Monday, March 21, 2011

அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே!

0 comments
இன்று (22.03.2011)



அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே!


நேரிசை வெண்பா

அன்னையே! நாம்வணங்கும் ஆலயமே! அன்புருவே!
நின்னையே எந்நாளும்; நெஞ்சினில் – உன்னத
தெய்வமாய்த் தாங்கித் திருவிளக் கேற்றினோம்
செய்யதிரு சேயோன் செயல்!

பருத்தித் துறையெனும் பாங்கான ஊரில்
மருவுதமிழ் மேவு மனையாம் – தருமம்
இயற்றுநல் மெத்தைவீட் டில்லறம் தன்னில்
வியத்தகு சேயானாய் வீறு!

வெற்றித் திருநகராம் வேலவன் வாழ்விடமாம்
கற்றவர் சார்பு கவின்பொழில் – நற்றுயர்
வேதம் ஒலித்திடு வீதி; நிறைமனைப்
பாதம் பதித்தாய் பயன்!

நாற்குணமும் நன்றே நடைபயிலச் செல்வந்த
மேற்குடியிற் றோன்றிடு மெல்லியாய் – சாற்று
கரும்பென இன்புற்ற காரிகையாம் நின்னை
விரும்பியே கைப்பிடித்தார் வேல்!

இல்லற வாழ்வெனும் இன்புறு சோலையில்
நல்லறம் காத்து நயப்புடன் – சொல்லற
நீறுடன் குங்குமம் நெற்றியில் நீக்கமற
வீறுடன் ஈன்றாய்நல் வீரன்!

தனையனைத் தேடியே சர்க்காரும் தோன்றத்
தனியளாய்ப் போராட்டம் செய்தீர் – நனிவுயர்
செல்வனும் ஞானத்தாற் கண்ணுற்றான் விட்டகன்றான்
பல்லாண்டு நீக்கினான் பற்று!

தமிழினத்தின் தாயே! தவத்தின் பயனே!
கமழும் புகழ்கரி காலன் – அமிழ்தன்
முருகனைத் தாங்கிய மூலம்தான் நீயே
அருமகனைத் தேடுகிறோம் ஆய்ந்து!

தற்கொடை செய்தாரெம் சந்தன மேனியர்
அற்புதமே ஆற்றினார் அவ்வண்ணம் – பொற்றுயர்
தாயே விலையிலாத் தானமாய் நின்னுயிர்
ஈய்ந்தாய் உணர்வார் எவர்?

போராட்டம் செய்தோமே புன்மைகள் நீங்கிட
பாராளு முன்றிலிலும் பேசினோமே – சீராளத்
தாயுந்தன் வாழ்விற்காய்த் தட்டித்தான் கேட்டோமா?
வாயுரைப்பில் வல்லவரே வார்!

கொடியவரின் வஞ்சனையாற் கொண்டவனை நீங்கிக்
கடிதெனவே நோயுற்ற காலை – மடிதனில்
தாங்கிடப் பிள்ளையின்றித் தாகத்தில் வெந்தீரே
ஏங்கினார் சேய்களும் இங்கு!

அம்மா! நீயின்றி ஆதவன்தான் ஈங்கேது?
இம்மா நிலத்தின் இணையிலாச் – செம்மலவன்
தோற்றமே ஈழத்தின் தொன்மை வரலாறு
ஆற்றலும் ஆன்றோன் அவன்!

கொற்றவனைப் பெற்றவளே! கோப்பெருந் தேவியே!
நற்றுணையாய் நிற்பாய் நமதினத்தைச் – சுற்றியுள்ள
வஞ்சம் அகற்றும் வலிமை தருவாயே
அஞ்சுதல் இல்லா அணங்கு!

( தேசியத் தலைவராம் எங்கள் கரிகாலனை எம்மினத்திற்காய் ஈன்று புறம் தந்த அன்னை பார்வதி அம்மாளின் முப்பத்தோராவது நினைவு நாளையொட்டி வெண்பாவினாலான இப்பாடல் வெளியிடப்படுகிறது)

-கனடாவிலிருந்து பவித்திரா-

Monday, February 21, 2011

ஒரு புலி வீரனின் கவித் தீ..

