருக் கும்மெனிலே ஏழுலக மெல்லாமும்
சென்று தமிழினிக்கச் செம்மொழியாள் நின்றிடுவாள்!


பாவோடு இலக்கியமும் பச்சை நிலமண்ணும்
சாவோடு நிற்குமிந்தச் சரித்திரமே இந்நாட்கள்!
ஆங்கிலமும் அரைத்தமிழும் அரசாட்சித் தமிழ்விற்றுத்
தூங்குமொரு கேடுகண்ட திருநாடு தமிழ்நாடாம்!
வீட்டுக்கு வீடு விளங்கிவரும் தொலைக்காட்சி
ஊட்டுக்கு ஊடு ஓங்குவது ஆங்கிலம்தான்!



சோறென்றாற் தெரியாது சொல்லிடுவார் 'றைஸ்'என்றே
நூறுக்கு 'கன்றெட்டு'ம் 'லெப்ருறைற்' றென்றேதான்
ஏழைபஞ்ச மானிடரும் 'இங்கிலீசு' பேசுகிறார்
கூழைக் குடித்தாலும் கொஞ்சுதமிழ் பேசிநின்ற
காலம்போய் விட்டதம்மா காசுக்கு விலைபோன
கோலத்தார் ஆட்சியிலே கெட்டதடி தமிழ்நாடு!


'ரொமட்டோ'வைக் 'கட்'பண்ணு 'ஒனியனை' 'கட்'டென்றும்
சமையல் பாடத்தைச் 'சன்'காட்சி போட்டதப்பா!
குமட்டை எடுக்கிறதே கோடாம்;பர் நேர்காணல்
குறட்டைபோல் ஆங்கிலமும் கொஞ்சமாய்த் தமிழிருக்கும்!
பிரபாக ரன்னிட்ட பேரீழக் காற்தூசு
கருணாநி தியாட்சியெலாம் காணாது காணாதே!


கல்லக் குடிப்போரில் கழுத்தையே வைத்தவர்கள்
இல்லாத தமிழோடு இடுகின்றார் தொலைக்காட்சி!
ஏழாயி ரத்தாரை ஏன்கொன்றார் என்றமைதிச்
சூழுரைத்து வரவேற்கச் செல்லாத மூக்காவார்
ஈழம் வெடித்தெரிய இவர்மட்டும் தில்லிக்கு
சோழன் குடுமிவைத்துச் சென்றாரே பதவிக்காம்!


குருதிக்கை யானவனைக் கொன்றாடி நிற்பவனை
பருதிப்பொன் னாடையிட்டுப் பக்சருக்குச் சூட்டிவிட்டார்!
முள்ளுமுகா மானகுச்சு முட்டிநிற்கக் காணாமல்
விள்ளும்சா தனைபோலே விமானமொடு வரவேற்றார்!
வேதனையாய்த் தீமூக்கா விளையாடும் காட்சியொடும்
கூதலுக்குத் தீமூட்டும் கொடுக்கரையே கண்டுகொண்டோம்!


ஈழம் எரிந்ததுவும் இலட்சமா யிறந்ததுவும்
பாழாராய் முதல்வர்தான் பார்த்திருந்தார் என்றவடு
நாளை ஈழத்து நாட்சுவடு குறித்திருக்கும்
காலம் இதுவுண்மைக் கணக்கென்றே சொல்லுமடா
இந்தியத்தார் கையில் இரந்துண்ணும் தமிழ்நாடாய்
வந்தவினை தானே வரலாற்றின் வீழ்ச்சியடா!


தான்தலைவர் என்பதற்காய் தமிழீழம் சாகவைத்துப்
பேன்பார்க்கும் இந்தியத்தைப் பொரியாக்கப் பார்த்திருந்த
கருணாநி தியார்க்கும் காலமகள் பழிசுமத்தும்
வரலாறு இனிச்சாகா வந்தபழி வந்ததுதான்!
கழிவான பக்சரொடும் கைகுலுக்கி வருபவரை
அழைத்துவரச் சென்றகதை அறிஞரிடும் செயலாமோ?


பொன்மனத்துச் செம்மலவன் பூரித்துத் தம்பியொடும்
நின்றுபடை சமைத்த நீதியென்றும் சாகாதே!
பிரபாக ரனைத்தான் பெருங்கோடி கொட்டிவைத்து
இரையாகச் சொன்னாரே இரசீவுப் பிரதமராம்!
அரனாக நின்றானே அவன்தானே எம்ஜீயார்
பிரபாவின் உளம்மெதுவோ? பேசென்றான் செம்மலடா!


ஈழம்சா வாயிலிலே எரிந்தெரிந்து மாய்ந்துவிழ
ஆழவலி வேதனையில் ஆருயிரைத் தமிழகத்து
முத்துக்கு மார்முதலாய் மூட்டித்தீ உயிர்கொடுத்தும்
பத்தோடு நான்காகிப் பாசத்தைக் காட்டிநின்றார்!
தொப்புளிலே உறவுற்ற தேசம்தான் வெந்தெரியக்
கொப்பொடிந்து வீழ்வதுபோல் கொட்டியது தமிழகமே!


வைக்கோவும் நெடுமாறன் வரலாற்றில் சீமானும்
பக்கம்ரா மதாசோடும் பாண்டியனும் செயலலிதா
திரையுலகக் கோமான்கள் திரண்டாரே! தமிழீழ
உரைகொடுத்து நின்றழுதும் இந்தியத்துத் தில்லியிலே
ஏதும்சாத் தமிழருக்காய் இம்மிதனும் மாறாமல்
தீதுவைத்துச் சிங்களத்துத் தீக்கையை வளர்த்தனரே!


உணர்வாளர் எல்லோரும், உழக்குமா விந்தியத்தை
சுணையில்லாத் தமிழகத்துச் சென்னையர சாட்சியினை
பழிசெய்த காட்சியெலாம் பகுத்துஉரை கொண்டெழுதி
சுழியினிலே தமிழீழம் துடித்தகதை சொல்லுகிறார்!
என்னினிய தமிழகமே! இதயமிடும் பொன்நாடே!
அன்னைமடி ஆனவரே! அச்சமில்லை நாமெழுவோம்!

என்னரும் தமிழகத்தீர்!
அறுசீர் விருத்தம்


என்னரும் தமிழ கத்தீர்
எரிந்துளீர் ஈழத் திற்காய்!
அன்னைதன் முலைப்பால் தந்த
ஆருடற் தொப்புட் பந்தம்
சொன்னதும் நீர்தான்! பற்றுத்
தெளித்ததும் நீர்தான்! உங்கள்
இன்னுளம் போலே சென்னை
இராசர்கள் இருந்தா ரில்லை!


முத்துகுமார் இளைஞன், சென்னை
முதல்வராம் மூக்கா நெஞ்சில்
செத்திடும் தமிழர்க் காகச்
செய்திடார் எதுவும் என்றே
குத்திய பதைப்பி னாலே
கொழுத்தினான் உடலம் தன்னை!
சத்திலே புழுவாய்க் குத்தும்
தருக்கரைக் காட்டி நின்றான்!


பதின்மூன்று இளைஞர் தீயில்
பற்றியே எரிந்த பின்னும்
சதியொடு சோனி யாளின்
சருகிடும் ஈழ மண்ணின்
விதியொடு வசனம் செய்த
விளையாட்டு என்ன என்போம்?
கதிரையை எண்ணி நிற்போர்
காணரே தமிழன் சாவை!




அரைமணித் துளியே போதும்
அன்னைமண் தெரியும் ஈழம்
இரையெடுத் தழித்தே நிற்கும்
இராசபக் சர்க்கே கந்தச்
சரையொடும் சரிதம் வைத்த
சகுனியாம் சோனி யாளின்
புரையொடும் தமிழ கத்தின்
பித்தர்கள் ஏன்தான் நின்றார்!


எரியவே ஈழம் தன்னை
இந்தியம் விடலா கும்மோ?
கருணாநி தியம்கள் கையில்
கட்டளை இருந்தும் என்ன?
தருணமே பார்த்து ஈழம்
தாரையாய்ச் சிதறிச் சாக
குருடராய் நின்ற மூக்காக்
குலத்தையே மறக்க லாமோ?


இன்றைக்கு என்ன கண்டார்?
ஏந்திளை பகைவர் கையில்
வன்பறிப் பிடவே கண்டோம்!
வாலையர் இளைஞர் சாகக்
கொன்றுளார்! படங்கள் எல்லாம்
குவலயம் சுற்றி வந்தும்
ஒன்றுமே சொல்லார் லங்கா
ஊத்தைக்கே உரைஞ்சு கின்றார்!


அகிலத்தே தமிழர் நின்ற
அணிநாடு எல்லாம் கையில்
முகிலையே நிறுத்தம் செய்ய
முடிந்தவன் பிரபா தானே!
மகிமையாய்த் தமிழன் ஒன்றாய்
வையமெல் லாமும் நிற்க
வகுத்தவன் இவனே! தம்பி
வரலாறே தலைவன் ஆகும்!


துகிலுரி மகிந்த னுக்குத்
தூயபொன் னாடை யிட்ட
பகிடியைத் தலைவன் என்று
பகலவோ? கரிகா லன்னே
அகிலெனத் தமிழன் என்ற
அணிபெறும் தலைவன் ஆகி
வகிடொடும் பிரபா நின்றான்!
வரலாற்றில் இவனே மன்னன்!


மொரீசியஸ் ஆப்பி ரிக்கா
மலேசியா சிங்கப் பூரும்
பிரீதியாய்த் தமிழர் நெஞ்சப்
பெருமிறை ஆன சூர்யன்
சரீரியாய்த் துருவும் பிம்பம்
சந்ததி மைந்தர் கையில்
பரீதியாய் இருக்கு மென்றால்
பிரபனே தலைவன் ஆவான்!


பொன்மன இராமச் சந்தன்
பொறித்தனன் ஈழ மன்றை
அன்றைய அவன்நாள் தன்னில்
ஆறுகோ டியற்றி வைத்து
மன்னவன் பிரபா கையில்
வகுத்தனன் ஈழத் தாரின்
தென்னவத் தலைவன் கண்டோம்!
திரும்பவோர் தமிழன் உண்டோ?


எம்ஜீயார் சொன்னால் ஈழ
எழுச்சியான் பிரபா ஏற்பான்!
தும்பியாய் விழுவான்! என்றே
துடித்தனன் இரச்சீவ் தானே!
அம்பியை அழைத்தான் சந்ரன்!
ஆக்குவுன் எண்ணம் போலே
தம்பியே என்றான்! மண்ணைத்
தரித்தவன் சாய்வான் தானோ?


என்னரும் தமிழ கத்தீர்
இயற்றுவீர் தமிழர் பூமி!
மன்னவன் இராச ராசன்
மானவர் சேர சோழர்
முன்னவர் பாண்டி யர்கள்
வள்ளுவர், கம்பர் அவ்வை
கன்னலாய்த் தமிழாள் நின்ற
காலத்தை எழுது வீரே!


ஈழமே நாடு பெற்றால்
இனியதோர் தமிழ கத்தோர்
ஆழமே பெறுவார் என்ற
அரிச்சலால் மலையா ளத்துப்
பூழைசார் மாந்த ரர்க்குப்
பெருமதிக் காரர் ஆக்கி
வாழவே போரைத் தாங்கி
வந்தநம் மினத்தைக் கொன்றார்!


தந்திரம் செய்து ஈழத்
தனையரைக் கொல்லத் தீக்சிற்
மந்திரம் போட்ட அற்றை
மடக்கையை உடைத்தோம்! ஈழச்
சந்ததி துடைத்த ழிக்கச்
சந்தித்த படையை வென்றோம்!
மந்திகள் பலநா டுற்ற
மழித்தலாற் றானே செத்தோம்!


அமைதிக்குப் படையாய் எம்மை
அழித்தவர், ஈழ முற்றும்
சுமையிட வந்து மண்ணின்
சுருதியை அழித்தார்! வஞ்சத்
தமையெலாம் ஆக்கி வைத்துத்
தந்திர மாகக் கொன்றார்!
இமையொடும் நிற்கும் காதை
ஈழவர் மறப்பர் தாமோ?


தமிழக மக்கள் ஈழத்
தனையரை மதித்தார்! மண்ணின்
கமழ்நிலப் பரணி தன்னில்
காதலே கொண்டார்! சில்லோர்
உமியெனப் பதராய் நின்ற
ஊத்தையாற் றானே ஈழம்
அமிலமாய் எரிய நின்றும்
அசிங்கத்தை எழுதி விட்டார்!


தங்கமே தமிழே ஆக
தந்தவர் பூமி எல்லாம்
அங்கமாய்த் தமிழாய் நின்ற
அறிஞரே! கவிதை யார்க்கும்
உங்களில் ஒருவர் ஆகி
ஈழமண் இதயத் தார்கள்
சங்கமே செய்வார்! வெற்றிச்
சரித்திரம் எழுது வாரே!


வெண்பா!


முத்துகுமார் தீயில் முடித்த பெருங்காதை
கொத்தாய்த் தமிழினத்தைக் கூட்டியதே-நித்திரையார்
மந்தக் கருணர்க்கு மாவீழத் தீவைப்பைச்
சிந்திக்க வைத்தானே செப்பு!


பிற்குறிப்பு:
எம்ஜீயார்-பொன்மனச் செம்மல் எம்.ஜீ.இராமச்சந்திரன்
தீக்சிற்-ரசீவு காலம் இலங்கையில் இருந்த இந்தியத் தூதுவர்
கரிகாலன், சூர்யன்,தம்பி-உலகத் தமிழர் தலைவன் பிரபா
மூக்கா-மு.கருணாநிதி

பதிவு:16-11-2009

ஈழகாவியம் - 07

0 comments

அத்தியாயம்:09 நிகழ்காலம்.
நோர்டிக் நாடுகளும் ஐரோப்பியமும்!
(அகவல்)

கடலும் வானும் கரையும் நிலமும்
உடலை வருத்தி உள்ளமும் நொந்தும்
ஆயிர மாயிரம் இனச்சிற கிழந்தபின்
சேயொடும் தந்தையும் சேர்ந்த அன்னையும்
இருபது நாடுகள் ஏறி இறங்கி
வருவதை ஏற்று வந்து குவிந்தோம்!

நோர்வே, டென்மார்க், சேர்மனி, இற்றலி
கோர்வை யாகவே கொண்டு பிரான்சும்
நேட்டோ என்றும் இரச்சியம் சுவிசும்
கேட்போ ரின்றிக் குதித்துமே விட்டோம்!
தமிழீ ழத்திற் தந்த கல்வியும்
அமிழ்தாய் எங்களை ஆக்கிய தாமே!

