Sunday, March 17, 2019

நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம் -புதுவை இரத்தினதுரை

0 comments


“புதுவை இரத்தினதுரையின் படைப்பிலக்கியம், தமிழீழ விடுதலைப் போராடடத்திற்கு ஒரு உந்துசக்தியாக இருக்கிறது. கவிதை உலகில் போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பெருமை அவரைச் சாரும் .”
– தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்கள்
புதுவையின் ஆழ வரிகளை ஒரு முறை நின்று கேளுங்கள்
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை – போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள செய்தவர்.
  • “இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்
    எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”
    “துயரம் அழுவதற்காக அல்ல… எழுவதற்காக
– இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால், ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை…

”அட மானுடனே!
தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்
பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.
அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில்தானே.
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவாவதும்
தாய்நிலத்தின் மடியில்தானே.
நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”
வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும் இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது பதினான்காவது வயதில் கவிதை எழுத தொடங்கி, முப்பத்தேழாவது வயதில் (1935) விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர், ஒரு சிற்பக் கலைஞரும் கூட.
“எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும் என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில் கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது. இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன் கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்” என்கிறார்.
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை படித்தும், கவிதைப் பாடல்களை கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருப்பதை சென்னையில் என் அண்டை வீட்டில் வாழும் ஈழத் தமிழ் நண்பர் யொனி, சொல்ல கேட்கும் பொழுது – கவிஞரின் “கவிதாயுதம்” இருப்பதிலேயே உயர் கருவியாக மதிக்கப்பட்டு – மெய் சிலிர்க்க வைக்கிறது.
ஈழமண்ணில் தோன்றிய மிகச்சிறந்த ஆய்வாளர்களும் ஒருவரான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள், புதுவை இரத்தினதுரை கவிதைகள் பற்றி குறிப்பிடும்பொழுது,
  • “…இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்
    எல்லைகள் மீறி யார் வந்தவன்.
    நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
    நின்றது போதும் தமிழா – உந்தன்
    கலைகள் அழிந்து கவலை மிகுந்து
    கண்டது போதும் தமிழா இன்னும்
    உயிரை நினைத்து உடலை சுமந்து
    ஓடவா போகிறாய் தமிழா…”
என நெருப்பாக தொடங்கி நீளும் ஒரு பாட புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார். அந்த பாடல் வரிகள் எத்தகைய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன் – ஈழத்திலுள்ள திருநல்வேலி சந்தியில் 1993இல் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் ஒருவர் தேநீர் குடித்துவிட்டு, சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு குளிருக்காக தலையையும் காதையும் மறைத்து தான் போட்டிருந்த போர்வையுடன் மிதிவண்டியில் ஏறிய நேரத்தில் இந்தப் பாடலும், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும் ஒலிபரப்பாக மிதிவண்டியில் அப்படியே நின்றபடி கேட்டுவிட்டு சென்றார். புதுவை இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துக்களையும் நெகிழ்ச்சியான அனுபவங்கலையும் பாடலில் கேட்டு, உறைந்துபோன அந்த ஈழத் தமிழனின் செயலை கண்டு மனம் நெகிழ்ந்தேன்” என்று பூரிப்போடு கா.சிவதம்பி எழுதியுள்ளார்.
விரும்பி இடம்பெயர்வது வேறு – விரும்பாமல் வன்முறை செய்து இடம்பெற வைப்பதென்பது வேறு. புலம் பெயர வைப்பவன் – இறுதியில் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அவனை மன்னிக்கவே கூடாது என மனம் பதற வைக்கிறது புதுவை இரத்தினதுரையின் சில படைப்புகள்.
  • “ஊர் பிரிந்தோம்
    ஏதும் எடுக்கவில்லை
    அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
    பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,
    மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,
    காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி,
    காணியுறுதி,
    அடையாள அட்டை அவ்வளவே,
    புறப்பட்டு விட்டோம்.
    இப்போ உணருகிறேன்
    உலகில் தாளாத துயரெது?
    ஊரிழந்து போதல் தான்.”
இந்த நிலை – அரை நூற்றாண்டாக… ஈழமண்ணில் தொடர்கிறது. இது நாளையும் தொடரும் என்கிற போது… சொல்லி புலம்ப சொற்களில்லை. இயலாமையால் மனம் மௌனமாகிறது.
  • “தம்பி பெஞ்சாதியின் தமையன் வீட்டில்
    இரவில் பாய்விரிக்க எங்கு இடமிருந்தாலும்
    அங்கு உடல் சரிப்பு.
    வீட்டுக்காரரின் தூக்கம் கலையுமென
    இருமலைக் கூட உள்ளே புதைப்பு
    களவுக்கு வந்தவன் போல மனைவியுடன் கதைப்பு
    கிணற்று வாளி தட்டுப்பட்டாலே படபடப்பு
    ஒண்டுக்கிருத்தல்,
    குண்டி கழுவுதல்
    ஒவ்வொன்றையும் பயந்தபடி ஒப்பேற்றல்.”