0 comments
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghx9j5ThichYL1Cm9x4CAd2RPkDrDq7s8DN6jUNfGX54hPKwbi6WGAqh1OMJJP2Pw3reXxGA3J8qI5lPvkO1ad59K4UMBLKcsZO7YDm9H31a2vrab5z1fuOd1tX5Ighm7e5PlrFwZZyu2d/s1600/kavitee.jpg
உன் மகன்
தமிழீழ விடுதலைப் புலி வீரன்…..

பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால்
பார்வதியானாளா..?
ஐயாயிரம் ஆண்டு தமிழன் வாழ்வை
அழித்தெழுதிய ஆற்றல் வீரன்
பிரபாகரனைப் பெற்றதால்
பார்போற்ற நின்றாளா..?

வீரத்தமிழன் வரலாறு செத்துப்போகா
தியாகத்தை எழுதிய புலிகள்
பாய்ந்தெழுந்த தாய் நிலமானதால்
புகழ்பெற நின்றாளா… ?

அன்று..

தாயிறந்த செய்தி கேட்டு
துறவியாய் தொலைந்த பட்டினத்தாரே
துடிதுடித்து ஓடிவந்தார்
தாய் படுத்த சுடலைக்கு..

நீ பெற்ற பிள்ளை..

மானமுள்ள தமிழனுக்கெல்லாம்
நீயே தாயென்று போற்றி..
இன்று
உன் பிள்ளைகள் உலக முழுதும்
உன் சவக்கட்டில் ஏந்தி
ஊர்வலமாய் போகக் கண்டான்
போய் வா தாயே..

தன்மானம் குலையா தலைமகன்
வேலுப்பிள்ளையுடன்
ஈழத் தமிழினத்துக்காய்
சிறை கிடந்த சீமாட்டி நீ..

நேற்று…

நீ உயிருடன் இருந்தாய்
உன் மகனைத்தேடி
உன் வீடு தட்டியது சிங்கள இராணுவம் !

இன்று…

உயிரிழந்து கிடக்கின்றாய்
உன் மகன் வருவானென்று
ஊர் முழுதும் தேடுகிறது சிங்கள இராணுவம்..!

நீ வாழ்ந்த வீட்டின்
மண்ணெடுத்து வணங்குவான்
இதயமுள்ள தென்னிலங்கை சிங்களன்..!

மகிந்தவுக்கு கம்பளம் விரிக்கும்
மன்மோகனின் இந்தியாவோ
நீ வந்தால் விமான நிலையத்தையே மூடும்.. !
தமிழ் வீரன் எங்கள் கருணாநிதி
நானில்லை ஜெயலலிதா என்று
கோடியாலுக்குள் ஓடி – உன்
விமானம் திரும்பிப் பறந்துவிட்டதாவென
ஓரக்கண்ணால் பார்ப்பார்…!

தள்ளாத வயதென்றாலும்
தன் நினைவிழந்து போனாலும்
உனக்கஞ்சும்
இந்திய மேலாண்மை..

நீ வாழ்ந்த வீடு கிடந்தால்
அங்கும் புலியொன்று பிறக்குமென்று
இடித்துத் தகர்த்தார் இழிஞர்..

தாயே..
ஏனென்று கேட்கிறாயா… ?

நிலத்தின் அடியில் கிடந்தாலும்..
மன்னர் முடியில் கிடந்தாலும்..
வைரம் வைரம்தான்..
நீ எங்கு கிடந்தாலும்
நீ… நீதான்…!
உனக்கிணையுண்டோ உலகில்..!

அம்மா உன் பயணம் ஆரம்பித்துவிட்டது..
அழிந்துபோன சங்கத்தமிழை
ஆக்கித்தந்த அரும்பெரும் பெருமாட்டி
போய் வா..!

ஊறணிச் சுடலையில் உன் தலையில்
சுள்ளென ஒரு நெருப்புச் சுடும்…
நீ மட்டும்
மறந்துவிடாதே…
நீ மட்டும்…
ஒரேயொரு நொடி திரும்பிப்பார்…
உன் மகன்
தன் கடன் முடித்திருப்பான்..

உனக்காக ஒரு சிலை ஊரில் எழும்..!
ஒரு முறை
அதை வந்து பார்…!

முந்தித்தவமிருந்து
முந்நூறு நாள் சுமந்து
அந்தி பகலாய் ஆதரித்த
எங்கள் அம்மா..
போய்வா…!

முன்னையிட்ட தீ முப்புரத்திலே..
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே..
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே..
நானுமிட்ட தீ
மூழ்க மூழ்கவே..