ஒசுலோத் தலைமை எரிக்சொல் கெய்ம்மை
வசமாய்த் தீர்வை வகுத்திட வென்றே
பணித்தும் உதவியும் பணக்கடல் இலங்காப்
பிணிக்கெலாம் கொடுத்தார்! புத்த யுத்தரின்
கணிப்பில் நோர்வேக் கணக்கைக் கொழும்பு
திணிப்பாய் எடுத்துத் தீயிலே விட்டதே!

வீடுகள் கண்டோம் நாடுகள் நின்;றோம்
பாடுகள் சிலுவைப் பாரமும் சுமந்தோம்!
ஊடுகள் ஊடாய் உலவிய நாட்களில்
கேடுகள் செய்திடும் கீழரும் கண்டோம்!
நல்லவன் போலவே நடித்த நம்மவன்
கல்லை எறியக் காண்கிறோம் நாமே!

ஆட்டுப் பட்டியில் ஓநாய் வந்ததால்
போட்டுப் புலியாய் பெட்டிசம் எழுதவும்
காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியர்
நீட்டிக் கொண்டும் நிலமெலாம் விரிந்தனர்!
நாடுபல் லாகியும் நாய்ச்சா திகளும்
வாடும் இனத்தில் வராண்டிப் பறித்தனர்!

இறைவனைப் போலே இருகை குவித்துப்
பொறையொடும் நின்று புகுந்து கோவிலைத்
தன்பெய ரோடும் தாங்கி எழுதியே
பின்னவன் இறாஞ்சிய பேடியைக் கண்டோம்!
சுனாமிக் கொடைகளைச் சிக்கிய படியே
பினாமிகள் பெயரால் போட்டதைக் கண்டோம்!

மனைவிமண் ணிருக்க மற்றவள் பிடிப்பான்
துணைவனை விட்டுத் தேடுவள் ஆணை
கனகடல் ஏறிக் கனிந்தபின் மாறி
இனமடல் தீய்த்தார்! இன்னும் பகைவர்
ஆக்கிய குளத்தில் அருஞ்சே றள்ளிய
போக்கிரிக் கூட்டம் புலத்திலும் வந்தார்!

உலகத் தமிழர் இயற்றிய இளைஞர்கள்
அலகை ஈழம் அடுக்கிய வாலிபர்
குளிருக் குள்ளும் கொழுத்தும் வெயிலும்
ஓளியாய் மண்ணுக் குயிர்கொடுத் தவர்கள்
உலகம் முழுதும் ஓங்கிய தாற்தான்
நிலமும் பலமும் நிலைத்தது கண்டோம்!

நாடுகள் போலொரு நாடது செய்யவும்
தேடு மாயுதம் திரிந்து பெறவும்
உலகத் தமிழன் ஓங்கிய கரத்தின்
அலகிலே தலைவன் ஆர்த்தனன் அறிவீர்!
சுழகையே பறித்த செம்மறிச் சில்லோர்
அழகாய் வந்து அடித்தும் போயினர்!

தலைவன் விளக்கம் தாவெனக் கேட்கையில்
புலையர் போயே பொய்யெலாம் சொல்லிப்
பெயர்ந்து வந்ததும் உருவிய காசை
கயமையாய் எடுத்த கள்ளரும் உண்டுகாண்!
ஆனால் ஆனால் அள்ளி இறைத்த
மானார் மக்களால் மண்ணெழக் கண்டேன்!

மண்ணைத் தெரியார் வளர்பனை தெரியார்
அண்ணனைத் தெரியார் அரும்புலி தெரியார்
இந்த நாட்டில் எழில்முகம் வெள்ளைச்
சிந்துகள் பாடும் சிறப்பாம் மருத்துவர்
கண்முனே விழித்த கனித்தமிழ்ச் சிறுவர்
மண்துயர் புக்கவே மலையாய் எழுந்தனர்!

உண்ணா விரதம் உயிர்நில வதைகள்
எண்ணா நின்ற இளைஞ ரின்நாடுகள்
போக்கு வரத்தும் பெரும்தடை ஆக்கியும்
தாயாள் அன்னைத் தங்கமண் ணுக்காய்
எழுந்தார் இலட்சம் இலட்சமாய எங்கும்
தொழுதமண் துயரில் துடித்தெழுந் தனரே!

நாயார் சில்லேர் நாட்டை நயந்து
காயாப் புழுக்கை காய்ந்த மாதிரி
தன்னை மக்களிற் தானாய் வளர்த்தபின்
இன்றுமா வீரரை ஏளனம் செய்து
வானொலி நடத்தும் வஞ்சனைக் கண்டேன்!
பேனாய்த் தலையிலே பொரிந்திடக் கண்டேன்!

சுயநலப் பேய்கள் சேர்ந்து நடந்துபின்
தயவைப் பெற்றுத் தான்பின் னதுவாய்
அந்நியன் காலில் அடிச் சங்கிலியாய்
சந்திப் பூக்கள் சாற்றுவான் கேளீர்
மந்திபோற் பாய்ந்து மாற்றான் மடியில்
குந்தியே இருக்கும் குரங்கிவன் தானே!

புரளிக் கந்தல் போட்டவர் ஏட்டில்
அரளிக் காயாய் ஆகுவான் தன்னை
எல்லா நாடும் இருக்கிறார் என்றே
பொல்லாத் தீயர்ப் பெருந்தீ உடைத்தோம்!
நாளையும் நாளை நமக்கொரு நாட்டை
காளையர் செய்யக் கனிந்ததெம் மினமே!

நச்சுக் குண்டிலே நம்மினம் எரியப்
பிச்சும் குளிரிலே பெரும்நகர் இடித்தோம்!
பிஞ்சும் குஞ்சும் அஞ்சுகத் தாயரும்
தஞ்சம் கெட்டுத் தமிழீ ழத்தொடும்
குண்டில் எரிகையில் கூவிய கையொடும்
மண்ணின் மைந்தரை மடையெனக் கண்டேன்!

மழையின் தூரல் வாடையின் ஈரம்
அழைக்கும் குரல்கள் அம்மா என்கும்
மாவீ ரர்கள் மனச்சுடர் விரியும்
தீப விளக்குகள் தேசெலாம் எரியும்!
சிதைகள் மருங்கில் சிந்திய கண்ணீர்
கதைக்கும் மறவரைக் கண்முனே காட்டும்!

அர்ச்சுனன் மைந்தன் அபிமன்யு வீழக்
கைத்தலம் மீது கண்டனன் பார்த்தன்!
சார்ள்ஸ்அன் ரனியோ சாற்றிய களத்தின்
போர்க்குளத் துள்ளே புரிந்த சாகசம்
சாவைக் கண்டே சரிந்தனன்! தந்தையைக்
காவைத் திடவே கனிந்த செம்மலான்!

பேரியற் தலைவன் பெற்ற பிள்ளையைச்
சார்ள்ஸ்அன் ரனியைத் தன்னினும் மேலாம்
வீரக் களிறை மெய்ம்போர் மீட்டிய
ஆரா இளைஞன் அம்பிக்கு இந்தநாள்
பேரா என்றே சிதையெலாம் வீழும்
வாராய்க் கண்ணீர் வடித்திடும் இந்நாள்!




ஐந்து கண்டமும் ஐம்பெரும் சமுத்திரம்
தந்த பூமியைத் தாங்கிய உலகம்
எங்கெலாம் தமிழன் இருக்கின் றானோ?
அங்கெலாம் தீப அடுக்குகள் வைப்பான்!
தேரா விளக்கே! தேவியே! மகனே
வாராப் புலியே வருகவென் றழைப்பார்!

நரகா சுரரை நரமா மிசத்தைப்
புரமாய் ஆக்கிய பெருஞ்சிங் களத்தை
ஐயகோ நீவிர் அரக்கரே! எங்கள்
மெய்நில மெல்லாம் வீசிட நச்சுக்
குண்டிலே தீய்த்த கொடியரே! என்று
மண்தனை வாரியே இறைத்தல் கண்டேன்!

எட்டபன் ஆகி இராச பக்சனைத்
தொட்டவன் எல்லாம் தீயரே! இனத்தின்
கெட்டவன் அவனே! கொண்ட தாய்நிலம்
மட்டமாய் எடுக்க மடிதூங் கினனே!
குட்டியும் குடியும் கூத்தும் எங்கள்
தொட்டிலை விற்றுத் தின்னவே போயினர்!

ஆமாம் ஆமாம் இனத்தின் விம்பம்
தேமாங் கனியாய்த் துருவிடும் இளைஞர்!
கூரப் பாயும் குளிரிலும் தேச
வீரராய் நின்றே விளைநிலம் செய்தார்!
சாராத் தமிழன் சரிந்து அந்நியச்
சூரரின் சட்டியில் தோரோட் டினனே!

உள்ளும் புறமும் உலக மெல்லாமும்
வெள்ளமாய்த் தமிழர் விளைத்தனர் இமயம்!
தீயாய் எரிக்கத் தேச மெல்லாமும்
பாயாய்க் கிடந்து பக்கம் இருப்பினும்
எங்கள் கரங்கள் இளைஞரின் கரங்கள்
தங்கத் தீழம் தரணியில் எழுதுமே!

போரின் பின்னே புலிகள் இழந்தமண்
வேரொடும் பாறி விழுந்த காலையில்
இந்தியம் சீனா இரஷ்யா பாகியர்
வந்ததாற் தானே வரலா றிழந்தோம்!
புலத்தின் தமிழரே பெற்றமண் ஈழக்
கலத்தை இன்று காப்பவர் ஆனார்!


சுவிஸ்நாடு
(எண்சீர் விருத்தம்)

அய்நாவின் கொடிபறக்கும் அழகு நாடு!
அவனியிலே கண்போன்ற அறிவார் நாடு!
தெய்வமென எங்களினம் தேரும் நாடு!
திக்கற்றோர் சேதியிடத் தெளிந்த நாடு!
மெய்ம்மையுளத் தமிழரொடும் மொய்த்த நாடு!
வீதியெலாம் தமிழ்முழக்கம் கேட்ட நாடு!
பொய்நாவார் இலங்காட்சி புரிந்த நாடு!
பேருலகக் கொடியெல்லாம் திகழும் நாடு!

தீக்குண்டில் ஈழமது எரிந்த போதில்
திக்கெல்லாம் தமிழனிட்டான் செனீவா மன்றில்!
நாக்குண்டு வைத்தோம்நாம் நாடெல் லாமும்
நலிந்தவினம் பற்றியொரு நாடும் சொல்லாப்
போக்குண்டு என்பதினால் முருக தாசன்
பேரீழ மைந்தனவன் தீயில் வெந்து
சாக்கொண்டு அய்நார்க்குச் சாற்றி வைத்தான்!
சரித்திரமீ தென்னாளும் தொலையா தையா!

செனிவாவில் திருவீதி உடைத்துத் தள்ளிச்
சேதியிட்ட நாளெல்லாம் சொல்லும் எங்கள்
மனிதத்தை வளர்நாட்டை வார்ந்து தள்ளி
மரணத்தில் எரித்திட்ட மகிந்தக் கூட்டை
இனமாகத் தமிழ்கொன்ற இராட்ச தர்கள்
எரித்துவிட்ட ஈழமதை என்றும் சொல்லும்!
கனமான நீதியெனில் காலம் வெட்டிக்
கனிப்பிழம்பு போலெழும்பும் காணும் ஈழம்!

அய்ரோப்பா ஒன்றியம்..!

அய்ரோப்பா ஒன்றியத்தார் அவனி தன்னில்
அகலக்கூ டுடையார்கள் அணித்தே ரான
மெய்நிலமும் மானிடமும் விதந்து வையம்
விளைந்துதவி செய்கின்ற விதிகள் வைத்தார்!
பொய்யகவிப் பேயாகிப் போர்க்குற் றத்தின்
புத்தலங்கா நிற்பதனால் புரிந்தே கொன்ற
செய்கையினாற் பணவுதவி செய்யா ராகச்
செப்பியதால் ஈழவதை தெரிந்தே நின்றார்!

ஒன்றியத்தின் உதவியொடும் இலங்கா நாடு
இலட்சமென வேலைகளை இயன்ற போதும்
கொன்றீழ இனமழித்த கொடுமை தன்னால்
குவலயமெல் லாமெல்லாம் குறித்த பின்னால்
வன்கதைகள், சட்டத்தின் வடிவிற் சென்ற
வாதையிடும் போர்க்குற்றம் மலிந்த பின்னால்
இன்றுதவி செய்யாராய் இழுத்தே நிற்கும்
இந்தகணம் வரையிலுமே ஏற்கா நின்றார்!

போர்முடிந்து இருநூறாய்ப் போன நாட்கள்
பெரும்புகையாய் எரிமலையாய்ப் போன மக்கள்
கார்வனத்தில் கனக்கின்ற கதைகள் கேட்டும்
கடும்வதையின் முகாம்களிடும் கதறல் கண்டும்
மார்கழியின் மழைபொழிதற் கிடையே சொந்த
மனைகளுக்குப் போகவிடு மாறும் கேட்டும்
சீர்செய்யா விட்டாலே தேர்ந்து காசைச்
செய்துவிட முடியாதாய்ச் செப்பி விட்டார்!

இருபதுவாம் நாடுகளாய் இணைந்தய் ரோப்பா
ஒன்றியமாய்ப் பாராளும் இணக்கம் பெற்ற
பெருமிணைப்புச் சபையிதுதான் பூமி தன்னிற்
பெட்டகமாய் 'யூறோ'வாய்ப் பொதுவாய்க் காசு
வருவாயைக் கண்டதொரு மன்றம் செய்தார்!
வையத்தை வளர்விக்கும் வனப்பும் கொண்டார்!
செருவாயில் இனவழிப்புச் சிறீலங் காவார்
செய்காசுப் கேங்குகிறார் சிரிப்புத் தானே!

நோர்வேயாம் மனிதநல் நாடு வந்தே
நோர்க்காத போரென்று நுணுக்கம் செய்து
கூர்க்காவாய்த் திரிந்தகவிச் செய்தொப் பந்தம்
கொல்லாடும் இலங்கத்தைக் கூட்டி வந்தார்!
வார்க்காடு இந்தியத்தின் வரவால் ஆட்சி
வலைக்குள்ளே வைத்ததொரு பொறியிற் சிக்கப்
போர்க்காடு பெற்றோம்நாம் சோனியாளின்
புருசனுக்காய் ஈழத்தை எரித்தாள் தாமே!