இப்படி காலம் காலமாக சிதைந்தும் – மனம் சிதையாமல் இருப்பதெப்படி?. நம்பிக்கை. உண்மையின் மேல் ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் பெரு நம்பிக்கை. இந்த நூற்றாண்டிற்கு மட்டுமல்ல – இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழனின் விடுதலைப் போராட்டத்திற்கான இந்த “எரிசக்தி” கையிருப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
  • “இன்று நடை தளர்ந்தும்
    நரை விழுந்தும் தள்ளாடும்
    ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய இளைஞர்களே!
    வெள்ளைத் தோல் சீமான்கள்
    வீடு திரும்ப மூட்டை கட்டியபோது
    நீங்கள் ஏன் ஊமையானீர்கள்?”
என்று ஒரு ஞாயமான வினாவை தனது கவிதை மூலம் புதுவை இரத்தினதுரை எழுப்புகிறார். செய்யவேண்டிய வேலையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்து விட்டால் தலைமுறைகள் ஏன் தத்தளித்தாடுகிறது என்று கேட்ட கவிஞர், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் சுருக்கென சூடு வைக்க தயங்கவில்லை,
  • “உடல்கீறி விதை போட்டால்
    உரமின்றி மரமாகும்
    கடல் மீது
    வலை போட்டால்
    கரையெங்கும் மீனாகும்.
    இவளின் சேலையைப் பற்றி
    இந்தா ஒருவன்
    தெருவில் இழுக்கின்றான்
    பார்த்துவிட்டுப்
    படுத்துறங்குபவனே!
    நீட்டிப்படு.
    உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த
    அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.
    ‘ரோஷ’ நரம்பை
    யாருக்கு விற்று விட்டுப்
    பேசாமற் கிடக்கின்றாய்?”
இத்தகைய அற்புத படைப்பின் மூலம் – ஈழத் தமிழ்மக்களை போராட்ட களத்திற்கு செல்ல வழியமைத்தவர் புதுவை இரத்தினதுரை.
  • “……சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது?
    இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
    எத்தனை பேரைத் தீய்த்து
    இந்த தீ வளர்த்தோம்.
    எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
    அணைய விடக்கூடாது
    ஊதிக்கொண்டேயிரு.
    பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்
    ஊதுவதை நிறுத்தி விடாதே
    இந்தத் தீயின் சுவாலையிற்தான்
    மண் தின்னிகள் மரணிக்கும்.”
மீண்டும் ஊரில் நுழைய – தெருவில் நடக்க – தன் வீட்டு நிழலில் களைப்பாற துடிக்கும் என் உறவு ஈழத்தமிழினத்திற்கு எப்போது விடிவுகாலம் பொறக்கும் என்று எண்ணும்படியாக துக்கம் தொண்டையை அடைக்க என்னை நிலைதடுமாற செய்தது புதுவை இரத்தினதுரையின் கவிதைகள். அவரின் படைப்பை மொத்தமாக ( நூல்: பூவரசம்வேலியும் புலுனிக் குஞ்சுகளும்; ஆசிரியர்: புதுவை இரத்தினதுரை; வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 432; விலை: ரூ.300) படித்து முடித்தபோது மண்ணைப் பற்றியும், மண்ணுக்கும் மனிதனுக்குமான பாசம் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும், உறவுப் பிரிவின் துயரங்களைப் பற்றியும், வாழ்க்கையின் உன்னதங்கள், அழகியலைப் பற்றியும், புரட்சியைப் பற்றியும், அறுந்துபோகாத உறுதியான நம்பிக்கைகள் எனக்குள்ளே கூடியிருப்பதை உணர்கிறேன்.
உண்மையான ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக புலம்பினார் புதுவை இரத்தினதுரை. மனித நேயமுள்ள உலகத்து மனிதர்களிடம் புலம்பினார். நெஞ்சு வெடித்து இனத்துக்காகக் கதறிய இந்த கவிஞனுக்கு என்ன சொல்ல போகிறது இந்த உலகம். பதறி துடிக்கும்போது கவனிக்காமல் போய் வழக்கம் போல் எழவுக்கு துக்கம் விசாரிப்பது போலவே இந்த பதிவையும் வருத்தத்தோடு எழுதுகிறேன்.
குறைந்த அளவு இரக்கத்தையாவது உலகம் காட்டியிருக்கக் கூடாதா ஈழமக்களுக்கு..? என் வாழ்நாள் முழுவதும் நினைத்து வெட்கப்படுவேன்.
  • ஈழக் கவியரசே
    நீயும் என்ன
    பாவம் செய்தாயோ
    நானறியேன்
    ஈழத்தமிழனாய்
    நீ பிறந்ததை தவிரஎம்மின மக்களை
    எவனும் மதிக்கவில்லை
    இந்த உலகில்சிங்களவனாவது
    பறவாயில்லை
    தமிழனை மிருகமாய்
    மதித்து சுட்டுக்
    கொல்கிறான்ஈழக்கவியரசே
    என்ன பாவம்
    செய்தாயோ
    நானறியேன்
    ஈழத்தமிழனாய் நீ
    பிறந்ததைத் தவிரநீ கூவியதெல்லாம்
    கவிதையானது
    உன் கவி கேட்டவர்
    கண்களில் கண்ணீரெல்லாம்
    கடலானதுபிறந்த மண்
    சுட்டிருந்தாலும்
    விட்டுப் பிரிந்தால்
    காலமெல்லாம் நின்று
    வலிக்கும் மனமென்று
    பாட்டில் அழுதவன் நீபாவி நீபக்கத்து நாட்டில்
    பிறந்திருந்தால்
    தமிழனை மறந்து
    தமிழ் எழுதி இருந்தால் கூட
    தமிழர்களே விழா எடுத்து
    உனக்கு
    விருது வழங்கி
    பாராட்டு விழா நடத்தி இருப்பார்கள்
    ஏன் புதுவை நீ அமெரிக்காவில்
    மைக்கேல் யக்சனாய்
    பிறந்து இறந்திருந்தால்
    எத்தனை தமிழர்கள்
    அழுது கவிதையால் உனக்கு
    மறுமொழி போட்டு இருப்பார்கள்
    படுபாவம் நீ
    தமிழ்கவி உன்னை கொன்ற
    சிங்களவன் துப்பாக்கி கூட
    தான் சிரித்ததற்காய் ஒரு
    தடவையாவது அழுதிருக்கும்
    ஆனால்
    நீ இறந்த தகவலை
    கண்ணீரோடு பகிர்ந்த என்
    கண்ணீரை துடைக்க கூட
    ஒரு வார்த்தை இட இங்கு
    எந்த தமிழனும் இல்லை
    என்பதால்
    ஈழத்தமிழன் நானும்
    பாவம்தான்….
    யாரும் உனக்கு
    அனுதாப அஞ்சலி
    தெரிவிக்காமல் போனாலும்
    என் கண்ணீர் கவி எழுதினால்
    அது உன் இறுப்புக்காகத்தான்
    இருக்கும்
  • புதுவை இரத்தினதுரை அவர்களின் உலைக்களம் கவிதை- நூல் தொகுப்பு
  • எஞ்சியவற்றில் வாழ்வேன் நான் – புதுவை இரத்தினதுரை