எங்கள் அம்மா – இது
அஞ்சலிப்பா அல்ல
ஒரு
புலி வீரனின்
கவித் தீ.. !

உன் மகன்
தமிழீழ விடுதலைப் புலி வீரன்.

அலைகள்

Sunday, February 20, 2011

என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!

0 comments
எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி
எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட
உலகந் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க - எமக்கு
ஒற்றைத் தலைவனை காலங் - கணித்துப் பெற்றவளே ;

சொந்தம் கடலென மண் நிறைந்தும்
மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி
நிராகரித்த வஞ்சகத்தார் - சுவாசித்த சிறு மூச்சும்
வேண்டாமென விட்டவளே ;

உள் சுட்ட வடுக்கள் பல யிருக்க
இன்னும் தீராத ஏக்கம் வலி வலிக்க
போறாத காலம்பூண்டு - பக்கவாதம் தின்றுத் தீர்க்க
சிங்களனின் சிறையால் கூட செத்தவளே; சீவனைத் தொலைத்தவளே;

கட்டிய கணவன் மடியில் தாங்க
பெற்ற பிள்ளை வீரத் தோளில் சுமக்க
உதிராத பூவும் அழிக்காத பொட்டுமாய்
உறவுகளின் கண்ணீரில் போறவளே ; தனியாக போனாயோ?????

கொல்லிவைக்க நாங்களிருக்கோம்
சந்தனத்தால் சேர்த்து எரிப்போம்
தமிழால் , கவியால், தீ மூட்டுவோம்; போனபின்னே
எல்லாம் செய்வோம் - இருந்தபோது விலகி நின்றோமே; மன்னிப்பாயா????

கட்சி புகழ் வாசனை ஆச்சி
நாற்காலி ஆசை உயிர்வரை பரவிப் போச்சி
உறவெல்லாம் அங்கே இறந்துக்கிடந்தும் – வெள்ளைச்சட்டையே பெருசாச்சி

வெட்கத்தால் அழுகின்றோம், வாழும் வரை தலைக் கவிழ்கின்றோம்;


ஒரு சொட்டுக் கண்ணீரை யேனும் –

உன் அஞ்சலிக்காய் விடுகின்றோம்!!

-----------
வித்யாசாகர்

வீரத்தின் விளை நிலம் விண் நோக்கி போனதுமேன்?

0 comments
அன்னையே தாயே
அழியா புகழ் கொண்ட அற்புதமே!
ஈழத்தின் புள்ளியை பூமிப்பந்தில்
ஈட்டி கொண்டு
எழுத வைத்த ஈகைத்தாயே.

வீரத்தின் விளை நிலமே
விண்ணையும் விஞ்சிய
வீரனை விடுதலைக்கு
ஈன்றெடுத்த வேங்கைத்தாயே,

பாவத்தை அழிக்க வந்த பரவசத்தை
பார் போற்ற பிறப்பெடுத்து
பாலூட்டி வளர்த்த பார்வதியே!

பொக்கிஷமே புண்ணியமே
காலத்தால் அழியாத காவலனாம்
சூரியனை பெற்றெடுத்த
கண்ணகியே,, சொர்ணத்தாயே,,,

நீரையும் நெருப்பையும் நிழலாக்கி
நிமிர்ந்து நின்ற நாயகியே,

சோலை விருட்சம் அம்மா-நீ
சொந்தம் நாங்கள்
துயரம் கண்டாயோ-எம்
நெஞ்சு கனக்க
நிலையகன்று சென்றனையோ,

காற்றானாய்
உன் கண்மணிகள்
கண்ணில் நீரை இறைத்து நின்றோம்-நீ
பாலூட்டி வளர்த்த
எம் தலைவன் பரிதவிப்பான்-அதை
மறந்தாயோ?,

நேற்றோடு இன்று நாள் நகரும்-உன்
நினைவுகள்
என்றும் சங்கமிக்கும்,


கனகதரன்,

Sunday, February 13, 2011

ராஜதந்திர முச்சந்தியில் தீமூட்டியவன் தியாகச்சுடர் முருகதாசன்

0 comments
ராஜதந்திரமுச்சந்தியில் அவன்
தீமூட்டி எரிந்தபொழுதில் பெரிதாக
எதுவும் நடந்துவிடவில்லை.
எரிந்து கருகிய அவனின் உடல்
கடந்தே உலகசமாதானம் தன் நுனிநாக்கு
உச்சரிப்புகளை சொல்லி சப்புக்கொட்டிநின்றது.