வாழ்நாடு எல்லாத்தும் வணக்கம் செய்வோம்!
வந்தபோர் தனிலெங்கள் மண்ணே சாகச்
சூழ்நாடு எல்லாமும் தெளிவே சொன்னோம்!
தெருக்களிலும் சனக்கடலாய்த் திரண்டு நின்றோம்
பாழ்நாடு இந்தியமே பகைக்கு நாறிப்
பட்டதுவே ஆனாலும் பாரின் வெள்ளை
ஆழ்நாடு யாவற்றும் ஆர்த்த எம்மின்
அகநாட்டை என்றென்றும் நெஞ்சில் வைப்போம்!

யூறோ:அய்ரோப்பிய நாடுகள்
யாவற்றுக்கும் பொதுவான நாணயத்தின் பெயர்.

பதிவு:11-11-2009


- புதியபாரதி

ஈழகாவியம் - 06

0 comments

புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:08 நிகழ்காலம்.
பிரித்தானியாவால் அழிந்த ஈழம்!
(அகவல்)

பிரித்தா னியர்கள் பிறழ்ந்த போதே
நரிச்சிங் களத்தை நம்தமிழ் கண்டது!
சுதந்திர நாடாய்ச் செப்பிய இலங்கை
மதத்த நாடாய் மறுகணம் வந்தது!
பரத்தையர் கொடுத்துப் படுக்க வைத்துக்
கரத்தைக் கட்டிலில் கைப்பிடித் ததனால்
ஆளுனர் சோல்பரி அசிங்கர் கையில்
வாளைக் கொடுத்து வரலா றழித்தார்!
சோல்பரிக் குழுவில் செப்பிய பொன்னரின்
சால்புநீ தியையும் சரித்திடக் கெடுத்தார்!
பின்னர் ஒருமுறை பித்தர் சோல்பரி
மன்னன் சங்கிலி வாழ்ந்த பூமியாம்
யாழ்ப்பா ணத்தில் யாத்திரை வந்தவர்
ஆழ்ந்துரை செய்த இளைஞன் ஜீஜீப்
பேருரை கண்டு பிடித்தகா ரணத்தால்
வாரறி வாளனை வரச்சொலிக் கண்டார்!
சோல்பரி செய்த சூத்தையால் செத்து
கால்விழுந் திட்ட கனித்தமிழ் நிலத்தின்
களமும் சரிதமும் கனத்ததிவ் வேளை
முளையில் எம்மவர் விட்ட தவறினால்
புலிகள் பிறந்தார்! பேயாய் அழிக்கும்
நிலையில் சிங்களம் நிலைத்தகா ரணத்தால்
ஆயுதம் கைக்குள் அடங்கப் பெற்றார்!
சாயுதல் செய்யாச் சரித்திரம் ஆக்கினர்!
ஆயினும் எங்கள் அடுக்களை முன்னே
பாயினைப் போட்டுப் படுத்தான் இந்தியன்!
இந்திய வல்லமை இல்லா அரசால்
கந்தகம் கொடுத்துக் கனத்தசிங் களத்தில்
பாகியும் சீனமும் பட்டறை வைத்துச்
சாகிடச் செய்த சரித்திரம் கண்டோம்!
சுதந்திரம் பெற்ற சமநே ரத்தில்
மிதந்தது இந்திய விடியலும் காணீர்!
பசுவைக் கும்பிடும் பாரதத் தோடு
பசுவைச் சாப்பிடும் பாகியர் சேரார்!
என்றவர் ஜின்னா இன்றுபா கிஸ்தான்
வென்றுதன் நாட்டை விரிந்த இந்தியத்
தன்னொடும் பிரிந்து தனியர சொன்றை
மின்னிட வைத்த வேளையிற் றானும்
சங்கிலி, வன்னி, சார்புசால் எல்ல(h)ளன்
பொங்கிய நிலத்தைப் பிரித்துமே வையாச்
சங்கதி தன்னால் சார்தமிழ் நிலத்தைச்
சிங்களம் இன்று தின்னுதல் கண்டோம்!
நீதியும் நேர்மையும் நெஞ்சுரம் இன்றியும்
பாதியில் நின்ற பண்பறி வாளரால்
சாதித் தமிழன் சரிந்தனன்! வெள்ளையர்
கோதி விட்டுக் குளிர்காய்ந் ததினால்
அய்ம்பதும் கூடவும் அரணோய்ச் சியதோர்
எம்பதி இழந்தோம்! இன்று இந்தியம்
வல்லர சின்றி வாழ்தலாற் சீனமும்
எல்லாப் பக்கமும் எங்களைச் சூழ்ந்தான்!
தன்னை உடைத்த தாழ்வாய் இந்தியம்
சென்னையைக் கூடச் சேவகம் ஆக்கிச்
சன்னதம் ஆடும்! சளக்கர், சிங்களம்
கொன்று ஐநூறாய்க் கொடுத்த போதுமே
இன்னும் இந்தியம் இந்த மக்களை
தன்நாட் டவராய்ச் சனியர் மதித்திலார்!
புன்னர சிவரால் புலிகள் தேசமும்
நச்சுக் குண்டில் நசுங்கித் தீய்ந்து
பிய்ச்சுக் குதறப் பொடியாய் ஆனது!
கொலைகொலை எங்கும் கூட்டி அள்ள
வலைபல விட்ட மகிந்த அரசால்
வாழ்ந்த நிலங்களை வழித்துத் துடைக்கச்
சீழ்பிடித் தவனாய்ச் செத்தான் தமிழன்!
இந்தவோர் நிலையில் எம்மினம் வெந்த
சந்தியில் நின்று சரித்திரம் எழுதத்
தந்ததே காலம் தமிழன் விதிதான்
வந்ததே! ஆயினும் வந்திடும் எம்நாள்!
கானப் படுகுயில் கடும்புயற் குள்ளும்
வானம் கீற வருங்குரல் கேட்கும்!
நானும் அதுவே! நடந்த நிலத்தைத்
தேனும் பாலும் சொரிந்த மண்ணைத்
தீயர் கொழுத்தித் தீய்த்த போதிலும்
தாயர் தந்த தமிழீ ழத்தைப்
பாடிட வந்தேன்! பகைக்களம் தன்னில்
வாடிட நின்றேன்! மலிந்த கண்ணீர்க்
கடலினிற் குளித்தே கணினியிற் கரைந்தேன்!
எட்டபன் குட்டிக் கிழந்த தேசத்தை
நட்டபின் மீழ்வோம் நாளெலாம் கவலைத்
தொட்டிலை விடுவோம் தொல்பொருள் ஆக்கிக்
கெட்டவர் கொட்டம் கெட்டிட மீள்வமே!


பிரித்தனே எங்கள் குரல் கேட்கிறதா?
(அறுசீர் விருத்தம்)


சிங்களம் பறித்தெடுத்த
செந்தமிழ் நிலத்தை எல்லாம்
எங்குமே நடவா திந்த
இனப்படு கொலையை எல்லாம்
அங்கதர் ஆக வந்து
அழித்தவர் குதத்தை எல்லாம்
மங்கலாய்த் தானும் நீயோ
மனத்திலேன் கொள்ள வில்லை!


பிரிந்தர சாண்ட மன்னர்
பேணிய நிலத்துக் காப்பை
பரந்திடும் கருணை இல்லாப்
பாதகர்க் கிரையே யாக்கி
நிரந்தர மிடவா வெள்ளைப்
பிரித்தனே இன்னும் உள்ளாய்?
கறந்தபால் முலைக்கே றாதே!
கறையிது உனக்குத் தானே!


சாலையை மறித்த எங்கள்
சாதியின் துயரை எல்லாம்
ஆலையாய்ப் பிழிந்த துன்பம்
அடுக்கிய தேம்ஸ்சின் ஓரம்
காலையும் மாலை யோடும்
கரைகடந் திடித்து நின்றும்
சூலையைத் தீர்க்க வின்னும்
சிலிர்ததிட வில்லை நீதான்!


போரொடும் நின்று எம்மைப்
பிடித்திட்ட பேயை, மண்ணைக்
கூரொடும் தீய்க்க வந்து
கொழுத்திய சிங்க ளத்தை
யாரொடும் உரைப்போம்? நீதான்
யாப்பிலே எம்மை விட்டு
நீரோடும் எழுதி விட்டே
நீந்தினாய் சாகின் றோமே!


சூரியன் மறையா நாடாய்ச்
சிறந்தநீ தமிழன் கொற்றம்
பாரிய அரசம் செய்த
பண்பைநீ மறந்த போதே!
ஆரியச் சிங்கத் தோடு
அசிங்கமாய் மனிதன் சேர்ந்து
வாரிசாய் விஜயன் வந்த!
வம்சத்தில் அழிந்து விட்டோம்!


விஜயனின் வம்சம்! இந்த
விரிகதை மகா வம்சம்!
புஜபல வெல்லா ளனின்
பெரும்படைத் தளப திக்குக்
கஜமுசா செய்ய வென்றே
காரிகைத் தாயை வைத்தே
வசமிடச் செய்தார்! எல்லான்
மன்னவன் போரிற் செத்தான்!


மதுவிடச் செய்வர், பற்றி
மாதுவைச் சாய வைப்பர்!
கதுவிட யார்க்கும் கையில்
காசெனத் தெறிவர், தூதுக்
குதவியே வருவோர்க் கெல்லாம்
கொடுப்பரே இரத்தி னத்தைப்
பதவியில் பண்டா ரிக்குப்
படைத்ததை அறியாய் நீயோ?


கண்டியிற் கூட்டிச் சென்று
கதைத்தபான் கீமூன் னாரும்
உண்டியில் குளிரைக் கண்டு
உரைத்தனர் ஆயின் பின்னர்
நொண்டியாய் பத்தே நாழி
நெடுமுகாம் வந்து விட்டுச்
சுண்டமுன் பறந்தார்! எல்லாம்
சிங்களச் சதியே காண்பாய்!


ஆனந்தக் குமார சாமி
அருணாச லக்கோன் தம்பி
வானபொன் இராம நாதன்
வல்லவர் செல்வா, பொன்னர்
மானவர் உரைத்த பின்னும்
வரலாற்றில் தவறு செய்தாய்?
ஏனது அரசி நாடே
எங்களைச் சாக விட்டாய்?



கல்வியிற் றமிழர் பெற்ற
கடாட்சமும் அறிவாய்! உன்றன்
சொல்லொடு நின்ற காலம்
செந்தமிழ் இனத்தார் தம்மின்
வல்லமை கண்டாய்! இந்த
வடிவிடும் தமிழர் நுட்பம்
கொல்லவே இளைஞர் சாகக்
கொழுத்துதே அரக்கம் காணாய்!


இலட்சமாய்த் தமிழர் வந்து
இனத்தொடும் நின்றார்! கல்விப்
பலத்தொடும் வந்தார்! பண்புப்
படைப்பின ராகக் கொண்டார்!
மலத்தவர் சிங்க ராட்சி
மரணமாய் ஈழம் செய்ய
புலத்தவர் நெஞ்சம் தூங்கச்
செல்லுமா? பிரிட்டன் நாடே!


ஒவ்வொரு வெள்ளி தானும்
இனமொடும் கூடு கின்றார்!
செவ்வியே தருகின் றாரே!
செத்திடும் தமிழன் முள்ளுக்
கவ்விய கம்பிக் குள்ளே
கசக்கிடும் சிங்க ராட்சி
எவ்விதம் சாக டிப்பார்
என்பதைச் சொன்னார் தானே!


சனநாய கத்தை வையப்
பாரம்ப ரியத்தை ஈர்த்துத்
தனநாடாய் மானி டத்துச்
சார்ந்துமே நிற்பா யுன்முன்
இனமொடும் சூழ்ந்தோம்! சாவின்
இழப்பிலே துடிக்கச் சொன்னோம்!
கனத்தவுன் இதயம் வென்றால்
காண்போம்நாம் மீட்சி அன்றோ!


தேம்ஸ்நதிக் கரையி னோரம்
சுதந்திரச் சிலையாள் கண்டோம்!
யாம்படச் சுதந்தி ரத்தின்
யாப்பினை இழந்தோம் காண்மின்!
கூம்பிய துயரைச் செப்பச்
தேசத்தின் குரலோன் பாலா
ஓம்பிய சரித்தி ரத்தை
உன்செவி மறந்தா போச்சு?


ஊடகத் தூய்மை கண்டோம்!
இளைஞரைச் சுட்டுத் தள்ளும்
கேடகர் இலங்க ராட்சிக்
கிளர்படை வன்மம் காட்டித்
தேடலில் 'சனல்போர்' கண்டோம்!
திகைத்தது வையம் தானே!
நாடகத் திலங்கா தன்னை
நல்லவர் மதிப்பார் தானோ?



சனநாய கத்தை நீதிச்
சுதந்திர அமைப்பை வையம்
கனமது கொள்ளக் காட்சி
கண்டிடும் ராணி நாடே!
இனப்படு கொலையை மண்ணை
இழுத்துமே பறித்தெ டுக்கும்
வனத்தவர் செயலைப் பார்த்து
வாய்கட்டி நிற்க லாமோ?


என்னரும் தமிழா கேளாய்!
எருக்கலைச் சாதி வந்து
புன்னலத் தோடு மாற்றுப்
புழுதியிற் படிந்து கெட்டு
தன்னலத் தோடு வாழும்
தறுதலை யாரும் கண்டோம்!
அன்னியக் கையில் நக்கும்
அடிமையை இங்கும் கண்டோம்!


நரிச்செயல் செய்தே எம்மை
நாறிட வைப்பார்! இந்தக்
கரிக்குண மாந்தர் எல்லாம்
காசிலே விலைபோ வார்கள்!
பிரித்தானி யத்து வெங்கள்
பெற்றவள் தேசத் துள்ளீர்
உரித்தொடும் ஈழ மன்றின்
உண்மையீர் ஒன்றாய் நிற்பீர்!


சிங்களம் கொடுத்த காசில்
சிக்குண்டோர் உலகின் மன்றில்
பங்கமே செய்கின் றார்கள்!
பலதுறை ஊடக கங்கள்
எங்களின் வணிகர் காசில்
இடுகின்றார்! எதிரிக் காகச்
சங்கதி இயற்று கின்றார்!
சரிதமே பொறிக்கும் ஓர்நாள்!


பொங்கிடும் தமிழே என்று
பூத்தனர் இலட்சம் மக்கள்!
அங்குவத் தலைவன் சுட்ட
அகிலமே அசையும் பக்கம்!
இங்கொடும் சில்லோர் வந்து
எத்தனை உதிர்த்தும் என்ன?
சங்கமாய் நின்ற வேங்கைச்
சரித்திரம் எவன்தான் செய்வான்?