மாவீரர்கள் துயிலுமில்ல பாடல் உருவான வரலாறு !

0 comments
1980களின் தொடக்க பகுதியில் காசியானந்தன் அவர்களின் பாடல்களை தேனிசை செல்லப்பா பாடி முதல் ஒலிப்பேழை வெளிவந்தது. 1985 காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அருச்சுனா – இவர் பின்பு கடலில் வீரச்சாவடைந்தார் இசைப்பாடலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது வீரச்சாவால் அது தடைப்பட்டது. திலிபனின் உண்ணாநோன்பின் போது வசதிகள் ஏதுமற்ற நிலையில் காசிஆனந்தன் அவர்களின் இரு பாடல்களும், ஒரு பாடல் திலீபன் அழைப்பது சாவையா… புதுவை அண்ணரின் இரு பாடல்களும் ஒரு பாடல் வாச மலர் ஒன்று வாடிக்கிடக்கின்றது. யாழில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
திருமலைச் சந்திரனுடன் பலர் இப்பாடலை பாடினார் இந்தியப் படை இங்கு நிலைகொண்டிருந்த வேளை தமிழ்நாட்டில் புதுவை அண்ணரின் முயற்சியால் புயல் கால இராகங்கள் அந்நியர் வந்து புகல் என்ன சூதி, களத்தில் கேட்கும் கானங்கள், பாசறைப் பாடல்கள், என்பன ஒலிப்பேழைகளாக வெளிவந்தன. 1990 இல் யாழ்ப்பாணத்தில் இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற ஒலிப்பேழை வெளியீட்டுடன் பல ஒலிப்பேழைகள் வெளிவரத் தொடங்கின வேங்கைகளின் விடுதலை வேதங்கள் என்ற ஒலிப்பேழைக்காக புதுவை அண்ணரால் எழுதப்பட்ட பாடலை தலைவர் மாவீரர் நாளுக்குரிய பாலடலாகக் வேண்டுமென விரும்பியதையடுத்து அந்தப் பாட்டில் சில வரிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மாவீரர் துயிலமில்லத்தில் பாடுவதற்கான பாடலாக வெளிவந்தது.