தாய்நிலம் மீதான தணியாத தாகமும்
பக்கத்து மனிதன்மீதான பற்றுதலால் அவன்
பெருநெருப்பை மூட்டி அவிந்தபொழுதினில்
நாகரீகபெருமான்கள் அவமானத்தீக்கோழிகளாய்
ஜெனீவா மன்றத்துள் முகம்புதைத்துநின்றனர்.

$புதுமாத்தளன் கடந்து இனஅழிப்பு
தொடர்கையில் எரிந்தபடி முருகதாசன்
‘நிறுத்தவேண்டும் உலகம் இதை’ என்றான்.
ஒருகால் முறிந்த கதிரை மட்டுமே அவனின்
சுயதகனம் பார்த்து விக்கித்துநின்றது.- மற்றப்படி
அவனின் எரிந்த உடல்கடந்தே எல்லோரும்
தம்தம் அலுவல்களுக்காய் பறந்தனர்.- எல்லோருக்கும்
உலக நாகரீகம் மீட்பதிலும்
கரைஒதுங்கும் மீன்இனம் காப்பதிலும்
அன்டார்ட்டிக்காவில் பனிகரைவதிலும்
ஈரானின் அணுஉலையை மூடும் மும்முரத்திலுமெ
நேரம் ஓடியது.-முருகதாசன் உடல்கருகி
ஓரத்தில் கிடந்தான்.

எம்மைத்தவிர வேறு எவரையுமே அந்த
இளைஞனின் ஆகுதி உலுக்கியதாய்
தெரியவில்லை.-இன்றும் கூட..!
நாமும் என்ன செய்தோம்.-கூடினோம்.
ஆர்ப்பரித்தோம்.திரண்டோம்.

ஓன்றுகூடி அவன் உடலை எரித்து இப்போ
ஓன்றும் நடவாதது போலவே நடக்கிறோம்.
என் தந்தை தாய்..உன் சகோதரர் உற்றார் என
அனைவருக்குமாக எரிந்தவன் முருகதாசன்.
ஏதொஒரு அலுவலகத்தில் எஞ்சியநாட்களை
வேலைசெய்து குடும்பம்குட்டி என
வுhழ்ந்துவிட்டுப்போயிருக்கலாம் அவனும்.

ஆயினும் உலகத்துஊர் கூடிநின்று எம்
தாய்நிலம் எரித்து எம் தேசத்து ப10க்களை
தணலாக்கி வெறியாட்டம் போட்ட
பொழுதினில் தன் உடல்கொழுத்தி அதனுள்
உலகத்து மனச்சாட்சியை உலுக்கமுயன்றவன்.

ஆனந்தபுரத்திலிருந்தும் அடுத்த முனையில்
சாளையிலிருந்தும் இன்னொரு தலப்பில்
இரணைப்பாலையில் இருந்தும்
நந்திக்கடலிருந்தும் மெதுமெதுவாய்
ஒருகூட்டுப்படுகொலைக்கு உலகம் தயாரான
பொழுதினில் அதைத்தடுக்க கடிதம் எழுதி
வைத்துவிட்டு உடல்கருகிப்போன ஒருவனை
எந்தநாதியும் ஏன்என்று திரும்பிப்பார்க்கவில்லை.

ஆனாலும் நாம் அப்படியே விட்டுவிட்டு
அடுத்தவேலைக்காக பறக்கமுடியாது.
எங்களுக்காய் எரிந்தவனுக்கு என்னென்று
நன்றி நினைவுகூர்வோம்.-அவனின் உடல்எரிந்த
சாம்பலை ஊதிவிட்டு அடுத்தவருடம் அவன்
நினைவுவரும்வரைக்கும் ஓய்திருக்கபோகிறோமா??
அந்த இளைஞனின் நினைவை எம்
நெஞ்சுள் பதிவோம்.-எம் அடுத்த
தலைமுறைக்கும் சொல்லிவைப்போம்.