அஞ்சுபேர் கூடிப் போனால்
ஆயிரம் பேரைத் தானும்
இஞ்சையெட் டப்பம் கூட்ட
இயலுமா? மறவர் பூமி
நெஞ்சிலே சுமந்து நிற்கும்
நேயரே இலட்ச மாவார்!
கஞ்சலர் அந்நிச் சோற்றைக்
கண்டவன் தமிழன் ஆகான்!


செத்தது செத்தோம்! வேங்கைச்
சிரசொடும் நின்ற நாட்டை
யுத்தமா மலைகள் வந்து
உடைத்தனர்! மெய்தான்! மக்கள்
செத்தனர்! கொள்ளை யாகத்
தீய்ந்தனர்! சிங்க ராட்சி
எத்தனை ஆண்டென் றாலும்
எம்கொலை விடுமா சொல்வீர்!


வீரமாய் நின்ற மண்ணை
விழுத்தினர் தீயர் ஆட்சி
ஆரமாய் நின்ற மண்ணை
அழித்தனர் கொலைவான் ஏவி
சூரராய் நின்று பின்னர்
செல்லரித் தவராய் மாறிப்
பாரமாய்ப் போன மண்ணின்
பழியரைச் சொல்லில் வைப்பீர்!





விற்பது தமிழர் கையில்
விளம்பரம் தமிழர் பையில்
நிற்பது எதிரிக் காக
நிழல்களும் குலைக்கு தப்பா!
புற்றொடும் பாம்புக் கால்கள்
பேய்விடும் வீம்புப் பார்வை
அற்பரின் எழுத்து எல்லாம்
அசிங்கமே தொடவே வேண்டாம்!


என்தமிழ் இனத்தின் மேலோர்
இலட்சமாய் வாழும் நாட்டில்
இன்றொரு சரிதம் செய்வீர்
இழந்ததைப் பெறவே வேண்டில்
நன்றெனப் புலத்தில் ஒன்றாய்
நாடுகள் கடந்த நாடு
இன்றிடச் செய்வீர்! எங்கள்
ஈழமே உலகை வெல்லும்!



வெண்பா!


ஊடகங்கள் வர்த்தகரை ஊர்ந்து பணமியற்றி
நாடகமாய் எத்தனுக்கே நாவிசைப்பார்-கேடவர்கள்
நின்று நிலமெரிக்கும் நீசருக்கே தொட்டிலிட்டுக்
கொன்றோர்க்கே மாலையிட்டார் கொள்!


1-ஜீ..ஜீ: ஜீ.ஜீ.பொன்னம்பலம்
2-சனல்போர்:சனல்-4 தொலைக்காட்சி
3-எல்லான்: எல்லாளன்

பதிவு:10-11-2009

-புதியபாரதி

ஈழகாவியம் - 05

0 comments

அத்தியாயம்07:நிகழ்காலம் விடுதலையை மதித்த வெள்ளைநாடு!

(எண்சீர் விருத்தம்)

நல்லமனம் கொண்டோரை நாடு போற்றும்!
நல்லாட்சி செய்வோரை மறைகள் போற்றும்!
கொல்பவர்க்கு வாள்கொடுத்தாற் கொடுமை ஆகும்!
கூற்றுவனைப் பின்தொடர்ந்தால் மனிதம் சாகும்!
சொல்லுண்மை சரிபார்த்துத் தொடுதல் வேண்டும்!
சுதந்திரத்தை எல்லோர்க்கும் பகிர்தல் வேண்டும்!
வல்லோர்க்கும் தீமையிலா திருக்க வேண்டும்!
வளர்நாடு தர்மத்தை வணங்க வேண்டும்!


எல்லோர்க்கும் எல்லாமும் இயற்ற வேண்டும்!
எவர்கையும் தூய்மைக்காய் உயர வேண்டும்!
இல்லார்க்கும் இல்லாமை போக்க வேண்டும்!
ஏழைக்கும் கல்விக்காய் இறைக்க வேண்டும்!
கல்லார்க்கும் காரறிவு கொடுக்க வேண்டும்!
கயவர்க்கும் நற்போதம் கிடைக்க வேண்டும்!
சொல்லார்க்கும் உண்மைக்கே தேசம் வேண்டும்!
செய்கருமம் அர்ப்பணிப்பிற் சிறக்க வேண்டும்!


அவுஸ்திரேலி யாநாடு ஆர்க்கும் இந்த
அர்ப்பணிப்புக் குள்ளான அணிநா டாகும்!
குவித்தகணை வல்லாட்சிக் குள்ளே நாளும்
கொட்டுண்டு தமிழரினம் சாதல் கண்டும்
அவித்தஇறால் துடிக்குதென்ற இராச பக்சர்
அடுக்குகின்ற சொல்லொன்றும் கேளா நின்றும்
புவிவெள்ளைச் சில்நாடு போட்ட அந்தப்
புலித்தடையைப் போடாது புகழே கண்டார்!


பேர்நாடு என்கின்ற பெருமை யோடு
பெயர்ந்துவந்த வெள்ளையர்கள் போற்றும் ஆட்சி!
ஊர்நாடு பழங்குடியர் உரிமம் பெற்ற
உண்மைக்கும் அவர்பேணி உயர்ந்த நாடு!
கார்நாடு மாமழையிற் கனிந்த நாடு!
கங்காரு வாழுகின்ற காதல் நாடு!
தேர்நாடு இதுவென்றே செப்பும் வையம்
செந்தமிழன் சேர்ந்திருக்கும் சிறப்பு நாடு!


கல்விதனை உயிராகக் கண்ட ஈழம்
கைலையென அறிவார்ந்து மலையாய் நின்றார்!
சொல்லகவி வாதிட்டுச் சிறந்து அய்நாச்
செப்பருங்கால் நின்றவர்தான் ஜீச்ஜீப் பொன்னர்
நல்லானந் தக்குமாரன் இராணி முன்னே
நயந்திட்ட செந்தமிழர் நாவைக் கொண்டார்!
வல்லாளர் அறிவார்ந்தோர் வரையும் நீதி
வடிவாளர் அவுஸ்தியிலும் வார்ப்புப் பெற்றார்!


பெற்றமண்ணை வற்பகைவர் சூழ்ந்த போதும்
பெருஞ்சூது இந்தியத்தாற் பிடித்த போதும்
கற்றதொரு வைப்பிருந்தே ககனம் ஏறிக்
கங்காரு தேசத்தில் கனிந்தோம் நாமே!
உற்றநிலம் உயிராக உயர்ந்த பண்பை
உடையோராய்த் தமிழரெலாம் உயர்ந்தே நின்றார்!
விற்றுவிடத் தாய்நாடு விற்கும் எட்டர்
வெடுக்குவந் துற்றாலும் விழுந்தோம் இல்லை!


பேயாட்சி சிங்களத்தாற் போட்ட பிச்சைப்
பிடிகரத்தில் வசதியிடப் போனோர் பல்லோர்!
நாயாகி நக்குண்டார் நகர்ந்து பொய்ம்மை
நரியார்க்குத் தூதிட்டார்! நாடு விற்றார்!
சாயாத தமிழினத்தைச் சரிய வைத்தார்!
சரித்திரத்திற் பழிசுமந்த சகுனி யானார்
தாயாக நின்றதமிழ் நிலத்தோர் மட்டும்
தரணியெலாம் தமிழீழம் எழுதி வைத்தார்!


முப்பதினா யிரம்தமிழர் முழுதாய் நிற்கும்
மெய்நாடு அவுஸ்தியென விளங்கும் போதும்
ஒப்பருங்கால் வானலைகள் எங்கள் ஈழ
உயிர்வதையை உரைக்கும்கால் ஓர்பத் தாக
செப்பனிடக் காதினிக்கும் ஈழ நேசன்
தேர்இணைய ஊடகங்கள் திளைத்த தாலே
இப்புனிதக் காவியத்தை எழுது கின்றேன்!
என்னிதயத் தலைவனொடும் இதயம் கண்டேன்!


தமிழரொடும் வாழ்நாளைச் சுமந்த சங்கம்
தாயகத்தின் சுதந்திரத்தை நிறுவும் மாந்தர்
அமிழ்தமென ஆர்ப்பரிக்கும் அறிஞர் தம்மும்
அகதியென வந்தவர்க்கும் அளிக்கும் தோழ்மைச்
சிமிழாக நிற்கின்ற அவுஸ்தி நாடு
செந்தமிழீ ழத்தினொடும் சிறக்கும் நாளில்
உமியான எட்டப்பர், இடுப்புக் காசை
இழுத்தெடுப்போர் போய்மறைவர்! எறிக்கும் தேசம்!


கார்த்திகைநாள் வருகின்ற காலம் இற்றைக்
கவியேடு வரைகின்றேன் கண்ணீர் முட்டிக்
கோர்த்தவிழி மைந்தருக்குக் கோலம் போட்டுக்
கொண்டுலகம் வணங்குகின்ற நாள்தான் இன்று!
நேர்த்திவைத்துத் தீபமிட்டு இலட்சம் ஆக
நெடும்தேசம் எல்லாமும் தமிழர் நின்றே
பார்த்தவிழி பார்த்தழுது பாதம் தன்னில்
படிவைத்துக் கிடந்தழவே பார்வை கொண்டேன்!


எட்டப்பன் கண்டபயன் என்ன வென்று
இயலொருத்தன் எனைக்கேட்டான் என்ன வென்பேன்?
குட்டியொடும் படம்போட்டுக் கீற்றுக் கண்கள்
குடித்தவனின் சிவப்பேறக் கண்டோம் அன்றோ!
அட்டியிலே யோசப்பன், ரவிராஸ், ராஜன்(நிமல்)
ஆங்கிலமார் சிவராமும் மகேசன் என்றே
கெட்டவர்கள் சுட்டெடுத்த கேட்டைக் கண்டோம்!
கேடுஇதை மிஞ்சியொரு கேடும் உண்டோ?

மற்றபெண்கள் பார்க்காதான் மறவர் தம்மை
மாவீரம் ஆக்கிநின்ற மகானே என்போம்!
உற்றண்ணன் என்றவுடன் உயிரே வைத்து
உலகசைக்கும் கரும்புலியை இயற்பான் என்போம்
பெற்றாளைத் தன்னோடும் பிரியா னாகிப்
புத்திரரும் போர்க்களத்தில் நிற்க வைத்த
அற்புதனை ஆதவனை அகில முற்றும்
ஆட்காட்டி விரலிட்டான்! அவன்நாள் இந்நாள்!


சிட்னியிலும் மெல்பேர்ணும் நகரம் எல்லாம்
செந்தமிழர் ஒர்கரமாய்த் தொடுத்தே நிற்பார்
அட்டதிக்கும் மண்ணுக்காய் ஆர்க்கும் நாளில்
அவுஸ்திரேலி யர்நாடும் ஆர்த்தே நிற்பார்
கொட்டரவி கண்ணீரில் குளித்தே நிற்பார்
குருதியொடும் ஊனுருகக் சிதையில் நிற்பார்
தொட்டுப்பா வைத்தொருகால் தெய்வம் பாடிச்
செறிகின்ற நாளிதுவாய் சிறப்புக் காண்பார்!


வெறிப்பகைவர் வந்துற்றார் வெட்டிக் கொல்லும்
விசர்நாடார் வந்திட்டார் வீழ்ந்து பட்டுப்
பொறிநாடர் பல்லோராய்ப் புகுந்து விட்டார்!
புதையுண்டு போனாலும் எங்கள் மண்ணின்
நெறிகண்ட வெள்ளையர்கள் நேரும் நாட்டில்
நிற்கின்றோம் என்பதுவே நீதித் தாயின்
செறிவோடு தமிழீழம் செய்வோம் என்ற
சேதிக்கு வித்தாகும் துணிவே கொண்டோம்!


மாமனிதர் ஜெயகுமார் எலியே சருமாய்
வாழ்ந்துபுகழ் கண்டதுவே அவுஸ்தி நாடு!
சேமமுறத் தமிழ்வாழும் சிறந்த நாடு
சிறப்பான தமிழறிஞர் சூழ்ந்த நாடு!
காமமுறச் சிங்களத்தின் கசாப்பு ஆட்சிக்
கயவர்களால் இனம்சாகக் கண்டோம் ஆயின்
நாமமது தமிழீழ நாடு வைத்து
நானிலத்தில் நாம்சமைப்போம் நடக்கும் பாரீர்!

x........x..........x

இனப்படு கொலையைச் செய்யும்
இராசபக் சாவின் ஆட்சி
கனத்ததோர் நாளைக் கண்டோம்!
காவலர் சூழ்ந்து வந்து
மனத்தொடும் விழுந்த நோயால்
வருந்திய இளைஞன் தன்னை
அனர்த்தமாய்க் கொன்ற காட்சி
அகிலமெல் லாமும் கண்டோம்!


இரசீவின் பிடரிப் போடல்
இந்தியர் வக்கு இல்லாத்
துரவினர் மறந்தார் ஆயின்
துட்டர்கள் இன்று கொன்ற
நரபலிச் செயலிற் சிங்க
நாட்டொடும் படங்கள் கண்டோம்!
மரத்திடும் வெறிப்பேய் நாட்டை
மானத்தர் மறப்போம் அல்லோம்!


இற்றைநாள் ஈழத் தாயின்
இக்கதை எழுதும் வேளை
புற்றொடும் பாம்பாய் நின்ற
பேயவன் சரத்பொன் சேகாக்
குற்றமாம் கொலைகள் வைத்த
கொடுமைக்கு விளக்கம் கேட்டுச்
சுற்றிய அமெரிக் காவின்
செய்தியே எங்கும் கண்டேன்!


அடக்கியே முகாமுக் குள்ளே
அடைத்துவைத் திட்ட போதும்
கடக்கவே தமிழ மக்கள்
கடலிலே அடைந்த போதும்
இடக்கொடும் அவுஸ்தி நாடும்
இந்தோனி சியாவும் கொண்ட
முடக்கத்தில் அகதி யாளர்;
முற்றிலும் வருந்தக் கண்டேன்!


இத்தனைத் துயரின் மேலாய்
அகதிகள் படகு ஒன்று
தத்தளித் திட்ட போது
தாழ்ந்தது கடலின் உள்ளே!
செத்தனர் தமிழர் பத்தாய்ச்
செய்தியில் வந்து முற்றும்
வைத்ததே கண்ணீர் வெள்ளம்
வாதைதான் இன்னு மாமோ?


வெண்பா!