கண்ணனின் இசையில் வர்ண இராமேஸ்வரனுடன் பலர் அதை பாடினர். அதில் முதல் நள்ளிரா வேளையில் நெய் விளக்கேற்றியே… ஏன்றிருந்த வரி பின்பு மாவீரர் நினைவொலி நேரம் மாற்றப்பட்டபோது வல்லமை தந்துமே என மாற்றப்பட்டது. இந்ந மாற்றப்பட்ட வடிவமே இன்று நாம் கேட்கும் பாடலாகும். மாவீரர்களை புதைக்கத் தொடங்கிய பின்னே மாவீரர் மயானம் சுடுகாடு, மாவீரர் துயிலுமில்லமென அழைக்கப்பட்டது. 1990 இல் மாவீரர் விபரப் பட்டியலை கூராக்கும் பணி தலைவரால் என்னிடம் தரப்பட்டது.
மாவீரர் படங்கள் அவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டன. மாவீரர் விபரங்கள் அப்போது ஈழமுரசு செய்தித் தாளில் வெளியிடப்பட்டு எம்மிடம் இருந்து. தவறுகள் திருத்தப்பட்டன. இராதயன் அண்ணரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி அங்கு மாவீரர் படங்களை தாங்கிய மாவீரர் ஏடு ஒன்று அச்சிடப்பட்டது. தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை அதிலிருந்த தகவல் தவறுகள் காரணமாக அதனை வெளியிட வேண்டாமென தலைவர் கூறியதையடுத்து அது வெளியிடப்படவில்லை.
1990இல் மாவீரர் நாளுக்காக தலைவர் முதன்முதலில் உரை நிகழ்த்தினார். அன்றிலிருந்து அவரது மாவீரர் நாள் உரை தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்கால நடவடிக்கைகளை அவர்களது எண்ணங்களை வெளிப்படுத்து ஒரு கொள்கை உரையாக எல்லோராலும் பார்க்கப்படுகின்றது.
அந்த உரைக்கு உலகெங்கும் மிகுந்த மதிப்பு தரப்படுகின்றது. 1991ஆம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் கண்ணன் வர்ண இராமேஸ்வரன் குழுவினர் மாவீரர் மேடையில் நின்று முதன்முதலில் மாவீரர் நினைவுகூரற் பாடலை பாட கோட்டையிலிருந்து சிங்களப்படை ஓடியது. அப்போதைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கேணல்.பானு அவர்களால் அங்கிருந்து அதன் தாங்கியுடனையே கோண்டுவரப்பட்ட மணி மூலம் நினைவொலி எழுப்பப்பட அங்கு கூடியிருந்தோர் எல்லோரும் வீரம் பெருமிதம் கவலை என பல்வேறு உணர்வுகளுன் கண்ணீர் மல்க மாவீரரை நினைவு கூர்ந்த அந்த நாளை மீண்டும் நினைவு கூர்கையில் மெய் சிலிர்க்கின்றது.
திரு.யோகரட்ணம் யோகி
(2007 ஆம் ஆண்டு)
**
மாவீரர் நாள் அன்றும் விடுதலைப் புலிகளின் போராளிகளின் இறுதிச் சடங்களின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். புதுவை இரத்தினதுரை இந்தப் பாடலை இயற்றியிருந்தார். வர்ண ராமேஸ்வரன் இப்பாடலைப் பாடியிருந்தார்.
முழுப் பாடல்
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

<iframe frameborder="0" width="480" height="270" src="https://www.dailymotion.com/embed/video/x6wsw0n" allowfullscreen allow="autoplay"></iframe>