முருகதாசன்
உன்னை எழுதவும் பாடவும் எமக்கிருக்கும்
வார்த்தைகளில் எதுவுமேயில்லை.
உன்னை வணங்குகிறோம்.-நீ
எரிந்தபொழுதினில் எம்நெஞ்சில்பட்ட
சுடுதழும்பை ஆறவிடாமல் வன்மம் வளர்ப்போம்.
காலம் எவ்வளவு கடந்தாலும் அனலாடிய உன்
ஆன்மத்தை அதனிலும் உயர்ந்த உன் ஈகத்தை
எம்முள் நிரந்தரமாய் படிந்துவிட்ட காயத்தை
எதையுமே நாம் மறவோம்.
நீ நினைத்த விடுதலையை நாளைப்பொழுது
மீட்டுவரும்.நம்பிக்கையோடு இரு.

ச.ச.முத்து

Wednesday, January 5, 2011

தெய்வ மகனைத் திருநாட்டிற்குத் தந்தவரே!

1 comments
தை 6ம் நாள் மாதந்தை திரு வேலுப்பிள்ளை அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாளாகும். அதன் பொருட்டு கனடாவிலிருந்து பவித்திரா எழுதிய கவிதை..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWYd5SuJ_VN9mR4H9_RQVMnBq8HrFifSOgrK4dKCnpIGaQu1DADMLg9jSOn6tjmaN5OaIEvh0tQlcWceqVdKY5UxU3msblGAHQiud9_aVbGnmNgIjRmyheK-uVCKVizgtDH-vBX-kHa_Z8/s1600/vel1.jpg
ஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய்
அவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம்
வேண்டித்தான் சென்றீரே விலையில் மாண்பே
விடிவெமக்குத் தூரமில்லை விதியை நொந்தோம்
தாண்டிநாமும் செல்கின்றோம் தடைகள் நீக்கி
சார்புநெறி வகுத்திங்கு இயங்கு காலை
தூண்டிநிற்கும் நல்லறிவினைத் துணையாய்க்; கொண்டு
தூயதிரு வடிபோற்றிப் புனைந்தேன் பாடல்.

கலைமகளாம் எம்தெய்வம் கல்விக்கரசி யென்றும்
களிப்புடனே வீணையிற் கவிமழை பொழிந்திட
அலைமகளாள் நிலம்நோக்கி அகம்குளிர்ந்து நீரடித்து
ஆர்ப்பரிப்பிற்; றிளைத்து அணைத்து மகிழ்ந்திட
மலைமகளாள் மங்கலக் குங்குமமும் மனையும்
மாண்புடைத் திடமும் மேன்மையும் அளித்திட
விலையிலா வீரத்தின் விளைநிலமாய் விளங்கு
வள்ளல்நிறை பதியாம் வல்வைதந்த விறலே!

திருவேங்கடம் வேலுப்பிள் ளையெனத் திகழ்ந்து
சீர்மையுற வாழ்வினைச் செவ்வென நடத்தி
அரும்பெரும் சதிர்தனை அவனியொடு பொருதிய
ஆளுமைப் பேற்றின் அறிவுடை மூலமே!
திருவாசகம் தேவாரம் திருப்பல் லாண்டுநாளும்
தேனாக இசைத்திடு திருமனைத் தலையே!
தருமத்தின் இருப்பே! சான்றுயர் பெரியோனே!
தலைதாழ்த் தியும்தாள் பற்றினோம் ஐயா!

வெண்ணிற ஆடையில் விளங்கு நீறணிந்து
வேதாகம வழிகளில் விற்பனனாய் நின்று
கண்ணியமாய்க் கோவில்செல் காட்சிதனை ஊரார்
கண்களிற் பதித்துக் கையசைத்துக் களிப்புறுவர்
திண்ணிய ஞானத்தில் தெளிந்த சிந்தையில்
தேசுறு தோற்றத்தில் திகழ்திரு வேங்கடரே!
ஏண்ணத்தில் நிறைந்தீர்கள் இவ்வுல குள்ளவரை
இறவாத் தமிழோடு எஞ்ஞான்றும் கலந்திருப்பீh!

நிர்வாக சேவையிற் காணியதி காரியாய்
நீடுபணியாற் றியேழை நெஞ்சங்களை வென்றீர்!
கருமத்திற் கண்ணாகக் கடமை வீரனாகக்
கருணையின் வடிவாக எளிமையின் இருப்பாக
உரையிலே உண்மையும் உறுதியும் உவப்பும்
ஒன்றாகப் பிணைந்து ஒழுக்கத்தை ஓம்பும்.
கரையிட்ட வேட்டியும் காக்கிக்காற் சட்டையும்
கசடறக் கற்றோர் தகமையைக் காட்டும்!