தீவைத்தான் கைக்குள்ளே தீகொடுத்துத் தான்நிற்கும்!
தீவைத்த நாடுகளாய்த் தீயில்லாமல்-நாவைத்து
நற்சொல்லிற் கண்ணீரை நனைக்கின்ற ஆஸ்திதனை
சொற்தமிழில் வாழ்த்துகின்றோம் சொல்!



- புதியபாரதி (இப்பதிவு:02-11-2009)

ஈழகாவியம் - 04

0 comments

அத்தியாயம் 06:
நிகழ்காலம் கனடிய நாடும்; கனித்தமிழ் இனமும் (கும்மி)

மானுட சாசனம் வைத்திருக் கும்நல்ல
மாக்கன டாவினைப் பாடுமம் மா!
வானிடும் குண்டில் மக்களெ ரிகையில்
வாழக்க ரம்தந்த நாடுஅம் மா!

ஈனத்த ரானஇ லங்கரின் ஆட்சியில்
என்றும ழிந்ததும் எம்மின மே!
கூனக்கி ழத்தின ரானமோ டர்களால்
கொஞ்சுநி லம்எரிந் தாச்சுதம் மே!

ஈழமண் பின்னொடு மிக்கன டாவிலே
இன்றுநாம் நான்குஇ லட்சமம் மா!
ஆழம னம்தந்து ஆதரித் தாரிந்த
அன்புநி லத்தையே போற்றுமம் மா!

கூழைத்தின் றானாலும் கூடென வாழ்ந்தநாம்
கொள்கன டாவிலும் கூடநின் றோம்!
பூழைசா றிட்டதோர் பேயாட்சிப் பூதத்தை
பொங்குத மிழ்கொண்டு காட்டிநின் றோம்!

எட்டப்ப ரானவர் எம்தமிழ்க் கேடவர்
ஈழவி னத்தினிற் கேடுதந் தார்!
அட்டதி சையெல்லாம் அந்நியர்க் காசிலே
அம்மான்க திர்காமர் ஊறுதந் தார்!

வேங்கையெ திர்க்கின்ற நாடுக ளாக்கஇவ்
வேடனன் சென்றனன் பார்முழு தும்!
பூங்கையிற் சிங்களப் பெண்ணைம ணந்தவன்
பெற்றவி னம்விற்றான் நாள்முழு தும்!

தாங்காது தாங்காது தண்தமி ழெட்டப்பர்
தாரணி மீதிலும் தந்தவ டு!
வேங்கைய ரின்விடி யல்லொடும் போரிட
விசங்க ளும்தந்த திச்சுவ டு!

தாசியி லங்கவைத் தாலாட்டப் பல்நாடு
தந்தது வேபுலித் தான்தடை யே!
நாசிசக் காட்டுக்கு நம்கன டாவிலும்
நல்குதி சைவந்து பாய்ந்தது வே!

தேடியு ழைப்பவர் தேசம்வ ளர்ப்பவர்
தேன்தமிழ் மக்களை இன்றுணர் தார்!
கூடித்த டையிட்ட கொள்கைக்கு மாறாகக்
கொல்லுமி லங்கவைத் தானேகண் டார்!

ஆடிச்செவ் வாயிற்கும் அய்ப்பசி வெள்ளிக்கும்
ஆலயம் தந்தது மாக்கன டா!
ஓடிஇ லட்சங்கள் ஒன்றாயி றங்கிட
எம்முணர் வானதும் இக்கன டா!

கால்நின்ற வாறெல்லாம் காரிறைக் கோவில்கள்
கட்டப்ப டைத்ததெம் கார்க்கன டா!
காலிற்ச தங்கையும் காரிசை யும்மிட
கட்டிவ ளர்த்திடும் தேன்கன டா!

ஈழமெ ரிக்கையில் ஈனர ழிக்கையில்
எட்டுதிக் கிங்குமெ ரிந்தது வே!
ஆழநெ டும்பாதை ஆர்த்தமி ழன்தனை
ஆனவு ணர்வொடும் ஈர்த்தது வே!

வன்னிமு காம்களை வாதைநி லங்களை
வண்ணத்த ராட்சியர் பார்ப்பதற் கு
உன்னியெ டுத்தனர் என்றாலி லங்கவின்
ஈனர்வி ட்டிலர் போவதற் கு!

நீதன்உ லோகனென் றீழவர் தேர்தலில்
இங்கேந கர்ரொடும் வெற்றிபெற் றார்!
சாதனை உற்றத மிழ்இன மாணவர்
சாலைகள் தோறும்ப டித்துநின் றார்!

கொட்டிக்கொ டுக்குமே யெங்களி னத்தொடும்
கொள்ளினம் வென்றதோர் காலம்அம் மா!
முட்டப்பெ ரும்விழி முட்டித்து டிக்கையில்
எட்டிக்கொ டுத்ததெம் இனங்களம் மா!

நாடுக டந்தத மிழ்ரசம் மின்னாள்
நாடிடப் பல்வழி ஆர்க்குதம் மா!
கேடுக ளிழைக்கச் சாவிட்ட போதிலும்
கோடோமென் றோசையே கேட்குதம் மா!

ஏழ்பத்து ஆறிலே வட்டுவில் எம்மினம்
ஏற்றபி ரக்ஞையின் சாரமிட் டு!
வாழுமி லட்சத்து வாலிப ரார்ந்திட
வந்ததே நாளொடும் தேதியிட் டு!

ஆயிர மாயிரம் மக்களைக் கொன்றுமே
அன்னைநி லங்களைப் பூட்டிவிட் டான்!
தாயொடும் தந்தையும் வாழ்ந்தநி லங்களைத்
தாடையி லங்காவான் ஓட்டிவிட் டான்!

எங்களி னத்தொடும் ஈழமண் ஆட்சியின்
ஏடுதொ டக்கியே இங்குநின் றோம்
சங்குத மிழ்இனம் சாற்றிடும் தேர்தலைச்
சார்கன டாவிடக் கூடுகின் றோம்!

நாடுகள் பல்லென நாடிநின் றோம்வையம்
நாடுமீர் பத்தாகி வாழுகின் றோம்!
கூடுக லைந்திடப் போகுவ தோவெங்கள்
கொள்கையி டித்திடக் கூடுவ தோ!

நாடுக டந்தநம் மீழர சையிட்டு
நல்லர ணொன்றையே தேடிநிற் போம்!
கேடுக ளிட்டவர் கேடுகள் செய்யினும்
கொற்றமெ மக்கொன்று கூடவைப் போம்!

வேங்கையின் விண்கொடி வீசிப்ப றந்திட
வேர்க்கன டாத்தடை ஏதுமில் லை!
ஏங்கிசு தந்திரம் இட்டத மிழ்க்கொடி
ஏற்றவெ ழுச்சியும் தீதுமில் லை!

ஈனத்தர் கையிலே ஈழமண் தீயிலே
இங்குரொ றன்ரோவில் ஆர்த்தெழுந் தோம்!
ஆனநே ரத்திற்பல் லாயிர மக்களாய்
ஒட்டாவாத் மன்றத்திற் சூழநின் றோம்!

இன்தமி ழானவர் கொண்டது யர்ரொடும்
ஏற்றுந டைமுறை ஏற்றுகி றார்!
இன்றர சானவர் இயற்றும் ஆட்சியில்
எங்களி னம்கண்டு போற்றுகி றார்!





எங்களி னத்திற்கு இப்பாரின் பேர்நாடும்
இந்தப்பேர் நாட்டுக்கு நாங்களு மாய்!
தங்கியி ருக்கிறோம் தாய்நாடு போலேயித்
தந்ததே சத்தையே பூசிக்கி றோம்!

தாய்நாட்டிற் குப்பின்னே தான்நான்கு (இ)லட்சமாய்த்
தண்தமிழ் மாந்தரின் பொற்கன டா!
சேய்நாடி துவொன்றே செப்பிடும் எங்களின்
சொல்கேட்கும் மானிடத் தேன்கன டா!

தூய்மைக்கும் வாய்மைக்கும் சொல்கேட்கும் என்றதோர்
மாயையி லங்கவை மாற்றிவிட் டார்
தீய்மைக்கும் கொல்வெறிக் கூட்டத்து லங்காவைக்
தேர்ந்துவிட் டோமென்று கூறிவிட் டார்!

வாழிஇன் நாடதே வாழ்த்துகின் றோமெங்கள்
வாதைக ளேற்றனை வான்கன டா!
நாளைய சந்ததி நம்பியு னைத்தொடும்
நாடாகி வந்திடும் தேன்கன டா!

அறுசீர் விருத்தம்

ஊழியம் செய்திட் டாலும்
உயர்தொழில் புரிந்திட் டாலும்
மேழியர் வயல்கள் பச்சை
விளைபயிர் வளர்த்திட் டாலும்
ஏழிசைக் கலைகள் ஏடு
எழுத்திசை வடித்திட் டாலும்
தோழமை யாக்கி வெள்ளைத்
தேசமே வியக்கச் செய்தோம்!

வானலை உண்டு செய்தி
வழங்கிடத் தொலையின் காட்சித்
தேனலை உண்டு தெய்வக்
கோபுரம் கோவில் உண்டு!
ஆனநல் வளாகம் கல்வி
அரசொடும் தொழில்கள் இல்லம்
மானமாய்க் கண்டோம் ஆயின்
மண்ணொடும் கண்ணீர் விட்டோம்!

வேதனை உண்டோம் சிங்க
விசத்தினால் செத்தோம் தேச
நாதனைக் காணோம் வேங்கை
நாடர்கள் அழிந்தார் வெட்டும்
கூதலுக் குள்ளே இளைஞர்
குதித்தனர்; சாலைக் குள்ளே
சாதலா இல்லை எங்கள்
சாதியின் உயிர்ப்பா என்றார்!

மானிடத் துலகை எல்லாம்
மதித்திடாக் கொடுமை ஆட்சி
ஈனமாய்த் தமிழர் கொல்ல
இலங்கையே எரிந்த போதில்
மானராய்த் துடித்தோம் காப்பர்
மாட்சிமை அரசைச் சூழ்ந்து
வானமே அதிர வைத்தோம்
வரைந்தது கனடா மன்றே!

தலைநகர் நிறைத்த ஈழத்
தமிழரே சரிதம் வைத்தார்
அலையலை யாக வந்தே
அதிர்த்தனர் ரொறன்ரோ மன்றை
கொலைகொலை ஈழ மண்ணில்
கொடியதோர் அரசே என்று
மலைவெடித் திடுதல் போலே
மக்களின் குரலே வைத்தோம்!

இறங்கியே வந்தார்! வெள்ளை
இமயங்கள் கீழே வந்தார்!
உறங்கிய ஊட கங்கள்
உயிர்த்தனர்! இனத்தின் கண்ணீர்
அறம்படக் கண்டார்! எங்கள்
அசைப்பிலே தினத்தாள் ஏட்டார்
திறந்தனர் மகிந்தன் கொல்வாள்
திரையொடும் காட்சி கண்டார்!

எங்களுக் காக வெள்ளை
இனத்தவர் அழுதார்! வெய்யச்
சிங்களக் கொடுமை கண்டு
திகைத்தனர்! போர்க்குற் றத்தை
அங்கதர் போலே கொன்ற
அரசதை உலக முற்றும்
பங்கமென் றுரைத்தார்! எங்கள்
பலமதே அசைக்கக் கண்டோம்!

இளைஞர்கள் குளிரி னுள்ளும்
இயற்றிய இனத்தின் கோடு
சுளையென மக்கள் ஒன்றாய்த்
திறந்ததால் தேசக் கொற்றம்
வளையெனப் பலமாய் நின்றும்
வதையிடும் இந்தி யத்தின்
அளையிலே மடிந்தோம் ஈழ
அரணதும் இழந்து விட்டோம்!

இழப்பிலே எழியோர் சில்லோர்
இங்கொடும் வெறியில் நின்று
அழப்பிய கதையும் மொய்ப்பில்
அரற்றிய ஒலியும் ஆக்கிக்
குழப்பிய மனதாய் மாற்றான்
கொலைஞரை வாழ்த்துப் பாடிச்
சுழற்றிய குதர்க்கம் கண்டேன்
சிறுநரி மானோ சொல்வீர்!

நாடுக டந்த நாடு
நமக்குளே வேண்டும் தேடு
பாடுகள் சுமந்த அன்னைப்
பதியதை விடியல் ஆக்கு
கோடுகள் வரைந்த ஈழம்
கொண்டிடும் உலகத் தோடும்
சூடுக தமிழா மண்ணின்
சுதந்திரம் உனக்கே சொந்தம்!

வெண்பா!

போர்வைத்தே யீழப் பெருநிலத்தைத் தீயாக்கிச்
சார்வைத்து வெட்டிச் சதைதின்றார்-வாருற்று
வையப் பெருங்கோட்டில் வாழும் தமிழர்கள்
கையொடு கைசேர்ந்தார் காண்!

- புதியபாரதி

Sunday, September 5, 2010

ஈழகாவியம் - 03

0 comments

நிகழ்காலம்-04 சீனமும் கூனி நாடுகளும்..

எரிகின்ற வீட்டிலே பொறிவைத்துச் சீனத்தான்
ஈழத்தில் காலை வைத்தான்!
இந்திய நாட்டுக்கு இலக்கோடு நின்றாட
இலங்காவிற் கோலை விட்டான்!
வரிசையில் நாடெல்லாம் குகையாகி நிற்பவன்
வசமாகச் செய்து விட்டான்!
வடமிட்டு இடம்பார்த்துத் தடமோடு சுழிபோட்டு
வழியெல்லாம் இறுக்கி விட்டான்!
நெரிக்கின்ற வடிவத்தில் நேர்வட்ட மாலையாய்
நெம்புகோல் இறுக்கி விட்டான்!
நிசத்திலே சிங்கள நீசரின் நாட்டிலும்
நிலக்குகை தோண்டி விட்டான்!
பிரிகின்ற கணைகளைத் தில்லியின் பக்கமே
புறப்பட வைத்து விட்டான்!
பேயாக ஈழத்தைப் புரிவைத்த இந்தியம்
பிழைதின்ன வைத்து விட்டான்!