எஞ்சியவற்றில் வாழ்வேன் நான் – புதுவை இரத்தினதுரை

0 comments


சுவடுகள் பதியுமொரு பாதை… 21- பூங்குழலி வீரன் –
நவம்பர் 27. தமிழீழத்தின் தேசிய மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போரில்வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைத்துப் போற்றும் நாளாக அந்நாள் விளங்குகிறது. அன்றைய தினத்தில் மலேசிய மாவீரர் நாள் நிகழ்வில் வழக்கம்போல் நானும் பங்கெடுத்திருந்தேன்.
“மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! என்ற மாவீரர் நாள் பாடல் என்னை வந்தடைந்திருந்த போது இப்பாடலை எழுதிய புதுவை இரத்தினதுரை என் நினைவுகளுக்குள் வந்திருந்தார்.
புதுவை இரத்தினதுரை யாழ்ப்பாண மாவட்டம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். கவிஞர், சிற்பக்கலைஞர், தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுத்துறையில் முக்கியபங்காற்றியவர் என எண்ணற்ற துறைகளில் ஆளுமை நிறைந்தவர்.
வானம் சிவக்கிறது, ஒரு சோழனின் காதற் கடிதம், நினைவழியா நாட்கள், இரத்த புஷ்பங்கள், உலைக்களம், பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் போன்றவற்றை இவரது படைப்பிலக்கியங்களாக நாம் கவனத்தில் கொள்ளலாம்.
“ஊர் பிரிந்தோம்
ஏதும் எடுக்கவில்லை
அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
பருப்பு, இரண்டுபாய், இருமல்மருந்து,
மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,
காற்றுப் போய்க் கிடந்த மிதிவண்டி,
காணியுறுதி,
அடையாள அட்டை அவ்வளவே,
புறப்பட்டுவிட்டோம்.
இப்போ உணருகிறேன்
உலகில் தாளாததுயரெது?
ஊரிழந்து போதல்தான்.”
இந்த கவிதையை வாசிக்கின்ற போது மிக அண்மையில் படித்த ஓர் ஆப்பிரிக்க அகதியின் கவிதை நினைவுக்கு வருகிறது. அந்த கவிதை இப்படியான ஒரு காட்சிப்படுத்தலோடு இருக்கிறது. “புலம்பெயர்ந்து நாங்கள்இங்கு சிந்தியிருக்கிறோம் ஆப்பிரிக்க நினைவுகளுடன். ஆனாலும் வாய்திறந்து ஒரு பாடல் கூட பாட முடியவில்லை. கடலென வழிகிறது கண்ணீர். நினைவுகள் முழுக்க தாய்நாடும் போற்றி வாழ்ந்த வீடுமாக மட்டுமேஇருக்கிறது.ஒரு பாடல் கூட பாட முடியாத இந்த நாட்டை விட்டு ஓடி வந்துதன் தாய்நாட்டிடம் சரணடைந்து விடவேண்டும்” என்பதாக முடிகிறது அந்த கவிதை.
புலம்பெயர்தலும் ஊரிழத்தலும் உயிரை இழப்பதற்கு சமமானதாகவே மனிதன் உணர்கிறான் அவன் யாராக இருந்தாலும் சரி. வாழ்ந்த இடத்திலிருந்து வேலை விடயமாகவோ அல்லது பிற காரணங்களுக்கு வேறொரு இடத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருக்கும்போதே எப்போது வீடு திரும்புவோம் என மனதை அரிக்கும் அந்த உணர்வுக்கே நம்மால் பதில் சொல்ல முடியாத பொழுது ஊரிழத்தலையும் புலம்பெயர்தலையும் எப்படி கற்பனைக்குள் கொண்டு வர முடியும்?
நடைப்பிணமாக மட்டுமேவாழ்கிறேன் என எப்போதும் சொல்வார் என் ஈழத்து நண்பரொருவர். எப்போது தொடர்பெடுத்தாலும் ஈழத்தைப் பற்றி மட்டுமே பேசுவார் ஒழிய தான் இப்போது இருக்கிற எழில்மிகு ஐரோப்பிய நாடு குறித்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். நானாக கேட்டாலும் கூட அதைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதாகவே இருக்கும் அவரது பதில். பலவேளைகளில் எங்கு நமது வேர் பரப்பப்பட்டிருக்கிறதோ அதை நோக்கிதான் நமது உயிரும் மனதும் அலைந்துகொண்டிருக்கிறது சாகும் வரை.
சும்மா காற்றில்பற்றியா இந்தத் தீ மூண்டது?
இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
எத்தனை பேரைத் தீய்த்து
இந்த தீ வளர்த்தோம்.
எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
அணைய விடக்கூடாது
ஊதிக்கொண்டேயிரு.
பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்
ஊதுவதை நிறுத்தி விடாதே.
இந்தத் தீயின் சுவாலையிற்தான்
மண்தின்னிகள் மரணிக்கும்.
அரைநூற்றாண்டுக்கும் மேலாக நடந்து, நடந்து முடிந்ததாக அறிவிக்கப்பட்ட இன்றுவரை நடந்து கொண்டிருப்தாகவே அறியப்படும் தமிழீழத் தனியரசுக்கான போர் அவ்வளவு எளிதாக தொடங்கிவிடவில்லை. அது ஒரு விபத்தாகவும் நிகழ்ந்துவிடவும் இல்லை. மிகுந்த அவதானத்துடன் திட்டமிட்டு அப்போராட்டம் தொடங்கப்பட்டது.தொடங்கப்பட்ட வேகத்துடனே முடிந்து போன எத்தனையோ போராட்டங்கள் இருக்கின்றன. ஈழப்போர் அப்படியன்று. அதன் ஒவ்வொரு படிநிலைகளிலும் எண்ணற்ற உயிர்கள் விதைக்கப்பட்டு அதன் இருப்பு ஆலமரமாய் இருந்த காலம் ஒன்று இருந்தது. அதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விடவோ மறுத்துவிடவோ முடியாது.
நோயுண்ணும் உடல் நலித்தும்,
பேயுண்ணும் உணர்வொழித்தும்,
தாய் நிலத்தின் வேதனையை – எம்
தோள் தாங்காதிருக்கும் பாழ் வாழ்வு எங்களது என
வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?
கூடாது… கூடவே கூடாது.
ஈழத்தின் துயரத்தையும் அதை நோக்கிய தனது அக்கறையாகவே தனது பெரும்பாலான கவிதைகளைப் படைத்திருக்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை. ஒரு நாடு போரால் அவதியுறுகிற பொழுது போரில் ஈடுபடுகிற, ஈடுபாடு காட்டாத இரு தரப்பினரும் சேர்ந்தே துன்பங்களை துயரங்களை அனுபவிக்கின்றனர். வாழ்ந்து பழகிய முற்றம், நெருங்கிய உறவுகள், நண்பர்கள், இன்னபிறரின் துயரங்கள், அலைகழிப்புகள், கொடுமைகள், ஊர் ஊராய் அலைந்தது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதிகளானது, கடைசியில் மரணம் என அதிரவைக்கும் பதிவுகளோடுதான் ஈழத்தமிழனின் வாழ்வு…
கால நதிக்கரையில் கால் நனைத்தவாறு
நீள நடக்கின்றேன்.
கரையோரம் என் சுவடுகள் கிடக்கின்றன
கவிதைகளாக.
நாளாந்தமான புதிய விதிகளின்பிறப்பில்
என் கவிதைகளிலும் வேண்டியன நிலைக்க
வேண்டியன அழிந்தும்போக
எஞ்சியவற்றில் வாழ்வேன் நான்.
ஈழப்போரின் கடைசி அத்தியாயத்தில் முள்ளிவாய்க்காலில் சரணடந்ததாக நம்பப்படும் புதுவை இரத்தினதுரை என்ன ஆனார் என இன்றுவரை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் எஞ்சி நிற்கும் அவரது கவிதைகள் அவரை அடையாளப்படுத்தியடியே இருக்கின்றன.