பார்வதி மணாளனே! பக்தியின் திருவுருவே!
பாரதத்;; தலமாம் சிதம்பர வளர்ச்சிக்காய்
ஆர்க்குமிலா உள்ளத்தில் வள்ளலாய் விளங்கி
ஈய்ந்தீரே நிலபுலன் இமயமென உயர்ந்தீரே!
நேர்மையில் நெஞ்சுரத்தில் நின்மகன் நிர்மலனின்
நீண்ட வரலாற்றிற்; பிணைந்த பெருந்தகையே!
பார்போற்றும் பகலவன் கரிகாலன் சேயோனைப்
பெற்றதனாற் சிவனென்றே உமைநா மறிந்தோம்!

தந்தையே! ஏந்தைக்கு நிகரான சான்றோனே!
தானையிற் தனையனுடன் சார்ந்தி ருந்து
முந்திச்செய் தவப்பேறால் ஈன்று புறம்தந்த
முதல்வன்தன் திறமைகளை மெச்சி மகிழ்ந்தீரே!
கந்தகச் சூழலிலும் கலங்கா உள்ளத்தில்
கயவர் முன்சென்று தந்தையென விளித்தீரே!
அந்திமப் பொழுதினிலும் அடங்காப் புலியென
அரசினர்க்குப் பணியாது இன்னுயிர் துறந்தீரே!

வெற்றித் திருமகன் வகுத்த பாதையில்
வீறுடன் தமிழினம் ஏழுந்து நிற்கிறது!
பற்றியுள்ள பகைநீக்கப் புலம்பெயர் இளந்தலை
போராடி நிமிர்கிறார் புறப்படுவார் தாயகம்!
கற்றிடும் கல்வியெலாம் காணும் ஈழத்தின்
கவினுறு வளர்ச்சிக்குக் கொடையென அளிப்பரே!
உற்ற துணையென உண்மையில் திண்மையில்
உழைத்திட என்றும் வாழ்த்தி நிற்பீரே!

தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே!
தேடுகிறோம் செல்வனை! தூதுநீர் செல்வீரே!
பையவே வாழ்விடம் சென்றங்கு பரிதியிடம்
பக்குவமாய் எடுத்துரைத்து விரைந்திடச் செய்திடுக!
ஐயஎம் விடுதலைக்காய் ஆன்றவும் குடும்பத்தின்
ஈகையை ஒருபோதும் உள்ளத்தில் மறவோம்
வையகத்தில் நின்பெருமை வார்த்தையில் நிறைவுறா
வானகத்திலும் வியத்தகு வாழ்வினையே பெறுவீர்!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix9z_vMZSkRGi2V5y7wYa6C3RLtyToCw9L3ppLnoaoDAEZhMKBDVri4Z2V7OLdTy0yfQz44KOJHayDMfIQy-80kE3y7Bc27Ll6t4kIUt5zGb4J22ca5Q_h3Gz0KaTkeeCLe5cPhUydmvof/s1600/vel2.jpg
கனடாவிலிருந்து பவித்திரா
அலைகள்

Monday, January 3, 2011

என் செல்வமே உறங்கு.. உன் அண்ணன் இன்னும் சாகவில்லை….!

1 comments
http://www.alaikal.com/news/wp-content/kavi-flash.jpgஅன்புத்தங்கையே இசைப்பிரியாவே..
உன் உரிந்தமேனியைக் காட்டி
உழுத்துப் போன உலகம்
போர்க்குற்றம் பேச வந்திருக்கிறது..
கோபப்படாதே என்
குலக்கொழுந்தே கொஞ்சம் கேள்..!

என் இரத்தத்தின் இரத்தமே..
என் தமிழ் உதிரக்கொடியில்
ஒட்டிப் பிறந்த ஒரேயொரு உறவே..!

உன் மார்பகங்களை விலத்தி…
பெண்குறியை மூடும் ஆடையை நீக்கி
சிங்கள இராணுவப் பேய் முகர்ந்தபோது.. நீ
பிணமாய்க்கிடந்தாய்…
என் தங்கையே
பிணத்தைப் புணரும்
சிங்களப் பேய்களை
இரத்தம் வழியும் கண்களால்
பார்த்துக் கொண்டிருக்கிறான்..
உன் அண்ணன்..
தாயே
இதுவா பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ?
இதைக்காட்டியா யுத்தக் குற்றத்திற்கு
தீர்ப்பெழுதப் போகிறான்..?