மியன்மரும் திபெத்தும் நேபாளம் பாகிஸ்தான்
விரைவாக ஊன்றி விட்டான்!
முடிவிலே காலியின் முகத்துமா கடலிலே
முகமொன்று செய்து விட்டான்
பயனொடும் பொருட்களைப் பலபக்கம் அனுப்பியே
பணக்குன்று செய்து விட்டான்!
பாரிடும் நாடுகள் பலத்தையே அசைக்கின்ற
படிவமாய் மா(ற்)றி விட்டான்
கயவனாய் மகிந்தனைக் கணித்ததும் அய்நவைக்
கைகாட்டி நிறுத்தி விட்டான்!
கனித்தழிழ் இனத்தையை கழுத்தொடு சரிக்கின்ற
சாப்புக்கு மாலை இட்டான்!
இயலாகி இசையாகிப் புதிதாகப் பயணித்த
இனமொன்றைக் கொன்று விட்டான்!
இந்தநூற் றாண்டிலும் இட்லரின் வாரிசை
இங்குமே ஆக்கி வைத்தான்!


ஆக்கியதன் மட்டோடும் அவனில்லை இலங்காவை
அடிக்கடி மிரட்டு கின்றான்!
அருணாச்சல் மாவோக்கள் ஆயுதங்கள் புலிகளுக்கு
அளிப்போமென் றுரைக்க வைத்தான்!
ஆக்கமொடு தான்நிற்கும் அம்பலாம் தோட்டையிலே
அரனுக்காய் நகர்த்து கின்றான்
ஆனான வெருட்டுகளும் ஆபத்தில் இலங்கமொடும்
அருநண்பன் என்று ரைத்தும்
சூக்காட்டி இந்தியத்துக் காஷ்மீரம் தனைச்சொல்லிச்
சினம்கொள்ள வைத்து விட்டான்!
சிங்களத்தும் சீனமொடும் சேர்ப்பினிலே நிசம்பாடத்
தினத்தாளம் போடு கின்றான்!
தாக்காட்டித் தமிழகத்தைத் தலைக்கருணா நிதியோடும்
தமிழீழம் அழித்து விட்டுத்
தறிகெட்ட இந்தியர்க்குத் தக்கபதில் சீனம்தான்
தருங்காலம் இனிக்கா ணுமே!


இலங்கவின் இராணுவம் இன்றுசீ னத்தொடும்
இணைந்துமே காணு கின்றார்!
இராணுவ மாவோக்கள் இங்கெல்லாம் தன்படை
இன்றுரு வாக்கு கின்றார்!
உலங்குவிண் ணூர்தியும் ஓடிடப் பாகித்தன்
ஓட்டுனர் குடிபெ யர்ந்தார்;!
உடையோடும் காணியதும் எழிலான வீடும்தான்
இலங்காவான் கொடுத்து நின்றான்!
நிலங்களிற் சிங்களர் நிறைந்துமே வன்னியின்
நெடுகிலும் வந்து விட்டார்!
நெட்டுரத் திந்தியம் நிலையிது தெரிந்தும்தான்
நீசர்கைத் தீக்கொ டுத்தார்!
கலங்கிய வாழ்வதும் கந்தல்கள் ஆனதும்
கனிநிலம் எரிவ தற்கும்
கடைகெட்ட இந்தியக் கயவரே காரணம்
கண்டது தமிழீ ழ(ம்)மே!


இரச்சிய நாடது ஏழையின் மாட்சியில்
இலட்சியம் கண்ட துண்டு!
ஏரொடு வாளதும் சுத்தியல் தன்னொடும்
இலச்சினை யார்த்த துண்டு!
கரத்திலேன் ஆயுதம் கண்டனன் தமிழனே
கணக்கது தெரிந்தி ருக்கும்!
கனியவள் இந்திராக் காலமிட் டதுவுமே
கட்டாயம் புரிந்தி ருக்கும்!
மரத்தசிங் களத்திற்கு வான்கணை கொடுத்திட
வந்ததேன் இரச்சி யம்மே?
மரணமே வாழ்வென மடிந்திடும் சாதிக்கு
வந்ததே அதிர்ச்சி யம்மா!
உரத்தவோர் குரலிலே உண்மையே சொல்லியும்
உணர்ந்தவர் எவரும் இல்லை!
உலகினில் இருபதாய் நாடுறும் தமிழரும்
இடித்துமெப் பயனு மில்லை!


நேரமோர் துளியிலே ஆயிரம் குண்டுகள்
நெருப்பெனப் போட்டு நின்றார்!
நெடிதுயர் மரங்களும் நிலத்துமண் ணுயிர்களும்
நீறெனக் கருக்கி விட்டார்!
கோரவான் குண்டுகள் குவித்துமே போகின்ற
கிபீர்க்குமி வர்தான் ஓட்டி!
கெட்டவர் வரிசையில் பாகியர் ஆக்கிய
கேட்டுக்கும் உண்டுநாட் காட்டி!
பாரதிரப் பலவாகி பலநூறாய் வெடிப்பிடும்
பாகிஸ்தான் குண்டு கள்தாம்!
பசுங்கிளி தமிழ்ச்செல்வன் பலியிட வைத்ததும்
படுகுண்டு இதுபட் டுத்தான்!
ஈரவர் ஈழத்தில் இந்தியம் எதிரிக்கே
இடம்வைத்துப் போன தல்லால்
இனத்தமிழ் மண்ணுக்கு ஏன்வந்தார் என்பது
இதுவரை தெரிய வில்லை!


சுயநலத் தோடுதான் சீனமோ டன்னியர்
சிறீலங்கா வந்து நின்றார்!
சிங்களத் துக்கென்ன சாவொடும் தமிழரே
சென்றிட்டாப் போதும் என்றார்!
அயல்நெருப் பானதும் அணிநிலம் வெந்ததும்
அருவருப் பான தொன்றே!
ஆண்டுபல் லாண்டுகள் அடிமையே பட்டதெம்
அறவழி வெந்த திங்கே!
பயலெலாம் இலங்கவில் பயன்பெற வென்றுதான்
பகைகொண்டு எமைய ழித்தான்!
பத்துநூ றல்லவே பல்லாயி ரம்மெனப்
பார்த்ததும் இந்த நாட்தான்!
துயரிலே அமெரிக்கம் தேர்ந்தஅய் ரோப்பும்
துடித்ததும் மானிடம் தான்!
தீதந்த நேரத்தில் அணைத்திட வலுவில்லை
தெளிவில்லை அய்நா வும்தான்!


சுதந்திரம் பெற்றபின் மதத்ததே சிங்களம்
சீவினார் கொலைகா ரர்கள்!
தெருவிலும் வளவிலும் தென்னிலங் கையிலும்
சாவிட்டார் எமையா ளர்கள்!
பதந்திரு என்றடிப் பணிந்துபோய் நின்றுமே
பலிதந்து போனது ஆட்சி!
பலகல்வி நுட்பமும் தலமென்று கொண்டமண்
பறந்துபோ னதுவே காட்சி!
சிதலங்கள் சாவுக்கள் செல்வாவின் விழிநீர்கள்
சிதறிய போது தானே!
சிலம்பிட்ட தமிழனைச் செகவலாம் காணவே
செய்தது தர்ம வாளே!
மதத்தவர் சேனையும் மரணமே கொடுக்கவும்
மறவர்கள் அறத்தின் பாலாம்!
மடியிலே எட்டப்பர் வழியொடும் கெட்டப்பர்
வருமடா வெல்லும் நாளாம்!


வெண்பா!
சீனரும் இந்தியமும் பாக்கியரும் ரஷ்யத்துக்
கோனாரும் கொட்டிக் குடியழித்தார்-மானாரும்
தேனாடு தீயத் திசைநச்சம் வீழ்ந்தாட
ஈனாராய்க் கொன்றார் எழியர்!

நிகழ்காலம்-05 அகிலமும் அமெரிக்கமும்

கற்பழித்துக் கொலைசெய்தார், கனர கத்துக்
காலேற்றி உயிரோடு கருக வைத்தார்!
முற்றுமுழு தாயழிக்கக் குண்டு நச்சாய்
மூர்க்கரிட்ட வன்கொடுமைக் குரைதான் உண்டோ?
சொற்பதத்தில் இராட்சதமும் அரக்கர் என்ற
சொல்லிட்டுக் குறிக்கின்றோம், சாவின் காடு
எற்றிவைத்த இராசபக்சா ஈழ மண்ணின்
இராட்சதனே அசுரனென எழுது கின்றோம்!


முள்ளிவாய்க்கால் நந்திகட லோரப் போரில்
விசக்குண்டு வீசுங்கால் மக்கள் செத்துக்
கொள்ளியிடக் கூடாமல் குருமான் குஞ்சும்
குருதியொடும் நிலங்களிலே சிதறிப் போக
அள்ளுகொள்ளை யாய்நெரிந்து இராணு வப்பேய்
அடிமைகளாய்ப் போனதினால் இலட்சம் மூன்று
தெள்ளுதமிழ் மக்களுமாய்த் தீயில் வெந்த
தினம்கண்டே அமெரிக்கம் தெளியக் கண்டார்!


தமிழ்மக்கள் தன்னோடும் தலைவன் பிரபாத்
தம்பியொடும் காப்பாற்றத் தமியான் ஆகிச்
சுமைநீக்கம் ஒபாமா செய்வார் என்றே
செகமெல்லாம் நம்பியதே சிங்க ளத்து
அமைவான சொல்கேட்டே அமெரிக் காவும்
அரசநெடும் போர்நிற்கும் என்றே நின்றார்!
இமைகாணப் பெருந்துன்பம் இன்றே கண்டார்!
இராசபக்சாக் கொடியரையே இனம்கண் டாரே!


வெள்ளைநா டென்றாலும் விதந்தே நிற்கும்
விருப்பமுள மக்களொடும் விளங்கும் நாடு
முள்ளிருக்கும் மாந்தருக்கு முடிவே கட்டும்!
முத்தான மாந்தருக்கே முகமன் சொல்லும்!
துள்ளிவர நீதியிடும் துணிவு காட்டும்!
தேசத்தில் அமெரிக்கா துணிந்த தேசம்!
கள்ளமிலார் அரசியலைக் காட்டும் நாடு!
கணிதமிலார் தனைப்பதவி காட்டா நாடு!


ஆபிரகாம் லிங்கன்வந் துற்ற நாடு
அடிமைநிலை ஒழிக்கவென ஆர்த்து நின்ற
தீபமென ஒளிதந்த மாட்டின் லூதர்த்
திருமகனார் வந்துதித்த திருத்தாய் நாடு!
சாபமெலாம் போக்கிவிடச் சரிதம் வைத்த
சரித்திரமே ஒபாமாவார் சார்ந்த வெற்றித்
தூபமொரு அமெரிக்கம் துணிந்தே செய்த
துல்லியமீ தென்னாளும் சிறப்புக் காணும்!


சந்திரனின் மேற்பரப்பில் கால்ப தித்த
சரித்திரத்தை உலகமுதற் சான்ற நாடு!
முந்திவந்த சனபதியர் பல்லோ ருள்ளும்
முத்திரையிட் டேற்றிவைத்த முத்தார் நாடு
இந்தயுகம் வரையீழம் போரே கண்டு
எண்ணற்ற போர்க்குற்றம் இழைத்த ஆட்சிக்
குந்தகத்தை அறிக்கையிலே கொண்ட நாடு
கொண்டெங்கள் தமிழீழம் குறிக்கின் றோமே!


போர்நாளும் போர்ப்பின்னும் புவிநா டெல்லாம்
பெரும்பாடு பட்டார்த்துப் பேசி னாலும்
ஓர்நாளும் மசியாதான் இராச பக்சா
எரித்துவிட்ட சாம்பலினைப் பார்த்தே இன்று
நார்வாரக் கல்லினையே நாடி வந்தார்!
நமதுமக்கள் துயரமதை நவின்றார் கேள்மின்
கூர்வாராய் அமெரிக்கக் கிலாரி சொன்ன
கூற்றினிலே இலங்காதான் குழம்பி விட்டார்!


சிறிலங்கா மீதான போர்க்குற் றத்தைத்
தெரிந்தைநா மன்றத்தின் திருவில் வைத்துக்
குறிவைத்துக் கதைப்பதற்காய் கொணர்ந்த போதும்
குவலயத்தில் மானிடத்தைக் கொள்வா ரோடும்
நெறிவைத்து அமெரிக்கம் துணிந்த போதும்
நெட்டுரமாய் இந்தியத்து நீசர் வைத்த
பொறிதன்னில் இரச்சியமும் பொரிந்த சீனாப்
பொல்லாதார் தடுத்தாரே பொறுக்க மாட்டோம்!


சுயநலத்திற் காகவென ஈழம் சாகச்
சோனியளின் காங்கிரசும் தீயர் ஆன
பயல்மூக்கா தன்னோடும் பழியே தீர்க்கப்
பலியிட்டார்! ஈழத்தார் பதைத்த கண்ணீர்ப்
புயலிட்ட வேளையிலும் வெள்ளை நாட்டுப்
பொன்மனத்தார் சிறீலங்கா தன்னைக் கேட்டுச்
செயலிட்டார்! சினந்தார்கள் தீர்வைக் கேட்டார்!
செத்தவினம் எனினும்நாம் சொன்னோம் நன்றி!


எலைன்ஷன்டர் அமெரிக்க மனித மாதாள்
இராசபக்சா இயற்றிநின்ற கொடுமை தன்னை
அலையாக வைத்தவொரு அடுக்குச் சொன்னாள்!
அரக்கத்தின் வாய்ப்பாடு அடுக்கிச் சொன்னாள்!
கொலைவாளை வைத்தவர்கள் கூடா ரம்போல்
கொலைகொள்ளை கற்பழிப்புக் கூட்டாய்த் தந்த
வலைகாரர் எல்லாமும் வடிவாய்ச் சொன்னாள்!
வாதையினைக் கூறிநின்றாள் வையத் தார்க்கே!


ஊருக்குக் கதைசொல்லி இராச பக்சர்
ஒழிக்கின்ற நடிப்புத்தான் இன்னும் உண்டு!
போருக்குப் பின்னாலே பெயர்ந்தோர் எல்லாம்
போவார்கள் சொந்தவிடம் என்றே சொல்லி
மோருக்குப் பின்னாலே கள்ளை வைத்து
முடிச்செல்லாம் இராசபக்சா மொய்த்த நேரம்
தேருக்கு வடம்பிடிக்கத் தேசம் பல்லாய்த்
திரும்பிவிடக் கதைதருவார் தெளிவாய்க் கண்டோம்!


நூற்றுக்கும் மேலான போர்க்குற் றங்கள்
நேராகப் பதினாறாய் நின்ற நாளில்
கூற்றுக்கும் கூற்றாகிக் கொழுத்தி வைத்த
கொடுங்குற்றம் படத்தோடு கோடு காட்டி
ஆ(ற்)றுநூறு பக்கத்தில் அறிக்கை செய்து
அமெரிக்கம் அறிக்கையிடச் செய்த தென்றால்
தோற்றுப்போய் விட்டோமா? இல்லை யில்லைத்
துடிக்காதே என்தமிழா தேசம் வெல்லும்!