முத்துக்குமரா! -புதுவை இரத்தினதுரை.

0 comments


முத்துக்குமரா!
முகம் தெரியாப்போதினிலும்
செத்துக்கிடக்கின்றாய் எமக்காக
எனவறிந்து
தேகம் பதறுகிறதே திருமகனே!
உந்தனது
ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே
நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ
உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி
நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில்
அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள்.
உன் மேனியில் மூண்ட நெருப்பு
உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார்
நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன்.
சின்ன அக்கினிக்குஞ்சே!
உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய்
அந்தச்சோதிப்பெருவெளிச்சம்
எமக்குச்சக்தி தரும்
வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும்.
உன் இறுதி மூச்சு
புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும்.
எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி
உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது.
தம்பி!
வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன்.
நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல
எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார்
இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன்.
உன் குரலைக் கேட்கிறேன்.
உன் மூச்சை உள் வாங்குகிறேன்.
இடையில் கடல்கடந்தும் வருகின்றது
உன் சிரிப்பின் ஓசை.
எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்?
கடலிலே அனுப்பி வையுங்கள்
அவன் பொன்மேனியை ஒருதரம் தழுவ,
ஈழத்தமிழரை சுமந்த இதயத்தை பார்க்க,
கண்மூடிக்கிடந்தாலும் அவன் காதோடு பேச.
மகனே!
நெருப்பெரியும் தேசத்தை எண்ணி
நெருப்பில் எரிந்தவனே !
உன்நெஞ்சின் உணர்வுகளை வாங்கி
இங்கே உயிர்கள் பிறக்கும்
உன் இறுதி மூச்சை உள்வாங்கி
உயிர்கள் சுவாசிக்கும்
நாளை உயிர் தரித்திருப்போம் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் அற்று வாழ்கின்றனர் ஈழத்தமிழர்
உயிர் அரியும் வலியில் ஈழம் துடிக்கின்றது
ஆயினும் பகைக்கு பணிவிடை செய்யோம் என்றபடி
நிமிர்ந்துள்ளோம் நாங்கள்.
முத்துக்குமார்,
நீ செத்துக்கிடக்கின்றாயாமே எமக்காக
யாராவது அவனின் புனித உடலை
எமக்கு பொதிசெய்து அனுப்பமாட்டீர்களா?
இந்த வீரமண்ணில் விதைப்பதற்காக
அந்த வித்துடல் வேர் பிடித்து
புதிய தலைமுறை ஒன்றைப் பிரசவிப்பதற்காக.
தம்பி!
வார்த்தை ஏதும் வரவில்லையே
உன்னை வனப்புச்செய்து வாசலில் வைப்பதற்காக
தமிழீழம் உனக்காக விழியுடைத்துப் பெருகிறது
உன் கடைசிக்கடிதத்தின் பொருள் உணர்ந்து
நெஞ்சுருகி உன்னைப்பாடுகின்றது தமிழீழத்தமிழ்.
நண்பனே!
முகம் தெரியாத எம்முத்துக்குமார்
உன்னை நெஞ்சில் வைத்து சத்தியம் செய்கின்றோம்.
நீ மூட்டிய சோதி நெருப்பு சும்மா அவியாது
விண் தொட எழும் – அந்த வெளிச்சத்தில்
நாங்கள் ஒளி பெறுவோம்.
என் பிரிய உறவே!
சென்று வருக
திரும்பி வராவிட்டாலும்
நன்றியென்ற ஓருணர்வை
நாம் சுமந்து நிற்கின்றோம்.
பிரிய தோழனே உனக்கு தமிழீழத்தின் வீரவணக்கம்
தமிழீழத்திலிருந்து புதுவை இரத்தினதுரை.


காலத்தின் குரலாக பேசும் புதுவை இரத்தினதுரை.!

0 comments
“புதுவை இரத்தினதுரையின் படைப்பிலக்கியம், தமிழீழ விடுதலைப் போராடடத்திற்கு ஒரு உந்துசக்தியாக இருக்கிறது. கவிதை உலகில் போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பெருமை அவரைச் சாரும் .”
– தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்கள்

வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு.
சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம்.
விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயணித்தன.
யாழ்ப்பாணத்தில் பதுங்குகுழி வாழ்க்கைக்கும் அவரது கவிதைகள் பழக்கமாயின. விமானத்தின் குண்டு வீச்சுக்களும், பீரங்கிகளின் எறிகணை வீச்சுக்களும் அவரது கவிதைப் பொருளாயின. அவற்றின் படுகொலை வீச்சுக்கண்டு வெம்பி, வெடித்து கோபம் கொண்டு சாபமிட்டன.
யாழ்ப்பாணத்தைவிட்டு விடுதலைப்போரியல் தலைமை இடம்பெயர்ந்த போது புதுவை அண்ணரின் கவிதைகளும் அழுதபடியே சேர்ந்துவந்தன. ஆனால் நம்பிக்கை தளராத வரிகளுடன் விடுதலைக்கனவு குலையாத பாடல்களாய்.
பொருட்தடை, மருந்துத்தடை, போக்குவரத்துத்தடையென எல்லாத் தடையினுள்ளும் கிடந்தழுந்திய எம்மக்களுடன் சேர்ந்திருந்தன புதுவை அண்ணரின் கவிதைகள். வன்னியினுள்ளே நடந்தேறிய விடுதலை வேள்வியில் சேர்ந்தொலித்தன அவரது பாடல்களும்.
இராணுவக் கொலை வலயத்தினுள் பயணிக்கும் இளம் வீரருடன் சேர்ந்து புதுவை அண்ணரின் பாடல்களும் பயணித்தன. எம்மக்களுக்கு ஆறுதல் சொல்லின…… போரிட அழைத்தன….. போரிட்டன….. வெற்றிச் செய்திகளும் சொல்லின…. விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ கட்டமைப்பு, எமது தேசத்து நிலபுலங்கள், மக்களது கலாச்சார வாழ்வியல்கள், தமிழீழப் பெண்களது புரட்சிகர போரியல், சர்வதேச அரசியலுடனான எம்மின வாழ்வு என புதுவை அண்ணரது படைப்புக்கள் பன்முகப்பட்ட வாசிப்பனுபவத்தை தருபவை.
புதுவை அண்ணரது கவிதைகள், பாடல்கள் பற்றி எம்முள்ளே பேசப்படும் வேளைகளில் “காலத்தின் குரல்கள்” என்று கூறுவேன். எமது விடுதலைப்போர் கடந்து வந்த பாதையின் வீரமும், சோகமும், கோபமும், மகிழ்ச்சியும், பெருமிதமுமென மாறி மாறிய உணர்வுகளைக் கொண்ட காலங்களைக் கடந்துள்ளோம். அந்தக்கால உணர்வுகளின் குரலாக புதுவை அண்ணரின் படைப்புக்கள் பதிவு பெற்றுள்ளன என்பது எனது கருத்து.
புதுவை அண்ணருக்கு வாய்த்துள்ள அற்புதமான கவி ஆற்றலும், அனாசயமான சொல் வளமும் அவரை பெரும் கவிஞர்களது வரிசையில் சேர்த்துள்ளது. இவற்றுடன் அவர் தன்னை இணைத்துக் கொண்ட இல்டசிய வாழ்வும் அவரது படைப்புக்களில் சேர்ந்துள்ளது. இவையே அவரை “காலத்தின் குரலாகப் பேசும்” கவிஞராக ஆக்கியது எனலாம்.
இங்கு நூலுருப் பெறும் உலைக்களம் அவ்வகையில் எழுந்த உணர்வு வரிகளின் தொகுப்பு. அந்தந்த காலத்தய விடுதலைப் போரின் களநிலைகளைத் தழுவிய உணர்வின் குரல்கள்.
இந்த உலைக்களத்தின் சிறப்பு என நான் பார்ப்பது இது வெறும் புதுவை இரத்தினதுரை என்ற தனி ஒருவனின் உணர்வின் குரலாக மட்டும் அமைந்து விடாததுதான். மாறாக உலைக்களத்தை ஆழ்ந்து, விரும்பி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்திப் போகும் உணர்வுகளின் வெளிப்பாடுகளை அவற்றில் காணலாம். போராளி நிலையிலோ, பொதுமகனின் நிலையிலோ அல்லது படித்தவரின் நிலையிலோ, பாமரரின் நிலையிலோ எந்த நிலையில் நின்று பார்க்கும் போதும் அவரவரின் உணர்வின் வரிகளாக உலைக்களம் பொருந்தி வரும்.
ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதமென வர்ணிக்கும் விடுதலைப் போரியல் நடவடிக்கைகள் உலைக்களத்தில் பல இடங்களில் பேசப்பட்டுள்ளன. அந்நடவடிக்கைகளின் பின்னே உள்ள அர்ப்பணிப்புக்களையும், எம்மினத்தின் உணர்வுகளையும், அரசியல் அர்த்தங்களுடன் உலைக்களத்தில் பதிவாக்கியுள்ளார்.
எமது தலைவர் அவர்கள் உலைக்களத்தை ஒவ்வொரு வாரியாக ஏற்றி, இறக்கி, தணித்து வாசிக்கும் வேளையில் அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். சிலவேளைகளில் எனக்கென தனியாகக்கூட தலைவர் அவர்கள் வாசித்து காட்டியுள்ளார். தலைவர் அவர்கள் சிறந்த வாசகர் என்பதற்கு மேலாக உலைக்களத்தின் கருத்தோட்டத்தில் மீதான ஈர்ப்பே அதனை அவரை அப்படி வாசிக்க வைத்திருக்குமென நம்புகிறேன்.
“போர்க்கால இலக்கியத்திற்கு இலக்கணம் வகுத்த பெருமைக்குரியவர்” எனவும், “எம் விடுதலைப் போராட்ட வாழ்வையும், வரலாற்றையும் தமிழீழ இலக்கிய இயக்கத்திற்குள் முதன்மைப்படுத்தி தமிழ்த் தேசிய பிரக்ஞையை விழிப்புறச்செய்ய உழைத்தவர்.” எனவும் எம் தேசியத் தலைவர் அவர்களால் விதந்து பாராட்டுப்பெற்ற புதுவை அண்ணரைப் பற்றி நான் சொல்ல என்னதான் உள்ளது?
இலக்கிய வித்தகரும், பெரும் கவிஞருமான அவரது நூலுக்கு கருத்து எழுதுவதற்கு வாசகன் என்ற தகுதிநிலை போதுமெனக் கூறிய புதுவை அண்ணரது வார்த்தைக்கு கட்டுண்டு எழுதியுள்ளேன்.
எமது விடுதலைப்போர் எதிர்கால மாணவர்களுக்கான ஆய்வுப் பொருளாகும் காலம் வரும். அவ்வேளையில் விடுதலைப் போராட்டம் கடந்துவந்த வரலாற்றுப் பாதையின் போக்குகளையும், இந்த போருடன் வாழ்ந்த மானிடரின் மன உணர்வுகளையும், சொல்லும் பெட்டகமாக உலைக்களம் திகழும் என நம்புகிறேன்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அன்புடன்
ச.பொட்டு அம்மான்
பொறுப்பாளர்
புலனாய்வுத் துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்