அம்மா அன்று
தமிழ்த்தாயை உருவமாய் வரைந்தோம்
ஐம்பெரும் காவியங்களை அவள்
ஆபரணமாய் மாட்டினோம்.
அது தெரியாது..
நாம் போற்றி வளர்த்த தமிழ்த்தாய்
எங்கே என்பார் மூடர்கள்..
தாயே..
அது நீதான் என்பதை
இன்றுவரை அறியான் நம்
தமிழ் மூடன்..!
தாயே இன்று
நீ கிடக்கும் கோலமே
என்னைப் பெற்றாளே அந்தத்
தமிழ்த்தாய்
அவள் கிடக்கும் கோலம் அம்மா..

குழந்தை பெற்ற வலி மாறாத
உன் புண்ணான உடலை
குதறிய நாய்களை
மறக்கச் சொல்கிறான்..
அவனுடன் உறவு கொள்வதே
அபிவிருத்திக்கு ஒரே வழி என்கிறான்
என் இனத்தில் பிறந்த
தேர்தல் நாய்..

என் உடன்பிறப்பே..
உதிரத்தின் உதிரமே உன்
உடலம் கிடக்கும் காட்சியைப்
பார்த்த அண்ணன்
உன்னை அழித்தவன் தரும்
பாயில் படுத்துறங்குவானா ?
எண்ணிப்பார்…?

தமிழ் தமிழென முழங்கும்
தமிழகத்து தறுதலைகளை
அண்ணாவென நம்பி
அலறினாயே
உன் குரல் கேட்டு
கடவுளே ஓடிப் போனான்
ஈழத்தை விட்டு..
தெருவுக்கு தெரு வைப்பாட்டி வைத்து
தினமொரு கதை பேசுவோனால்
வேறென்ன முடியும் தாயே..
தூ..
வேண்டாம் விடு
இதைவிட வேசி வீடு போய்
விடுதலை கேட்கலாம் தாயே..

கரையற்ற கடலைப் பார்த்து
நம்பிக்கை குலைந்து கலகம் செய்த
கொலம்பஸ் கப்பலில் பயணித்த
கோழை மாலுமிகள் போல் இன்று
நம்மினத்திலும் மூடர்கள் மலிந்தனர்
அதுதான்
உன் மரணம் பார்த்தபின்னும் தன்
கடமை உணராது..
ஆளையாள் அடிபடுகிறான்
அடுத்த கப்பலையும் ஆழ்கடலில்
தாழ்க்க முயல்கிறான்..

இதைப்பார்த்த மற்றவன்
இப்படியும் ஓர் இனமென்கிறான்..
இனியென்ன என்ற
இழவு விழுந்த கேள்வியையே
இருபத்து நாலு மணிநேரமும்
ஓய்வின்றிக் கேட்கிறான்..

உன் முகத்தைப் பார்த்த அண்ணன்
உள்ளத்தில் என்ன பதில் வரும்..
தாயே உன் பிணத்தை விற்று
தமிழனுக்கு ஒரு விடிவென்றால்
ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும்
அந்த விடிவு
வேண்டாம் தாயே..!
உன்னை விற்று விடிவு பேசும்
நாயின் படலைக்கு உன்
அண்ணன் போனால்
ஒரு வேசி மகன் செத்துவிட்டானென்று
அவன் பிணத்தை
வீதியில் போட்டு கொழுத்து தாயே !

மானமுள்ள ஒவ்வொரு அண்ணனுக்கும்
இசைப்பிரியா தங்கை..!
மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும்
இசைப்பிரியா தாய்..!
மானமுள்ள தமிழினத்தின்
ஒரேயொரு தேசியக் கொள்கை
இசைப்பிரியா.. !
எங்கள் தேசியக் கொடியின் தேவதை
இசைப்பிரியா..
தங்கையே..!
அநாதையாய் கிடக்கும்
உன் பூவுடலைத் தூக்கி
ஐயோ என் தங்கையே..! என்று
அழுதபடி
கொள்ளி வைக்கிறேன்..
தாயே என்னை நம்பு
தாயே !
என் தங்கையே.. !
உன் பூவுடல் நோகக்கூடாதென்று
வாழைத்தண்டில் வழத்தி
ஈழத்தமிழால் தீ மூட்டுகிறேன்..
என் செல்வமே உறங்கு.. உன்
அண்ணன் இன்னும்
சாகவில்லை….!

அண்ணன் 03.01.2011