செப்ரெம்பர் பதினொன்று குறிக்கும் நாளில்
தீயாகி அமெரிக்கா துடித்த நாளில்
தப்புக்குப் பேர்போன புச்சின் ஆட்சி
தடையென்ற அறிவிப்பைத் தந்த போதே
ஒப்புக்கும் உயர்வுக்கும் உடைத்தோர் ஆன
உயிர்நிலத்து வேங்கைக்கும் இட்டார் வேலி
இப்புவியில் புலிக(ள்)தடை இணைத்துச் செய்த
இச்செயலே இன்றழிவுக் கெல்லாம் காலே!


இரண்டாயி ரத்தொன்பத் தியன்ற போரின்
ஈழமக்கள் சாவெடிலை எடுத்த காலம்
முரண்டுபிடித் தாடிநின்ற வெறியர் நாடர்
முற்றுமுழுத் திந்தியமும் சீனம் ரஷ்யா
திரண்டதொரு கந்தகத்தால் தமிழர் தீய்ந்துத்
தெருக்கூத்தை ஆடியபின் தேசம் செத்த
வரலாற்றை எழுதுகின்றேன் வாதைக் குள்ளும்
வையத்தில் சிலதேச வணக்கம் செய்தேன்!


நாடுகடந்த தமிழரசே நடுவீர் என்றே
நல்லநிலை ஒன்றுண்டு நலிந்தார் எம்மின்
ஊடுநின்று போர்க்குற்றம் இலங்கா மீதில்
உரைகாட்டும் செயலொன்றும் ஈழ மண்ணின்
கோடுநின்று மானிடத்தின் குறியும் சொல்லும்
கொள்கையொன்று அமெரிக்கக் கூட்டில் கண்டோம்!
ஓடுகின்ற குருதியொடும் உண்மை தேடி
உரைத்துவிட்ட அமெரிக்கம் வாழ்த்துச் சொன்னேன்!


வெண்பா!
மானுடத்தின் சாசனமாய் வந்தார் ஒபாமாவார்
தேனார் அதிபதியாய்த் தேர்வீரே-ஈனரிடம்
போர்க்குற்றம் சொல்லிப் பொழுதிட்ட காரணத்தால்
ஈர்த்தாரெம் நெஞ்சம் எடு!

பிற்குறிப்பு 1:செப்ரெம்பர்11-ஜோர்ச் புஷ் சனாதிபதியாக இருந்த காலத்தில், செப்ரெம்பர்-11-2001இல் பின்லாடன் செய்ததாகக் கருதப்படும் நியூயோர்க் உலகச் சந்தைக் கட்டிடம் சாம்பலான சம்பவம்)

பிற்குறிப்பு 2:ஒபாமா-இன்று அமெரிக்கச் சனாதிபதியாய் இருக்கும் ஒபாமா என்ற கறுப்பரின வழித்தோன்றல்

பிற்குறிப்பு 3: மூக்கா-மு.கருணாநிதி

(1-புலத்துக்காண்டம்- 2 யுத்த காண்டம் -3 ஈழ காண்டம் 4-வஞ்சர் காண்டம்(சிறீலங்கா) 5-வாகைக் காண்டம்(ஈழமண்ணின் சமகாலத்து இருப்பு) என நீளும் இந்த ஈழகாவியம். பொறுமையுடன் இதயத்தே இருத்துங்கள் ஈழநேசனின் அன்பு வாசகர்களே!-புதியபாரதி)

Wednesday, September 1, 2010

ஈழகாவியம் - 02

0 comments

1-உதயப்படலம்

நிகழ்காலம்-02

ஈழத்தைச் சுற்றிலும்.. இந்நாள்

(அறுசீர் விருத்தம்)

இந்துமா கடலைச் சுற்றி
எத்தரின் கூடா ரங்கள்!
கந்தகச் சுரங்கத் தோடு
கயவராய்ப் பலநா டுகள்!
செந்தமிழ் நிலத்துட் சிங்கச்
சேனையர்க் காகக் கொட்டி
வந்தவல் லரசார் எல்லாம்
வன்னியை முடித்தே விட்டார்!

தாங்கொணாக் கொடுமை யாலும்
தமிழரை இனமாய்க் கொல்லும்
தீங்குவார் ஆட்சி யாலும்
தீமையே உமிழ்வா ராலும்
ஓங்கிய அரக்கத் தாலும்
உயிர்நிலம் பறித்த லாலும்
வேங்கையர் ஆன மண்ணை
விசமிகள் எரித்தார் இந்நாள்!

முப்பது ஆண்டு காலம்
முடிவிலாப் போரி னாலே
அப்பிடச் சிங்க ராட்சி
அரக்கராய் அழித்தார் ஆயின்
துப்பிடும் தீர்வென் றாலும்
துட்டர்கள் வைத்தா ரில்லை
உப்பிநூற் றாண்டு காலம்
உலையினிற் தமிழர் செத்தார்!

இலங்கையைத் தங்கள் கையில்
இருப்பதற் காக வென்று
அலம்பிய கையின் ஈரம்
ஆறுமுன் ரசீவான் வந்தார்!
கலங்கிய குளத்தில் மீனை
கடகமாய் அள்ள வந்தும்
துலங்கிய அறிவில் லாமல்
துடித்தவோர் மரணம் கண்டார்!

யானைதன் கையி னாலே
மண்ணிடும் அதுபோ லத்தான்
ஏனையில் இராச பக்சா
இருக்கவும் இந்தி நாட்டார்
பானையில் ஆயு தத்தைப்
படைத்தனர் ஆனால் அந்தச்
சீனனைத் தடுக்க எண்ணிச்
செந்தமிழ் நிலத்தை விட்டார்!

ஈழமண் அழிப்பா ருக்கே
இந்தியம் கூட நின்றும்
பாழது தெரிந்தும் அள்ளும்
பணத்திடை சாக வென்று
தோழமைச் சோனி யாளின்
துட்டர சாங்கம் தன்னில்
கோழையர் கருணா நிதியார்
கோடரிக் காம்பாய் நின்றார்!

முன்னூறா யிரமாய் மக்கள்
முட்கம்பிக் கிடையே வைத்து
இன்னுமோர் கிட்லர் போன்றெம்
இனத்தையே மகிந்தன் கொன்றான்!
வன்னியை இராச பக்சா
வளைத்துமே சிதறச் செய்த
நன்னெறி இல்லா னுக்கே
நயந்ததே காந்தி வம்சம்!

சென்னையின் கோட்டை என்றும்
செந்தமிழ் ஆட்சி என்றும்
தன்னலம் ஒன்றிற் காகத்
தமிழ்தமிழ் என்றே சொல்வார்!
இன்னொரு இனமா அட
இரத்தமோ டுறவாய் நிற்கும்
அன்னையின் மக்கள் தன்னை
அழித்திடப் பார்த்தே நின்றார்!

புலியினர் என்ற வேங்கைப்
பொய்யிலார் ஏற்ற போரைத்
தொலைவெதும் இல்லார், பக்சத்
தீயரை ஓரா நாட்டார்
கொலைவளர் இலங்கத் தீவைக்
கொஞ்சிடும் நாள்தான் இந்த
அலையுளம் எழுது கின்றேன்
அஞ்சலாய் வரைகின் றேனே!

செத்திடும் தமிழச் சாதி!
சிங்களம் துடைத்த ழிக்கும்
புத்தரின் கோட்பா டெல்லாம்
புல்லருக் கில்லைத் துட்டர்
வைத்ததே சட்டம் வெந்து
மடிவனே தமிழன் என்றே
எத்தனை சொன்னோம்! அற்ப
இரசீவான் அறிந்தா னில்லை!

போரிலே தீரம் கண்டார்
புத்தியின் ஆரம் கண்டார்
பேரியற் தலைவ னான
பிரபாவைக் கண்டார் இந்த
வீரனே நாடு செய்தால்
வென்றொரு யூதம் போலே
தூரிகை ஆகும் என்றே
துடைத்தனர் இந்தி யத்தார்!

கொன்றிடும் சிங்க ராட்சிக்
கொடியவன் தன்னை ஓரார்
இன்றவன் குண்டில் தீய்க்கும்
இராட்சதம் தன்னைத் தேரார்
வன்னழிப் பிற்குப் பின்னே
வையவர் வந்தார்! கேட்டார்!
மன்பதைப் படலம் எல்லாம்
மடையருக் குரைத்தார் சென்றார்!

ஈழத்தின் எரிநாள் கொல்லும்
இராட்சதர்த் திருநாள் என்றும்
ஏழனர் வதைநாள் கூற்றர்
இழுத்திடும் பதைநாள் குச்சில்
ஏழையர் அழுநாள் வையம்
ஏதிடா விதுநாள் இன்னும்
வாழலாம் என்று சொல்லி
வருபவ ரெல்லாம் பொய்யே!

இந்தியம் சீனம் பாக்கி
இரச்சியா ஈரான் கியூபா
அந்தகம் இருபத் தாக
அச்சிலே வந்த போதும்
எந்தையும் தாயும் மன்னர்
ஏற்றிய தர்ம பூமிச்
சந்ததிப் போரின் கூர்வாள்
சரித்திரம் படைக்கும் ஓர்நாள்!

வெண்பா

வேங்கையாய் நின்றநிலம் வேரிழந்து போவதற்குத்
தீங்குமனத் திந்தியமே தீயிட்டார்-காங்கையில்
ஈழத்தே நின்று இராட்சதர்கள் கூட்டியள்ளக்
கூழக்கை இட்டாரே கொள்!

1-உதயப்படலம்

நிகழ்காலம் -03

இந்திராவுக்குப்பின் இந்தியா

(எழுசீர் விருத்தம்)

பாரதம் என்றும் பண்புநா டென்றும்
பாலபா டந்தனில் படித்தோம்!
வேரது ஓடும் வேதநா டென்றும்
வேள்வியும் ஓமமும் விளைக்கும்
ஈரநா டென்றும் இந்தியம் என்றும்
ஏடுகள் அன்றெலாம் இயற்றும்
சூரநா டின்று செல்லரித் திட்ட
சூதுநா டென்றெலோ ஆச்சு!

இந்திரா காந்தி ஏற்றிய ஆட்சி
இந்தியச் சரிதமார் சிறப்பாம்
தந்தையார் நேரு தங்கமார் மகளாய்த்;
தாங்கிய சகாப்தமே தனியாம்!
நொந்தவங் கத்தை நெம்பிட வைத்து
நிமிர்த்திய பிரதமர் அவளே!
எந்தவல் லர்க்கும் இன்னொரு நாட்டும்
இவள்பயம் கொண்டதே இல்லை!

மோதிலால் பேத்தி நேருவின் பிள்ளை
பெற்றனள் கல்வியொக்ஸ் போட்டில்!
நீதிதாம் கொண்டு நெஞ்சில் மானிட
நித்திலம் கொண்டதோர் பெண்ணாள்!
காதலன் பெரொஸ்காந் தன்னொடும் வாழ்வில்
கண்டனள் பிள்ளைகள் இருவர்!
மாதவக் காந்தி மகாத்மாவொடும் தேச
மகத்துவப் போரதும் கண்டாள்!

பேருறும் காந்திப் பிள்ளைகள் இருவர்
பெரியவன் ரசீவு,பின் சஞ்சய்
பாருவந் தேத்தப் படித்தனர், கணவர்
பற்றிய வாழ்க்கைவிட் டகன்றார்!
நேருவின் மகளாய் நின்றதோர் பேராள்
` நிகழ்வொடும் பிரதமர் ஆனாள்!
சீருற நின்ற சிறப்பொடு வாகை
செப்பிடும் பாரதம் வைத்தாள்!

வாருருப் பெற்ற வல்லமை நாடாய்
வளர்த்தனள் இந்திராத் தாயார்!
பாரிய விபத்திற் சஞ்சயும் இறந்தார்
பதைத்தவ ளாயினும் தந்தை
நேருயர் மகளாய் நிமிர்ந்தபா ரதத்தின்
நிழலென ரசீவொடும் நின்றாள்
பாருவந் தேற்றப் பாரதம் ஏற்கப்
பட்டொளி ஆகினள் பாரீர்!

ஈழமா மண்ணின் இதயமாய் நின்ற
இந்திராத் தாயரைக் கண்டோம்!
பாழராம் சேயார் பார்த்திருந் தழிக்கப்
பண்ணிய கலவரம் தன்னில்
ஆழமாய்ச் சொற்கள் அன்னையள் பகன்றார்
அகதிகள் தன்னையே ஏற்றார்!
வேழமா மென்க ஈழமாத் துயரை
விதைத்தனள் உலகெலாம் தானே!

தமிழவர் இதயம் தாங்கிய பெண்ணாய்
தந்தவர் இந்திராத் தாயர்
அமையவோர் ஈழம் ஆக்கிடும் தீர்வை
அரனென வைப்பளென் றிருந்தோம்!
சுமையொடு சுமையைச் சுமந்தவர் ஆனோம்!
சொர்ணமாம் அம்மையைச் சுடவே
கமழ்நிலம் முழக்கக் கண்ணிமை நீரிற்
கலந்ததே சரித்திரம் ஆச்சு!

இந்திரா வொடும்நம் ஈழமும் வெந்து
எடுத்தது சிவிகையே அவர்க்காம்!
சந்திசந் திவாழைக் கமுகுதோ ரணமும்
சாற்றிய பறைகளும் வைத்து
எந்தவோர் மகற்கும் இல்லையென் றிடவே
ஈழமும் எரிந்தது கண்டோம்!
வந்தது வினையே வந்தர சீவார்
மாற்றினார் கதையினைத் தானே!

ஈழமா மண்ணின் எரிநிலை முற்றும்
இன்றுவந் தவரெலாம் தெரியார்!
ஆழவே ரூன்றி அரக்கமே கொன்றிடும்
ஆனநூற் றாண்டினைத் தெரியார்
சூழவே தங்கள் சுயநலம் கொண்டு
சுழல்பவர் வந்துமே தமிழர்த்
தோழமை தின்றார் தேசெலாம் எரித்தார்
தீய்ந்தது ஈழமா மண்ணே!

இந்தியப் போக்கின் இழிநிலை யாற்றான்
இன்றுபல் லாயிரம் செத்தார்
கந்தகத் தீயைக் கக்குமொரி லங்காக்
கயமையைத் தெரிந்திடாக் கணக்கர்
வந்தனர் அமைதிப் படையெனும் பெயரில்
வற்புணர்ச் சாவினை வைத்தார்!
இந்தநூற் றாண்டு ஈழமே சாவொடு
இயற்றிய தெல்லமும் இவரே!