புதுவையின் இறுதிக்குரல் முள்ளிவாய்க்காலில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி !

0 comments



2009-04-15 அன்று ஈழக்கவி புதுவை இரத்தினதுரை தமிழ்நாட்டை விழித்து பாடிய கவி இது –
இனி அழக் கண்ணீர் இல்லை !
 


ஈழக்கவி புதுவை இரத்தினதுரை கவிதை வரிகள் -காணொளிகள்

0 comments









போராடும் இனத்தின் கவிஞன் போராட்டத்துடனேயே இருப்பான்

0 comments

பிரபாகரன் அந்தாதி - 12

0 comments


தாழ்ந்தோர்க்(கு) உதவ தகையில்லாச் சீனரும்
பாழ்மன பாகிசுத் தானியரும் –சூழ்ந்தாங்(கு)
உருசிய நாடும் உகந்தவற்றைச் சீய
மிருகத்திற்(கு) ஈவும் விரைந்து! (111)

சீயம் –சிங்கம்.

விரைந்து படையணியை வீணர்க்(கு) உதவும்
திரைமறைவில் இந்திய தேயம் –புரைநெஞ்சர்*
முன்நின்று போர்புரிய முப்படைக்கும் ஆனவரை
பின்நின்(று) உதவும் பெரிது! (112)

புரைநெஞ்சர் –குற்றமுடைய நெஞ்சை உடையவர் (சிங்களரைக் குறித்தது)

பெருவான் வழியே பெரும்போர் புரிந்து
கருமா மனத்தர் களித்தார் –தரையில்
எதிர்நின்று தோற்றங்(கு) எமன்கண்ட தாலே
விதிர்த்திட்ட* தோளர் விரைந்து! (113)

விதிர்த்தல் –நடுங்குதல்.

விரையும் உலங்கூர்தி வீசிடும் குண்டால்
தரையில் தமிழர் தகர்வார் –வரைவில்*
அழிவைப் புரிந்தும் அடங்காக் கொடியர்
பொழிவார் நெடுவான் புகுந்து! (114)

வரைவில் –முடிவில்லாத.

புகலிடம் இன்றிப் புழுங்கிப் புறம்போய்
தகைசால் தமிழிர் தவிக்க –பகைவர்
நவை*யின் வழியினையே நத்தி*க் குமை*செய்(து)
உவப்பார் அவரை ஒழித்து! (115)

நவை –குற்றம்; நத்துதல் –விரும்புதல்; குமை –துன்பம்.

ஒதுங்கிடம் ஆங்கேஎம் ஒண்டமிழர்க்(கு) இல்லை
பதுங்கு குழியில் படுப்பார் –பிதுங்கிக்
குடல்சரிய சாதற்குக் குண்டள்ளி வீசும்
நெடுவானில் வானூர்தி நின்று! (116)

நின்றெதிர்த்துப் போரிடும் நெஞ்சுரம் இல்லாதார்
சென்றுவான் ஊர்திவழி சீரழித்தார் –பொன்றுவான்*
ஈழத் தமிழனதில் இன்பம் அடைந்திடுவான்
சீய*த் தலைவன் சிரித்து! (117)

பொன்றுதல் –இறத்தல், அழிதல்; சீயம் –சிங்கம்.

சிரித்த பிழைப்புப் பிழைப்போர்* சிதற
விரையும் கரும்புலியர் வீச்சில் –எரியும்
அனுரா தபுரம்* அழியத் துடித்தார்
இனியாது செய்குவம் என்று! (118)

என்று முடியுமோ ஈழத் தவர்துயர்
அன்று பிறக்கும் அமைதியிதை –நன்குணராச்
சிங்களர்க்கே நானிலமும் சென்றுதவ போர்க்களத்தில்
எங்களவர்க்(கு) உற்றதுணை யார்? (119)

யாதோர் துணையுமின்றி ஆங்குநீ போர்செய்யத்
தீதோர் வடிவான சிங்களர் –சூதோர்ந்(து)
உனைக்கொன்ற தாய்ச்சொல்லி ஊருக்(கு) உரைத்தார்
நினைக்கப் பொறுக்குதில்லை நெஞ்சு! (120)
- அகரம் அமுதா