வேண்டவே வேண்டாம் விசரிது என்றே
வேங்கையின் மைந்தனும் சொன்னான்
காண்டிபம் எங்கள் களமது சிங்கக்
கடியரை வென்றிடும் போங்கள்
தாண்டி வந்தால் தமிழரின் வாழ்வில்
தருவது எல்லமும் தீயே!
வேண்டினன் பிரபா வேடனன் ரசீவால்
விளைந்ததே ஈழமார் எரிப்பே!

விடுதலைப் போரில் விளைதமிழ் ஈழம்
வேங்கையாய் மலர்ந்ததும் இந்நாள்
படுகொலைப் பாதை பரவுநாள் எல்லாம்
பரவிய குரதியின் சேற்றில்
நடுநிலை கெட்டு நாடெலாம் விரித்த
நச்சுவா யுதமெலாம் வைத்தே
கெடுதலைச் செய்த சிங்களப் பதரர்
கொழுத்தினர் தமிழ்நிலம் முழுதும்!

ஈழமார் கதையே எடுத்தறி விக்கும்
இந்தநாள் உள்ளுவ தெல்லாம்
ஆழமாய்க் கொண்ட அவனியின் போக்கை
அடுக்கிய தாகவே செல்வேன்!
சோழவை சேரர் பாண்டியர் மன்றில்
சிறப்பிட நின்றவள் அன்னை
தோழமை தந்த ஈழமண் துரவித்
தீந்தமி ழாளொடும் வருவேன்!

இந்திரா சாக இனிப்புகள் வழங்கி
இலங்கையி ருந்ததைக் காணார்!
வந்தணி வகுப்பில் வந்துர சீவான்
வாங்கிய அடிதனும் வருந்தார்!
இந்தியப் பாதை எதிரியாய்த் தமிழர்க்
கிருப்பவர் தன்னையே வைத்து
இந்தநூற் றாண்டை எரித்தனர் என்றே
ஈழமே நாளெலாம் எழுதும்!

வெண்பா!

இந்திரா நீத்தாள் இரசீவான் வந்திங்கே
சிந்தனையி லோராமற் செய்தகளம்-சிந்தார்
புலிகள் அழியப் பொறிவைத்த தாலே
வலிமை இழந்ததுவே மண்!

- புதியபாரதி

Monday, August 30, 2010

ஈழகாவியம் - 01

0 comments

கடவுள் வணக்கம்
(நேரிசை வெண்பா)

விநாயகர் காப்பு
Ganesha_image

அங்குசத்தான் ஐங்கரனான் ஆனைமுகத் தானென்றே
எங்கெவர்க்கும் முன்வணக்கம் ஏற்போனே-இங்கீழ
நேசர்க்காய் மண்ணின் நெடுஞ்சரிதம் தானெழுதும்
தேசப்பா உன்காப்புத் தேன்!

யேசு காப்பு
சிலுவையிலே பாடுகளைத் தோளிற் சுமந்த
வலுவை எமக்கருள வல்லாய்-நிலுவையிலே
வல்லரக்கம் தந்த வரலாற்றை நானெழுத
நல்ல கவியருள்வாய் நா!

அல்லா காப்பு
Jesus_image

அல்லாவே எல்லெவர்க்கும் ஆண்டருளே செய்திடுமோர்

வல்லவனே என்றனுக்காய் வாராயோ-சொல்லகவி
ஈழவர லாற்று எழுசரிதம் நாளையிலும்
ஆழமென வையகத்தை ஆக்கு!

செந்தமிழ்க் காப்பு
சங்கம் இருந்துலவிச் சாரலிலே அங்கவையாய்ப்
பொங்குதமிழ் என்றேதான் பூத்தவளே-தங்கநிலம்
ஆர்க்கும் தமிழீழ அன்னைத் திருநாட்டின்
கார்ப்பாகும் செந்தமிழே காப்பு!

Islam_image
காவியங்கள் மேவிவரக் காணும் கவிஞரொடும்
சீவியங்கள் வைத்தவளே செந்தமிழே-மேவியொரு
ஈழமணிக் காந்தள் எழிற்சரிதம் தேர்ந்தெழுதும்;
ஆழமனம் மீதூர்ந்து ஆள்!

வைகறையில் உன்சிறகு வார்ப்பெடுக்கும் பொன்நாவில்
மைகரைத்துப் பாவலங்கள் வண்ணமிடும்-கைகளிலே
போர்ச்சிறகை ஏந்திப் புலிமகளாய்ப் போனமகள்
வார்ச்சிறகைக் காவியமாய் வார்!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் தேன்தமிழே
வில்தோன்ற மன்னரிட்ட வித்தகியே-நல்லதமிழ்
வஞ்சி மணிமகளே நெஞ்சச் சுனைமருங்கில்
செஞ்சொல் வரமளிப்பாய் தேவி!

பாரதிபோற் பாவலர்க்கும் பாவீழச் சுந்தரர்க்கும்
சாரதிபோல் ஆனதமிழ்ச் சாம்பவியே-வாராய்
கலையும் கனிமொழியும் கல்வியொடும் பண்ணும்
அலையும் சரிதமுமாய் ஆர்!

--------------------------------------------------------------


என்(முன்)னுரை
(நிலைமடி மண்டல ஆசிரியப்பா)

ஈழவர் சரிதம் எழுதவும் என்றவோர்
தோழமை கண்டேன்!, துய்த்துநான் ஆயப்
புலவனும் இல்லை! பூமியின் சாத்திரம்
பலதும் ஏடுறப் பயின்றவ னில்லை!
சட்டவா தியாய்ச் சார்பெயர்ப் பின்னதாய்ப்
பட்டவா தியாய்ப் படமெதும் இல்லைவான்!
மலையின் மீதும் வரைகடல் மீதும்
அலையும் காற்றை அறிந்தவன் இல்லை!
சிலையின் நுணுக்கச் சிற்பியும் அல்லக்
கலையின் வார்ப்புக் கனிந்தவன் அல்ல!
தாயாள் தந்த தமிழணங் கானவள்
தீயாய் என்னுட் சுடர்தந் ததினால்
தீரா வேட்கைத் தீமையைக் காய்க்கும்
பாரா யணத்தைப் படித்ததால் மட்டும்
என்னுள் எரிந்த அகல்விளக் கோடுநான்
மின்னிச் சுடரும் மிதவையில் ஊர்ந்தேன்!
சன்னமாய்ப் பொழியும் சரிநிகர்க் கவிஞர்
தன்னில் அடைக்கலம் தானுவந் தேனே!
நானும் என்னுள் நயந்தவித் தகியும்
தேனும் பாலுமாய்த் தேசெலாம் திரிந்தோம்!
சுந்தரப் புலவன் செப்பிய கூழைக்
கந்தரலங் காரர் கசிந்த பக்தியைத்
தேவரப் புகழைத் திருவா வடுதுறைப்
பாவரெம் பாவைப் பருகினேன் ஆதலின்
என்னுள் நானே எனக்குஅவ் ஏந்திளை
தன்னிற் படிந்தஅத் தமிழவள் கண்டேன்!
மகாகவி யொடும் மதுரமார் கவிஞர்
புகார் செப்பிய புலவர்கள் பாடும்
அரங்குகள் கண்டு அதிர்ந்தஅந் நாளில்
பத்தும் ஆறும் பாய்ச்சிய போதே
சித்தம் எனக்குச் சில்லிடக் கண்டேன்!
குருதி வழியக் கேடவர் வெட்டத்
திருகிய கூட்டத் தெறிப்புட் சிக்கித்
தமிழர்கள் ஆயிரம் தலையுடல் கக்கிச்
சுமையாய் விழுந்த தெருவொடும் நாட்கள்
அகலக் கண்ணில் ஆறாய் ஓடின!
பகலும் இரவும் பற்றிட எரிந்தேன்!
விழியைக் கனவை விதைப்பின் அறுவடைப்
பழியைச் சுமந்த பாராள் மன்றம்
அரித்து விழுத்திய அகத்தமிழ் நிலத்தை
பிரித்துப் பறித்திடும் பேய்களைக் கண்டேன்!
வயல்வெளி தோறும் வார்முற் றைவெளி
அயலொடும் தமிழர் ஆர்த்தகண் ணீரைத்
தகதக தகவெனத் தமிழநற் தலைவர்
புகபுகப் புகலெனப் புட்டுரை யாக்கிக்
கனத்ததோர் வேளை கலவரச் சிங்களர்
தனத்த காடையர் தாக்கிய போதும்
எனக்கென் மானிடம் எகிறிப் பாய்ந்தது!
மனப்புயற் சூறை மண்ணைக் கரைத்தது!
செல்வாக் கிழவன் செப்பிய அறவழி
செல்லாக் காசாய்ச் சிக்கிய போதும்
சில்லாய்த் தமிழன் சிதறிய நாட்களும்
எல்லாம் ஆக எனையழித் தனவே!
அறுபது தொடங்கிஎன் அறுபது ஓடியும்
உறுவதைக் காலம் ஓய்ந்திட வில்லை!
சதியினர் தன்னிற் சரிந்தஎம் இனத்தார்
மிதிபடக் கண்டேன்! மிலேச்சர் தம்மிடை
ஆட்சியும் பகிர்வும் அளந்த தீர்வெனும்
காட்சி எல்லமும் கனத்தபொய் என்பதும்,
நாளை ஒருநாள் நம்அடி இறந்த
வேளைக் கொருகால் விதிர்ப்பை எழுதிடாச்
சாலைக் குள்ளெலாம் சரிதம் சிரிப்பதும்,
வேலைத் தழுவிய வேங்கைமண் புழுதி
கண்ணிற் பரவிக் கசங்கிட வைப்பதும்
எண்ணியே இற்றைஇவ் ஈழமா சரிதம்
மண்ணில் வரைந்தேன்! வாஞ்சையின் தேசம்
நண்ணிடும் போதிலெம் நாள்வரு மேயடா!

வேறு
(இன்னிசை வெண்பா)
காடையர் தீயராய்க் காட்சியாய் நிற்பவர்
கூடையில் தீர்வொடும் கூப்பிடு வாரொடா!
ஆடாய்க் கசாப்பிடும் ஆட்சியை மாற்றஎம்
நாடு கடந்தஎம் நாடிடு வாயடா!

ஈழகாவியம் எழுதிடும் போதுகள்..
1- கதவம்

வெண்பனியாள் வந்துவிழ
வெள்ளையெனப் பாரெழுதும்
வேளை ஒன்றில்
மேபிமர வான்சோலை
விட்டிலைகள் கொட்டிவிட
வெட்கி நிற்கும்!
தண்குளிரிற் சார்நிழலே
தார்க்கருப்புக் கோடுகளாய்த்
தந்த போதில்
தாடைக்கும் மேலாடை
தாங்கியவன் கணினியோடு
தமிழைக் கோர்த்து
கண்ணமுதப் பாட்டெடுக்கக்
கவிஞனுக்கு வாழ்வுதந்த
கனடா மண்ணில்
காரீழம் பற்றியொரு
கனசரிதம் வைக்கவெனக்
கண்டேன் சேதி!
எண்ணலிலா வென்சாதி
இராட்சதராற் சாகவைத்த
இலங்கா ஆட்சி
எமனான காலமதில்
ஈழமெனும் வரலாற்றை
எழுது கின்றேன்!

இருபத்தி யொன்றாகும்
இந்நூற்று ஆண்டென்றன்
இனத்தைக் கொன்றார்
இரும்தமிழர் நிலமெல்லாம்
இராணுவத்தால் மோதியதை
இழுத்துக் கொண்டார்!
குருபத்தி கொண்டவர்கள்
கூடலிறை கண்டவர்கள்
குடிலாய்ச் செத்தார்
கொடியவர்க்குள் நிமிர்ந்தெழவே
கொள்கையினை வகுத்தெடுத்த
கூட்டம் செத்து
ஒருவக்கும் இல்லாமல்
உடல்சிதறிப் போகட்டும்
என்பா ரோடே
இந்தியத்தின் பேய்புகுந்து
ஈழத்தின் மாமறவர்
இல்லா தொழியப்
புருவைத்துப் புண்ணாக்கிப்
பிச்சையரைக் காணாரைப்
பிச்சை யாக்கிப்
பேரீழம் தனைக்கொன்றார்!
போரோடு இனம்காத்த
புலிகள் செத்தார்!

ஆன்றகொடும் ஆட்சியதின்
அலைகளொடும் என்தமிழன்
அள்ளுப் பட்டே
அகிலமெலாம் இலட்சமென
அகதியெனும் குடிசாராய்
அகப்பட் டானாய்த்
தோன்றுநிலம் வெள்ளைநிறத்
தேசாளும் நகரமெலாம்
திருவும் கல்வித்
தேசாளும் கரமனைத்தாய்
திருத்தமிழன் வந்தானெம்
துயர்கள் கண்டான்!
ஈன்றநிலம் எல்லாமும்
இராட்சதர்கள் கையகத்தில்
இழுக்கப் பட்டே
இடர்பதிந்த முகாம்களிலே
ஏந்திளைகள் வன்புணர்வில்
இறந்தார் அந்தோ!
மூன்றிலட்சம் அகதிகளாய்
முடிச்சிறுகக் குச்சுகளில்
மூத்தோர் சிறுவர்
மெய்த்தாயர் தந்தையென
மொய்த்தாரில் வெந்ததிந்த
வேளை அம்மா!

வாராமல் வந்ததொரு
மாமணியாம் கரிகாலன்
மண்ணில் நின்றே
வாதையெலாம் தீர்ப்பதற்காய்
வடிவெடுத்த ஆயுதத்தை
வைத்தி ருந்தான்!
போராக்கி வைத்திருந்த
பேயாட்சிச் சிங்களத்தின்
பிடியிற் சிக்கிப்
பெருநாடு சீனமொடும்
பேரிந்தி உருச்சியமும்
பாக்கிஸ் தானும்
நாராக்கித் தமிழரினை
நாசமிடச் செய்வதற்காய்
நரியாய் நின்றார்!
நாளெல்லாம் ஆயிரமாய்
நலிவினத்தின் சாவினிலே
நாடு பல்லாய்க்
கூராக்கி வைத்தபெரும்
கொடும்காதைப் பின்னலெலாம்
கொடிதே ஆயின்
கொஞ்சுதமிழ் வெல்லுமென்ற
வஞ்சிநிலப் பெருங்கீற்றே
கொள்ளாய் நெஞ்சே!

- ஈழநேசன் -புதியபாரதி